அமைதிப்படை சொன்னதும் செய்ததும்!
ஹரிகிரட் சிங் தலைமையில் 54 Infantry Division 29/30 july 87#-ல் இலங்கைக்குப் புறப்படத் தயாரானது. இந்திய ராணுவத்திற்கு, இந்திய அரசு போட்ட உத்தரவில் சொல்லப்பட்ட வாசகங்கள் சிறப்பாக இருந்தது.
The Intervention in Sri Lanka page: 33-34ல் வெளியிடப்பட்ட அந்த உத்தரவின் தமிழாக்கம் இதோ...
இலங்கையில் தற்போதைய நிலைமை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனமான சிங்கள இனத்துக்கும், தமிழ் இனத்துக்கும் இடையே தீராத மோதல்கள் உருவாகி வருகின்றன. அந்த மோதல்கள் பெரிய அளவில் ரத்தம் சிந்த வைத்திருக்கின்றன. ஸ்ரீலங்கா நம் அண்டை நாடு. ராஜிய அடிப்படையில் நமக்கு முக்கியமான நாடு. அங்கே நிலையற்ற ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது. அது இந்தியாவை மட்டும் பாதிக்கக்கூடியதாக இல்லாமல், தெற்காசியாவையே பாதிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். அதனால் இந்திய, இலங்கை அரசாங்கங்கள் ஓர் அமைதித் தீர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை, பேச்சுவார்த்தைகள் மூலம் கண்டறியத்தக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே அவர்களும் வெற்றியை ஈட்டி உள்ளனர். ஒட்டுமொத்த இலங்கையில் அமைதியையும், வளமான வாழ்வையும் கொணர்வதற்கான ஓர் ஒப்பந்தம், உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மென்மையாகவும், வெற்றிகரமாகவும் நிறை வேற்றிட இலங்கை அரசு இந்திய ராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.
அதற்காகச் செல்லும் உங்கள் செயல், அர்ப்பணிப்புத் தன்மையோடு, உயர்ந்த தரத்தோடு, கட்டுப்பாட்டோடு, ஒற்றுமையுணர்வோடு, விருப்பு வெறுப்பின்றி ஆற்றப்பட வேண்டியதாகும். நம்முடைய அமைதிப்படையின் அளப்பரிய சேவையை -தொண்டை, அகிலமே ஆழ்ந்த கவனத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பணியில் நீங்கள் பெரும் பங்களிப்பைத் தரவேண்டியுள்ளது.
இந்த மாபெரும் கடமையைச் செய்துமுடிக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருவன:
1. The highest standards of personal discipline and Integrity
(மிக உயர்ந்த தரத்தின் அடிப் படையிலான தனிமனித ஒழுக்கம், ஒற்றுமை)
2. Tact and impartiality in dealing with various ethnic groups.
(பல்வேறுபட்ட இன மக்களிடை யே வேற்றுமை பாராட்டாத சமமான நோக்கு)
3. No harassment to the civilian population.
(பொதுமக்களுக்கு எந்த துன்பத் தையும் விளைவிக்காத தன்மை)
4. Respect for women, old people and children.
(பெண்களிடமும், பெரியோர்களிடமும், குழந்தைகளிடமும் மரியாதை வைத்து நடந்து கொள்ளுதல்)
5. No involvement in any local grouping/ politics
(எந்தக் குழுவோடும், எந்த அரசியல் சார்புள்ளவர்களோடும் சார்ந்து நிற்காதிருத்தல்)
6. Ensure Justice to all
(எல்லாத் தரப்புக்கும் நீதியை நிலைநாட்டுதல்)
7. Peace keeping Missions are not new to our army. we have been called upon to perform such duties on various occasions such as In Indo#China, Korea, Gaza, and Congo, our troops performed well and brought laurels to the Indian Army and the country.
(அமைதி காப்புப் பணி என்பது நமக்கு புதிதன்று. இத்தகைய பணிகளை மேற்கொள்ளு மாறு பல்வேறு காலகட்டங்களில் இந்தோசீனா, கொரியா, காசா மற்றும் காங்கோ நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக்கும் அழைக்கப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் நமது படை மிகச்சிறந்த முறையில் தனது கடமையை ஆற்றி, தனக்கும் (இந்தியப் படைக்கும்), இந்தியாவுக்கும் மாபெரும் புகழைத் தேடித் தந்திருக்கின்றது)
8. We have been called upon to fulfill a noble Mission in Sri Lanka and Let us do with restraint, compassion and in a humane manner, which our army has done in such circumstances.
