"பள்ளிக் கல்வித்துறையில் தரகர்கள் ஆதிக்கம்! விருதுநகர் மாவட்டம் வீழ்ந்த பின்னணி!'’ என்னும் தலைப்பில், கடந்த ஜூலை 06-09 நக்கீரன் இதழில் விருதுநகர் மாவட்ட கல்வித்துறை ஒழுங்கீனங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் நீட்சியாக இன்னொரு அணுகுண்டு’ தற்போது வெடித்திருக்கிறது.
மதுரை காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதிக்கு பதவி உயர்வு அளித்து விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம். அவரும் கடந்த 15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பினை ஏற்று தனது இருக்கையில் அமர்ந்தார். உடனே, ஆளும்கட்சி தரப்பிலிருந்து அவருக்கு நெருக்கடி வந்தது. சுதந்திர நாளில் பொறுப்பேற்ற வளர்மதி அடுத்த சில நிமிடங்களிலேயே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். “
விருதுநகர் மாவட்டத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்சார்ஜ் டி.இ.ஓ.தான். ரெகுலர் டி.இ.ஓ. வந்தால்தான் எல்லாம் சரியாகும். பணிமூப்பு அடிப்படையில் பார்த்தால் இன்சார்ஜ் டி.இ.ஓ. ஆவதற்கு தகுதியே இல்லாத மோகன் இந்தப் பொறுப்பில் இருக்கிறார். பொறுப்பில்லாமல் நடக்கிறார் என்கிறார்கள்.
அவர் தலைமைஆசிரியராகப் பணிபுரியும் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வட்டாரத்தில் விசாரித்தோம். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியை ஒருவர் நம்மிடம், ""இந்த ஸ்கூல்ல இரண்டு ஆசிரியர்கள் தவிர, முழுக்க முழுக்க லேடி டீச்சர்ஸ்தான். ஊர்மிளாங்கிற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) டீச்சர் ஹெட்மாஸ்டருக்கு அடுத்த இடத்துல இருக்கிறவங்க. அவங்க கிளாஸுக்கே போக மாட்டாங்க. ஸ்கூல் டயத்துல நினைச்ச நேரத்துல டூ வீலரை எடுத்துட்டு வெளிய கிளம்பிருவாங்க. ஸ்டூடண்ட்ஸெல்லாம் சப்ஜெக்ட் டீச்சர் வராம நாங்க எப்படி படிக்கிறதுன்னு எங்கள மாதிரி டீச்சர்ஸ்கிட்ட சொல்லி அழறாங்க. காரணம் மோகன் சார்கிட்ட அவங்களுக்கு இருக்கிற நெருக்கம்தான்.
ஒருநாள் தன்னோட (ஹெட்மாஸ்டர்) ரூம்ல வச்சு ஊர்மிளா டீச்சரை அடி அடின்னு அடிச்சாரு மோகன். அதை ஒரு டீச்சர் பார்த்துட்டு வந்து ஸ்கூல் முழுக்க பரப்பி விட்டுட்டாங்க. நான் கேட்கிறேன்? ஹெட்மாஸ்டர்ன்னா லேடி டீச்சரை அடிக்கலாமா? அப்படி என்ன உரிமை? ஹெட்மாஸ்டர் ரூம்ல ஒ.ஏ. ஒருத்தங்க இருக்காங்க. ஊர்மிளா டீச்சர் வந்துட்டாங்கன்னா.. அந்த ஒ.ஏ.வை வெளிய போகச் சொல்லிருவாரு. மணிக்கணக்கா பேசுவாங்க. இவங்க அடிக்கிற கூத்து எல்லா ஸ்டூடண்ட்ஸுக்கும் தெரியும். மோகன் சார் இருக்கிற தெருவுல யாருக்கோ தப்புத் தப்பா மெசேஜ் அனுப்பி அந்த விவகாரம் ஸ்கூல் வரைக்கும் வந்திருச்சு.
2019, ஆகஸ்ட் மாசம் 29-ஆம் தேதி இங்கே வேலை பார்க்கிற மாற்றுத் திறனாளி நாகேஸ்வரி, மோகன் குறித்து முதலமைச்சருக்கு எழுதிய மனுவில், "தனது தவறை கண்டிக்காமல் இருப்பதற்காக, முதன்மைக் கல்வி அதிகாரிக்கு தனிப்பட்ட தரகர் வேலை செய்கிறார் மோகன். உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் தலைகால் புரியாமல் ஆடுகிறார். நான் கோவிலாக நினைக்கும் இப்பள்ளியின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டி காலில் விழுந்து மன்றாடி வேண்டுகிறேன்'’என்று குமுறலை வெளிப்படுத்தியிருந்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் புகாரைத் தனது மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி, தானே விசாரித்து அது பொய்ப்புகார் என்று மோகனே முடித்து வைத்ததுதான்'' என்றார் கவலையோடு. நாகேஸ்வரி மிரட்டப்பட்டாராம்.
