உசிலை ராஜா என்னும் பெயரைக் கேட்டால் அதிர் கிறார்கள் மக்கள். உசிலம்பட்டியில் லாரி மூலம் மணல் லோடு அடித்துக்கொண்டிருந்தவர். இவரது அப்பா சேதுராமன் அ.தி.மு.க. மாவட்ட விவசாய அணியிலும் உசிலம்பட்டி சேர்மனாகவும் இருந்தவர். அப்பாவும் மகனும் சேர்ந்து ’டிக்கா லாரி சர்வீஸ்’ என்ற டிரான்ஸ்போர்ட் கம்பெனியை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் உதயகுமார், பாஸ்கரன் ஆகியோருடன் தான் நெருக்கமாக இருப்பதாகக் காண்பித்துக் கொண்டனர்.
இந்த செல்வாக்கால் வட்டி பிஸினஸில் இறங்கிய ராஜா, உசிலம்பட்டி டி.இ.எல்.சி. பள்ளி நிர்வாகிகளு டன் நெருக்கமானார். இதைக் காட்டி, அந்தப் பள்ளிகளின் கிளைகளில் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் பணத்தை லட்சக்கணக்கில் வசூலிக்கத் தொடங்கினார். அதேபோல் மத்திய அரசின் காதித் துறையிலும் புகுந்து ஆட்டம் காட்டினார்.
இவரின் பந்தாவை நம்பி, அவரவரும் தங்கள் மகனுக்கு, மகளுக்கு, மனைவிக்கு, வேலை வேண்டும் என்று, நகை நட்டை விற்றும், காட்டை விற்றும் வீட்டை விற்றும் அவரிடம் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்க, அனைவருக்கும், தான் திவால் ஆகிவிட்டதாக, ஒரே நாளில் மஞ்சள் நோட்டீசை அனுப்பி, பட்டை நாமம் போட்டார் உசிலை ராஜா.
இதனால் பதறிப்போனவர்கள், கடந்த 16-ந் தேதி கோர்ட்டில் திரண்டனர். நீதிமன்றமோ, அவர்களை வரும் 28-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட, செய்வதறியாது பரிதவித்த பாதிக்கப் பட்ட மக்கள், உசிலை ராஜாவின் வீட்டிற்குப் படையெடுக்க.. அங்கே அவர் அப்பா சேதுராமன், சட்டமாக உட்கார்ந்து கொண்டு... ”எனக்கும் என் மகனுக்கும் தொடர்பே இல்லை. யாரிடம் ஏமாந்தீர்களோ அவரிடமே போய்க் கேளுங்கள்”என்று துரத்தியடிக்க... அவர்கள் அனைவரும், உசிலம்பட்டி காவல்நிலையத்திற்குச் சென்று ராஜா மீது புகார் கொடுக்க... போலீஸோ “இது சிவில் கேஸ்... எங்ககிட்ட வராதீங்க. போங்க போங்க” என அவர்களும் விரட்டி அடித்தனர். சாலை மறியல் செய்தும் பலனில்லாததால், மதுரை ஆட்சியரிடம் நேரில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அங்கிருந்த வெங்கடேசன், சங்கரலிங்கம், அழகர்சாமி, விசோக் குமார், ராஜ்குமார், சந்திரகுமாரி கண்ணன் என ஆளாளுக்கு, சார் நான் 13 லட்சம் கொடுத்தேன். 4 லட்சம், 5 லட்சம் கொடுத்தேன். சார் நான் 7 லட்சம் கொடுத்து ஏமாந்துட்டேன்... எனக்கு டீச்சர் வேலை வாங்கித் தர்றேன்னார்... எனக்கு சூப்பர்வைசர் வேலை காதியில் ஏற்பாடு ஆயிடிச்சின்னார்... என் மகனுக்கு கேசியர் வேலையாம்... ஏமாத்திட்டார்.... ஆவின்ல சூப்பர்வைசர் போஸ்ட்டுன்னு சொல்லி, நம்ப வச்சிக் கழுத்தை அறுத்திட்டார்- என்றெல்லாம் தங்கள் சோகக் கதையைக் கண்ணீரோடு சொன்னார்கள்.
உசிலை ராஜா என்ற ராஜா சிவபிரகாஷின் மோசடி டீமில் ராமசுப்பு ரமணன், சபாபதி, சாம்ஜி போன்ற பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்களாம்.
ராஜாவின் மோசடி டெக்னிக் பற்றி விவரித்த அந்த இளைஞர்..”திடீரென யாருக் காவது போனைப் போட்டு, வேலை கேட்டியேப்பா, சென்னைக்கு வந்து என்னைப் பாருன்னு சொல்வார். சினிமாவில் காட்டும் பங்களாவைப் போல் ஒரு இடத்தில் அவர்களைச் சந்தித்து, மிரளவைப்பார். அதேபோல் உசிலம்பட்டியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பள்ளியின் கெஸ்ட்ஹவுசில், ஏற்கனவே அவரை பார்க்க வந்த ஆட்களைப் போல் பலரையும் வரிசையில் நிற்கவைத்து, பணத்தோடு வருபவர்களை நம்பவைப்பார். அங்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்களுடன் அவர் இருக்கும் படங்கள் இருக்கும். நம்பி வந்தவர்களிடம், ஆளுக்குத் தகுந்தாற்போல 5 லட்சத்தில் இருந்து வசூலிப்பார். கொஞ்சநாளில், ஆர்டர் காப்பி என்று ஒரு தாளைக் காட்டுவார். அடுத்த மாதம் அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்ததும் மீதி தொகையைக் கொடுங்க என்று அனுப்பிவிடுவார். ஆனால் ஆர்டரே வராது. இப்படியே 195 பேர்களிடம் 7 கோடிக்கு மேல் வாங்கி மோசடி செய்திருக்கிறார் ராஜா. இன்னும் ஏகப்பட்ட மோசடிகள் உண்டு. 100 கோடி அளவுக்கு சம்பாதித்துவிட்டார்’என்று மிரளவைத்தார்.
இது குறித்து உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கரிடம் நாம் கேட்டபோது “"உசிலை ராஜா என்பவர் பல கோடி ஏமாற்றிவிட்டார் என்றார்களே தவிர, யாரும் எழுத்துப் பூர்வமாக புகார் கொடுக்கவில்லை. புகார் வந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்''” என்று மழுப்பலாக முடித்துக்கொண்டார்.
உசிலை ராஜாவைத் தொடர்புகொண்டோம். அவரின் போன் ’சுவிட்ச் ஆப்’ என்று வந்தது. அவரின் புரோக்கர்கள் அனைவரின் போன்களும் அதேபோல் சுவிட்ச் ஆப்’பிலேயே இருந்தது.
அ.தி.மு.க. புள்ளிகளைக் காட்டி பல கோடி களைச் சுருட்டிய மோசடி மன்னன் உசிலை ராஜாவுக்கு, இப்போதும் காவல்துறையினர் உட்பட பலரும் அனுசரணையாக இருப்பது திகைக்க வைக்கிறது.
எப்போது நடவடிக்கை பாயுமோ?