(அத்தகைய மாபெரும் மாண்புமிக்க பணிக்காக -சேவைக்காக இலங்கை நம்மை அழைத்திருக்கிறது. அங்கேயும் மிகவும் பொறுமையோடு, மனித நேய அடைப்படையில் நமது ராணுவம் முன்னர்போலவே இப்போதும் கடமையாற்ற வேண்டும்)
இலங்கை கிளம்பிய இந்திய ராணுவத்துக்கு... அமைதிப்படைக்கு இப்படி ‘எட்டுக் கட்டளைகள்’ போட்டது இந்திய அரசு. இந்தக் கட்டளைகளை படித்தால் உள்ளம் குளிர்கிறது, உடம்பு சிலிர்க்கிறது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன? உயிரையே அல்லவா உலுக்கியது அமைதிப்படையின் நடவடிக்கைகள்.
எங்கே தவறு நடந்தது? எதிலே தவறு நடந்தது? சொன்னது ஒன்று; செய்தது ஒன்று என ஏன் மாறிப்போனது? நம்முடைய புகழ்மிக்க ராணுவத்திற்கு இந்தியா வகுத்துத்தந்த விதிமுறைகள், வழிகாட் டும் நெறிமுறைகள் என்ன ஆயின? எட்டுக் கட்டளைகள் என்ன ஆயின?
எல்லாமே கருக்கலைந்து போன கனவுகளாகவும், உருக்குலைந்து போன நினைவுகளாகவும் ஆகின.
எட்டுக் கட்டளைகளில் ஒன்று கூட கடைப்பிடிக்கப்படவில்லை. ஒன்றே ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்போது எப்படி எந்தச் சொல்லும் செயல் வடிவம் பெறமுடியும்?
ஏழாயிரம் பேர்கள்.. என் தமிழ்ச் சாதி ஏழை மக்கள் கொல்லப்பட்டார்கள். எங்கள் குலப் பெண்கள் கதறக் கதற... பதறப் பதற பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார்களே.
அன்புத் தலைவர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., சரியாக பேச முடியாத நிலை யிலும்கூட ராஜீவ்காந்தியிடம் கற்பழிப்புக் கொடுமைகளுக்காக கண்ணீர் வடித்தபோது... ""ஒரு நாட்டுக்குள் ராணுவம் போகிறபோது நடக்கக்கூடிய சாதாரண விஷயம்தான் இது. நீங்கள் எதற்காக ‘கற்பு கற்பு’ என அர்த்த மில்லாமல் கதறுகிறீர்கள்''’என்று அலட்சிய மாகப் பதிலளித்தவர்தானே ராஜீவ் காந்தி.
1987 ஜூலை 29-ஆம் நாள் அமைதிப் படை ஈழ மண்ணுக்குள் நுழைந்தது. ஆகஸ்ட் கடந்து, செப்டம்பர் 15-ஆம் தேதி தம்பி தியாகசீலனான திலீபன் ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணா நோன்பு தொடங்கினான். எதற்காக? இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கை அரசு எதையும் நிறைவேற்றி வைக்க முன்வரவில்லை. இந்திய அரசும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால்தான் திலீபன் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்தான். 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மாண்டுபோனானே. திலீபனின் உண்ணா நோன்பை நிறுத்துவதற்கான முயற்சியில் அமைதிப்படை ஈடுபடவில்லையே.
தமிழீழ சுதந்திரத்தை அமைதிப்படை தட்டிப் பறித்ததைச்...
(சொல்கிறேன்)
_______________
இணைந்த கரங்கள்!
சிவகுமார், ரத்தி நடிப்பில் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய ‘"காதல் கிளிகள்'’ படத்தில், கே.வி.மகாதேவன் இசையில், கே.ஏ.ஜேசுதாஸ், எஸ்.பி.சைலஜா பாடிய இனிமையான எனது பாடல் இதோ...
பல்லவி:
செவ்வானமே சீர் கொண்டுவா
வெண்மேகமே தேர் கொண்டுவா
இந்திரலோகத்து தேவதை ஒருத்தி
(இந்திரகோலத்து தேவன் ஒருவன்)
பூமிக்கு வருகின்ற நேரம்- இது
பொன்னந்தி இளமாலைக் காலம்
சரணம்-1:
சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும்
சித்திர விழிகள் தினமும் மயங்கும்
இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும்
இதய நதிகள் உறவில் கலக்கும்
சுகமான திருநாள் இது
இன்று எனைத்தேடி வருகின்றது
சரணம்-2:
நடந்து நடந்து நலிந்த இடையோ
கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ
வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ
வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ
பாராட்ட மொழி இல்லையோ
இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ
(பாட்டுக்கச்சேரி தொடரும்)
படம் உதவி: ஞானம்