158/2017...

ந்த குற்ற எண் தான் கொடநாடு கொலை, கொள்ளையில் சோலூர் மட்டம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். எனும் முதல் தகவல் அறிக்கை. அந்த எப்.ஐ. .ஆர்.தான் இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் முதுகில் வேதாளமாய் தொற்றிக்கொண்டு பின்னங்கழுத்தை இறுக்கிப் பிடித்து நெருக்குகிறது.

24-04-2017 அன்று அந்த முதல் தகவல் அறிக்கை புகார்தாரர் கிருஷ்ண தாபா இந்தியில் சொல்ல... சோலூர் மட்டம் எஸ்.ஐ. ராஜன் என்பவர் பதிவு செய்திருக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் கிருஷ்ணதாபா கொடநாடு எஸ்டேட்டில் ஒரு லேபர் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. கொலை நடந்த இடம் கொடநாடு எஸ்டேட் 10-வது கேட்டிற்கு உள்பக்கம் உள்ள சவுக்கு மரம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

kk

Advertisment

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்த கிருஷ்ண தாபா அளித்த வாக்குமூலத்தில், "நான் நேப்பாளில், பார்லோன் மாவட்டம் பிகின் புகாரா கிராமத்தைச் சேர்ந்தவன். கொடநாடு எஸ்டேட்டில் வாட்ச்மேன் வேலை செய்துகொண்டிருந்த கங்கா பகதூர் என்பவர் மூலம் கொடநாடு வாட்ச்மேன் வேலையில் ஒண்ணேகால் வருடத்திற்கு முன்னால் 9,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன்.

23-04-17அன்று 6 மணிக்கு 8-வது கேட்டில் இரவுப்பணிக்காக நின்றேன். இரவு 8 மணியளவில் 10-ம் நம்பர் கேட்டில் நிற்கும் வாட்ச்மேன் ஓம் பகதூரோடு சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டோம். அதன் பின்னர் திரும்பவும் 8-ம் நம்பர் கேட்டிற்கு வந்து கேட் முன்னால் நின்ற லாரியில் ஏறி இரவுப் பணியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 12 மணியளவில் 8-ம் நம்பர் கேட் வழியாக யாரோ வரும் சத்தம் கேட்டு லாரியில் இருந்து இறங்கப்போனேன். அப்போது 8 பேர் லாரியின் இரு புறமும் கதவு வழியாக நுழைந்து என்னைத் தாக்கினார்கள்.

kk

Advertisment

அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் என்னுடைய வலதுகால் பெருவிரல், இடது முன்னங்கையின் முன்புறம் தாக்கி இரத்தக் காயத்தை உண்டுபண்ணினார்கள். என்னுடைய கை, கால்களை கட்டிப் போட்டார்கள். கொண்டுவந்த துணியால் என் வாயைக் கட்டினார்கள். 2 பேரை எனக்கு காவல் வைத்துவிட்டு, முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தார்கள். பங்களாவை நோக்கி நடந் தார்கள். சத்தம் போட்டால் கொன்றுவிடுவ தாக தமிழில் மிரட்டினார்கள். அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசிக்கொண் டார்கள்.

சிலமணி நேரங்கழித்து மயக்கத்திலிருந்து எழுந்தபோது, அவர்கள் வாகனங்கள் புறப்படும் சத்தம் கேட்டது. எனக்கு காவல் இருந்தவர்கள் எனது செல்போனைப் பிடுங்கிக்கொண்டு காரில் ஏறிச் சென்றனர். நான் கையால் வாயில் உள்ள துணியை அவிழ்த்து, வாயால் கைக்கட்டை அவிழ்த்தேன். பின், கையால் கால்கட்டை அவிழ்த்துவிட்டு கேட்டுக்கு சென்று பார்த்தேன்.

வாட்ச்மேன் கூண்டு சேதப்படுத்தப் பட்டிருந்தது. கூண்டுக்கு பின்புறமுள்ள மரத்தில் ஓம்பகதூரின் கால்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக துணியால் கட்டப்பட்டும், வாய் துணியால் கட்டப் பட்டுமிருந்தது. நான் பக்கத்தில் போய் தட்டிப் பார்த்தபோது உயிர் பிரிந்திருந்தது. ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டிருந்தார். என்னைத் தாக்கி கட்டிப் போட்டவர்கள், ஓம்பகதூரையும் தாக்கி, கொலை செய்து கைகளை பின்புறமாக துணியால் கட்டி மரத்தில் கட்டிப்போட்டிருந்தார்கள். நான் பங்களாவிற்கு அருகில் சென்று பார்த்தபோது, பங்களாவின் முன்பக்க இடது ஜன்னல் உடைக்கப்பட்டு, உள்பக்க கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது .

dd

நான் உடனே 7-ம் நம்பர் கேட் வாட்ச்மேன் பஞ்சம்பி சோகர்மா என்பவரிடம் சொன்னேன். அவர் சுமார் 2 மணியளவில் பான்காடு டிவிஷன் ரைட்டர் ராதா கிருஷ்ணனுக்கு தகவல் சொன்னார். அதன்பின் எஸ்டேட் அதிகாரிகளுக்கும் சொல்லி, எஸ்டேட் வாகனம் மூலம் என்னுடன் பணியாற்றும் சுனில்தாபாவுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்'' என்றிருக்கிறார்.