ஆசிரியர் சங்கத்தினரோ, ""பள்ளிகளுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு போறப்ப யார் யாரு நல்லாயிருக்கா? அவங்க பேக்ரவுண்ட் என்னன்னு தெரிஞ்சிக்குவாரு. விடோஸ்.. அப்புறம் டைவர்ஸ் வாங்கினவங்க.. வீட்ல பிரச்சனை உள்ளவங்கன்னு ஆளுங்கள நேர்ல பார்த்து தேர்ந்தெடுத்து 30 கி.மீ. தள்ளி ‘டெபுடேசன்’ போடுவாரு. அவங்களும் வேற வழியில்லாம டி.இ.ஓ. ஆபீசுக்குப் போயி இவரைப் பார்த்து கெஞ்சுவாங்க. அப்ப, அவங்க வீக்னஸை தெரிஞ்சிக்கிட்டு மூவ் பண்ணுவாரு. சரிவர மாட்டாங்கன்னா விட்ருவாரு. தன்கிட்ட சிக்குனவங்கள தனக்கு மேல உள்ள அதிகாரிங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாரு. அப்படித்தான் இதுக்கு முன்னால இருந்த சி.இ.ஓ. ஜெயகுமார் பண்ணுன சமாச்சாரம் வாட்ஸ்-ஆப்ல லீக் ஆகி இந்த மாவட்டத்தை விட்டே அவரை ஓட வச்சது''’என்றார்கள் வேதனையோடு.
மேலும் ஆசிரியர் சங்கத்தினர் விவரித்த மோகனின் லீலாவினோதங்கள் இவைதான்-
2013-ல் காரியாபட்டி தாலுகாவில் உள்ள அழகியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக மோகன் பணிபுரிந்தபோது ஆசிரியை ஒருவருடன் இருந்த தொடர்பு, சிவகாசியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரை விருதுநகருக்கு அழைத்துச்சென்று விடுதியில் தங்கியது, விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மோகன் அடிக்கடி செல்வது, என பல சர்ச்சைகள் உண்டு. அவர் பணிபுரியும் சத்திரரெட்டியபட்டி பள்ளியின் பெற்றோர் கூட்டத்துக்கு வந்திருந்த மாணவி ஒருவரின் அம்மா மீது மோகனின் பார்வை பட்ட விவகாரமும் புகைச்சலானது. சாத்தூர், ஆமத்தூர், செநெல்குடின்னு எல்லா ஊருலயும் அவரு அந்த வேலைதான் பார்த்திருக்காரு. இவரால் சீரழிந்த ஒரு ஆசிரியை, தனக்கு நெருக்கமான சக ஆசிரியையிடம் "அந்த ஆளு ரொம்ப மோசம். வயாக்ராவெல்லாம் யூஸ் பண்ணுறார். தெரியாம மாட்டிக்கிட்டேன்'’என்று அழுதிருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது. தங்களுக்கு நடந்த கொடுமையை எப்படி புகாராக அளிப்பார்கள்? அந்த பயம்தான் மோகனுக்கு வசதியாகப் போய்விட்டது.
பாலியல் புகார் மட்டுமல்ல.. மோசடி புகார்களும் குவியவே உளவுத்துறை மூலம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டு, அவரிடமிருந்து ‘மந்தனம்’ பெறப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, ஜூலை 3-ஆம் தேதி மோகனிடம் நேரடி விசாரணை நடத்தியிருக்கிறார்.
நாம் இன்சார்ஜ் டி.இ.ஓ. மோகனை தொடர்புகொண்டோம். ""இதெல்லாம் என்னோட பெர்சனலை டேமேஜ் பண்ணுற மாதிரியிருக்கு. என்மீது எந்த ஆசிரியையாவது ஆதாரத்தோடு பாலியல் குற்றச்சாட்டு சொல்லிருக்காங்களா? கடவுள் சத்தியமா அப்படி இல்லவே இல்ல. நிரூபித்தால் அந்த நேரமே நான் மருந்தைக் குடித்து செத்திருவேன். பெட்டிஷன்னு வந்தா என்கொயரி போட்டுத்தானே ஆகணும். இங்கே டி.இ.ஓ.வா வர்ற எல்லாரையும் வேலை செய்யவிடாம தடுக்கிறேன்னு ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திட்டாங்க. நான் லாங் லீவ் போட்டுட்டுப் போயிடலாம்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் காரணம் டி.இ.ஓ. ஆபீஸ்ல அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கிற பால் அசோக்தான். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.கிட்ட சொன்னேன். நான் தட்டி வைக்கிறேன் தம்பின்னு சொன்னாரு''’என்று இந்த விவகாரத்தை அரசியல்’ ஆக்கினார்.
பால் அசோக் நம்மிடம், ""நான் ஒரு உதவியாளர். அவரோ அதிகாரி. கடந்த மாதம் அலுவலகத்தில் அவருக்குத் தெரிந்தே நடந்த ஒரு போலி கையெழுத்து மோசடி மற்றும் முறைகேட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தேன். அதன்மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை. முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் செய்திருக்கிறேன். அந்தக் காழ்ப்புணர்ச்சியில்தான் அவருக்கு எதிராக நான் செயல்படுவதாகப் பழி சுமத்துகிறார்''’என்றார்.
"விருதுநகர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினரின் தலையீடு கல்வித்துறையில் அதிகமாக இருக்கிறது'’ என்ற குற்றச்சாட்டை தமிழக பால்வளத்துறை அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வுமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் முன்வைத்தோம்.
""இன்சார்ஜ் டி.இ.ஓ. மோகன் மீது இந்த அளவுக்கு குற்றச்சாட்டுகள் இருக்கிறதா? சீக்கிரமே ஒரு ரெகுலர் டி.இ.ஓ. போட்டு எல்லாத்தையும் சரி பண்ணிருவோம்''’என்றார்.
பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியைகளை விரட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோகனுக்குப் போய் மாவட்ட கல்வி அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பு தந்திருப்பது கொடுமையிலும் கொடுமைதான்!
-ராம்கி