சு பிறந்த டிசம்பர் 25 உலகெங்கும் மகிழ்ச்சியான நாள். கீழவெண் மணிக்கு அது இன்றளவும் துக்க நாள். அன்றைய இரவில்தான் ஒரே குடிசைக்குள் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 44 விவாசாயத் தொழி லாளர்கள், 1968 டிசம்பர் 25 அன்று உயிரோடு ஒரே குடிசையில் வைத்துக் கொல்லப்பட்ட துயரத்தை எவரும் மறந்திருக்க முடியாது. செங்கொடி இயக்கத்தில் பங்கேற்றிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் நில உடைமையாளர்களுக்குமான வர்க்கப் போராட்டம் வலுவடைந்து, உரிமைக் குரல் ஓங்கிய நிலையில்தான் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டது. அந்த சோக சம்பவத்தின் 53-ஆவது ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 25-ஆம் தேதி கீழவெண்மணியில் அனுசரிக்கப்பட்டது.

seeman

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பராமரிப்பில்தான் கீழவெண்மணி தியாகிகளின் நினைவிடம் உள்ளது. நினைவு நாளில், நினைவிடக் குடிலைத் திறந்துவைத்துப் பேசிய சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், "இன்னும் சாதிக் கொடுமை ஒழியவில்லை'' என்றார். இந்த நிலையில் அங்கு தன் படை பரிவாரங் களோடு வந்தார் ’நாம் தமிழர்’ கட்சியின் சீமான். அவரோடு சிலரை மட்டும் அனுமதித்தனர். அப்போது, அவரது கட்சியினர் தமிழ்த் தேசியம் சார்ந்த வீர வணக்க முழக்கங்களை எழுப்பினர்.

இதனைக் கண்டு எரிச்சலான தோழர்கள், "இந்த இடத்தில் முழக்க மிட்டு சலசலப்பை நீங்கள் உண்டாக்க அனுமதிக்க மாட் டோம்" என்று கூறி, அவர்களை அங்கிருந்து கிளப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட, சீமான் டீம் வெளியேற்றப்பட்டது. வெளியே வந்த சீமான், "இங்கு நாங்கள் கொடி பிடித்து வரக்கூடாதுன்னு தடுப்பது வேதனை'' என்றார்.

கம்யூனிஸ்ட் தோழர்களோ, "இது வர்க்கப் போராட்டத்தின் காயம் ஆறாத நினைவிடம். சாதிக்கொடுமை ஒழிய வேண்டும் என்பதே பொதுவுடைமைப் பார்வை. சாதிக்கு குலம் என்று பெயர் சூட்டி, குலப்பெருமை பேசுவது என்பது சாதிப்பெருமையைப் பேசுவதாகும். அதைத்தான் நாம் தமிழர் கட்சியினர் செய்கின்றனர். சாதி விஷத்துக்கு எங்கள் மண்ணில் இடம் கிடையாது''’என்றனர்.

ஊர்க்காரர்களோ, "ராஜீவ்காந்தியை நாங்கதான் கொன்னோம்னு சீமான் பேசுறாரு. செருப்பைத் தூக்கிக் காட்டி, மேடையில அநாகரிகமாக நடந்துக்கறார். இந்த மக்களுக்காக உழைத்தவர்களை இழிவாகப் பேசறாரு. அவர் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டு மானாலும் நடந்துக்கட்டும்... இந்த ஊரில் அது நடக்காது''’என்றார்கள் ஆவேசமாக.