"24-ந் தேதி அதிகாலை 5:20 மணிக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையிலிருந்து எனக்கு தகவல் வந்ததில் புறப்பட்டுப் போனபோது பெற்றுக்கொண்ட வாக்குமூலம் இது. தலைமைக் காவலர் ரிச்சர்டு ஜேக்கப் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். சாட்சிகள் யோகநாதன், சுனில்தாபா முன்னிலையில் 6 மணிக்கு பதிவு செய்து, சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் 8:00 மணிக்கு எப்.ஐ.ஆர். போடப்பட்டது'' என்கிறார் எஸ்.ஐ .ராஜன்.

"இந்த எப்.ஐ.ஆர். பல சந்தேகங்கள் விளைவிக்கக்கூடியதாய் இருக்கிறது. அதுதான் அ.தி.மு.க. மேலிடத்தை அச்சம்கொள்ள வைத்திருக்கிறது' என்கிறார்கள் இந்த வழக்கை அறிந்த உதகை வழக்கறிஞர்கள்.

kk

சந்தேகங்கள் குறித்து சொல்லும் அவர்கள், "எப்.ஐ.ஆரின் ஆரம்பத்தி லேயே கிருஷ்ண தாபா எஸ்டேட்டின் லேபர் எனச் சொல்லப்படுகிறது. பின்னர் எஸ்டேட் வாட்ச்மேன் எனச் சொல்லப் படுகிறது. 5:20க்கு சோலூர் மட்டக் காவல் நிலையத்தில் இருந்தபோது கோத்தகிரி அரசு மருத் துவமனையில் இருந்து புறப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்கே சாட்சிகள் யோகநாதன், சுனில்தாபா முன்னிலையில் வாக்குமூலம் பதியப்பட்டது'' என்கிறார் எஸ்.ஐ. ராஜன்.

கிருஷ்ண தாபாவோ, "எஸ்டேட் வாகனத்தின் மூலம் ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்தது சுனில்தாபா என்கிறார். ஆனால் யோகநாதன் யார்? அவர் எங்கே அந்த நேரத்தில் வந்தார்? சாட்சி என்ற இடத்தில் சுனில்தாபா கையொப்பம் இடவே இல்லை. யோகநாதன்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணதாபாவிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகு, அவரிடம் கையெழுத்தோ, கை ரேகையோ எப்.ஐ.ஆரில் இல்லை. இதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மூல ஆதாரமாய் கிடைத்தது. தேர்தலுக்குள் இந்த வழக்கை முடித்து விடலாம் என எடப்பாடி போட்ட கணக்கை 3-வது, 4-வது, 8-வது, 10-வது குற்றவாளிகள் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் விஜயன் உடைத்து எறிந்துவிட்டார்'' என்கிறார்கள் .

மேலும் அவர்கள், "28-11-17 அன்று இறுதி குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திடம் வழக்கறிஞர் விஜயன் குறுக்கு விசாரணை செய்தபோது கேட்ட முதல் கேள்வியே "அரசு தரப்பு சாட்சியங்கள் 1, 2, 3, 4, 5 பேர்களுமே மொத்தம் 8 பேர் வந்தார்கள். அதில் 2 பேர் லாரி கேபினில் நின்று கொண்டார்கள்'' எனச் சொல்கிறார்கள்.

kk

"அப்படியென்றால் 6 பேர்தானே பங்களாவிற்குள் போயிருப்பார்கள். கொலை -கொள்ளையில் 6 பேர்தானே சம்பந்தப்பட்டிருப்பார்கள். 8 பேர் மீதும் ஒரே மாதிரி செக்சன்களில் எப்படி வழக்கு போடலாம்? 8 பேர் மட்டுமே வந்தார்கள் எனச் சொல்லப்படுகிற நிலையில் எப்.ஐ.ஆரில் 11 பேர் எப்படி வந்தார்கள்? மயக்கமாகிவிட்ட கிருஷ்ணதாபா இவன்தான் கடிச்சான், இவன்தான் கத்தியால் கைய வெட்டினான்னு எப்படிச் சொல்ல முடியும்?

12 மணியிலயிருந்து 2 மணிக்குள்ள சம்பவம் நடக்குதுன்னு சாட்சியங்கள் சொல்றாங்களே தவிர, ஓம்பகதூரை மரத்துல எத்தனை மணிக்கு கட்டிப் போட்டாங்க? நடக்காத சம்பவத்தை நடந்ததா சொல்றதுனாலதான் உங்களால சொல்ல முடியலை என்றதுமே, பேந்த பேந்த முழிச்ச இன்ஸ்பெக்டர்... அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எத்தனை மணிக்கு கட்டிப் போட்டாங்கன்னு தெரியாது. ஆனா நடக்காத சம்பவம்னு நீங்க சொல்றது சரியில்லன்னுட்டாரு .

நீங்க குற்றம் சுமத்தற 10-வது எதிரி ஒரு வாகன திருட்டுல சம்பவம் நடந்த 23-4-17, அதற்கு முந்தைய நாள் 22-ந் தேதி, 24-ந் தேதி கேரளா மலப்புரம் மாவட்டத்து அரிக்கோடு காவல் நிலையத்துல இருந்தாரு. அது உங்களுக்குத் தெரியுமா?ன்னு கேட்டபோது தெரியாதுன்னு முதல்ல சொன்னவரு, பின்னால விசாரிச்சப்போ வழக்கு இருப்பதை தெரிஞ்சுகிட்டேன். அந்த தேதிகளில் விசாரணை வளையத்துல அப்ப அவரு இல்லைன்னுட்டாரு.

kk

சம்பவ இடத்துக்கு 9:30 மணிக்கு போனதா சொல்றீங்க? 7:30 மணிக்கு எஸ்.ஐ. ராஜன் உங்களுக்கு தகவல் சொன்னார் என்றால், நீங்கள் போய் விசாரித்து, தகவல் அனுப்புவதற்கு முன்னாடியே தடய அறிவியல் துறை, மோப்பநாய் எப்படி அங்கே வந்தது எனக் கேட்டதற்கு, எஸ்.ஐ. ராஜன் என்னிடம் சொல்வதற்கு முன்பே தடய அறிவியல் துறைக்கு சொல்லி யிருக்கிறார் என்றார்' இன்ஸ்பெக்டர்.

"9:00 மணிக்கு பத்திரிகை யாளர்கள், சம்பவ இடத்தில் இருந்தார்களா?' என்றதற்கு, "ஆமாம் இருந்தார்கள். ஆனால் யார், யார் இருந்தார்கள் என்பது தெரியாது' என்று சொல்லிவிட்டார். தான் சம்பவ இடத்திற்கு போனதாய் சொன்ன டைமை மறந்துவிட்டு, தொடர்ச்சியாக, "நீங்கள் ஸ்பாட்டிற்கு போகும்போது உங்கள்கூட யாரையாவது அழைத்துப் போனீர்களா?' என விஜயன் கேட்க, "நானும் எனது டிரைவரான போலீஸ் அருண் பிரசாத்தை மட்டுமே கூட்டிக் கொண்டு போனேன்.' "கிருஷ்ணதாபா கட்டிப் போடப்பட்டதாய் சொல்லப்பட்ட லாரி கேபினில் ஏறிப் பார்த்தீர்களா?' என்றால், "ஏறிப் பார்த்தேன், எஸ்.ஐ. ராமச்சந்திரன் ஏறிப் பார்த்தார். போலீசும் ஏறிப் பார்த்தார், ஆனால் எத்தனை தடவை ஏறிப் பார்த்தார்கள்? எத்தனை பேர் ஏறிப் பார்த்தார்கள்? என்பது எனக்கு தெரியாது' என்றார் பாலசுந்தரம்.

"அருண்பிரசாத்தை மட்டுமே கூட்டிக்கொண்டு போனதாய் சொன்னீர்கள். எஸ்.ஐ. எப்படி அங்கே வந்தார்?' எனக் கேட்டபோது, பதில் சொல்லத் தெரியவில்லை பாலசுந்தரத்திற்கு.

ddsfa

"புகைப்படம் எடுத்தீர்களா?' எனக் கேட்ட போது, "8-ம் நம்பர், மற்றும் 10 நம்பர் கேட்டை புகைப்படம் எடுத்தோம். லாரியை அத்தனை கோணங்களிலும் புகைப்படம் எடுத்தோம்.' "அந்த புகைப்படங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தீர்களா?' என்றபோது, "அரசுத் தரப்புக்கு சாதகமாக அந்த புகைப்படங்கள் இல்லாததால் தாக்கல் செய்யவில்லை' என்றார்.

"ஓம்பகதூர், வாட்ச்மேன் கேபின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததா? பங்களாவை பார்வையிட்டீர்களா? பங்களா நுழைவுவாயிலில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்ட கண்ணாடித் துகள்களை முழுமையாக சேகரித்தீர்களா?' என்று கேட்டபோது, "பார்வையிட்டேன். பங்களா ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. அந்த ஜன்னலுக்குள் கம்பியே இல்லை. ஆனால் அந்த வழியாக ஒரு ஆள் நுழைய முடியாது. அந்த வாட்ச்மேன் கேபின் கண்ணாடித் துகள்களின் மாதிரிகளையும், பங்களா ஜன்னலின் கண்ணாடித் துகள்களின் மாதிரிகளையும் சேகரித்தோம். அதை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம்' என்றார். "கண்ணாடித் துகள்களை தாக்கல் செய்யவில்லையே' என்றபோது பதிலே இல்லை அவரிடம்.

அதற்குப் பிறகு மிக மிக முக்கியமான பாயிண்ட் ஒன்றை கேள்வியாக முன்வைத்தார் விஜயன்.

(வரும் இதழில்...)