எல்லை தொடர்பாக "லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்' எனப்படும் கிழக்கு லடாக்கில் இந்திய- சீனப் படைகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் 2020, ஜூன் 15ஆம் தேதி மோதிக்கொண்டதில் இந்திய- சீனத் தரப்பில் உயிர்ப் பலிகள் நிகழ்ந்தன.
அதையடுத்து இரு நாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தையின் மூலம் அப்பகுதியின் பதற்றத்தைத் தணிப்பதில் ஈடுபட்டன. விஷயம் மெல்ல மெல்ல சுமுகத்துக்கு வந்தது.
ஆனால் ராணுவ நிபுணர்களோ, கல்வான் பகுதியில் விஷயம் சுமுகமாகி விட்டதாகக் கூறினாலும் பல இடங்களில் இந்திய ராணுவம் ரோந்து செல்வதற்கான அனுமதியை சீனா மறுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
பதற்றம் தணிவு என்பதெல்லாம் வெளித்தோற்றத்துக்குத்தான். சீனா, இந்தியாவுடனான உரசலுக்குக் காத்துக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் இந்திய -சீன எல்லையில் போர் வந்தால் இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கு வதற்கு எல்லைப் பகுதியில் தன்னை வலுப்படுத்திக் கொண்டே வருகிறது.
சாட்டிலைட் புகைப்பட வசதி வந்தபிறகு, எந்த நாடும் வெகுகாலத்துக்கு சத்தமில்லாமல் ஆக்கிரமித்து ஏய்த்துவிட முடியாது. லடாக்கிலிருந்து அருணாசலப் பிரதேசம் வரை நமக்கும் சீனாவுக்கும் நீளும் எல்லைத் தகராறில், லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதிக்கு நெருக்கமான பகுதியில் தொடர்ந்து வீடுகள், பதுங்கு குழிகள், சாலைகள், பாலங்கள், சுரங்கக் குடைவுகள் என பல்வேறு வேலைகளை சீன ராணுவம் மறைமுகமாகத் தொடர்ந்துவருகிறது.
இது மீண்டும் என்றாவது ஒருநாள் போராக வெடித்தே தீரும் என்கிறார்கள்.
அருணாசலப்பிரதேசம், சிக்கிம், கல்வான் பகுதி என நான்கைந்து பகுதிகளைக் குறிவைத்து தீயாய் வேலை செய்கிறது சீனா. அருணாசலப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் நான்காவது முறையாக சீனப் பெயர் வைத்தது அத்தகைய உரசல் உத்திகளில் ஒன்றுதான்.
இந்தியாவும் இந்தப் பகுதிகளில் சாலை போடுவது, பாலம் கட்டுவதுபோன்ற வேலைகளைச் செய்தாலும் பதுங்கு குழி, சர்ச்சைக்குரிய இடத்தில் குடியிருப்புகளை அமர்த்துவது போன்ற வேலைகளைச் செய்யவில்லை.
தரைமட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இந்தச் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகள் அமைந்திருப்பதால், போர் நடக்கும் பட்சத்தில் இந்தப் பகுதிகளுக்கு நெருக்கமாக அமைந் திருக்கும் சீனாவின் பகுதிகளில் வீரர்கள், தளவாடங்கள், ஆயுதங்களைக் கொண்டுவர விமான தளங்கள், விமானம் தாங்கி வாகனங்கள் போன்றவற்றை அதிகரித்துவருகிறது.
சர்ச்சைக்குரிய இந்திய- சீன எல்லைகளை ஒட்டி வீடுகளைக் கட்டி, கொஞ்சம் ஆட்களைக் குடியமர்த்துவது, பின் புதிதாக மீண்டும் கொஞ்சம் வீடுகளைக் கட்டுவது, அங்கு மீண்டும் ஆட்களை குடியமர்த்துவது போன்ற பணிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதை ஒரு யுக்தியாகவே சீனா மேற்கொண்டு வருகிறது. இந்திய எல்லையை ஒட்டி இப்படியாக 628 கிராமங்களைக் குடியமர்த்தியிருக்கிறது. பேருக்குத்தான் இவை குடியமர்த்தப்பட்ட கிராமங்கள். இவை பெரும்பாலும் ராணுவத்தோடு தொடர்புடைய குடும்பங்களாக இருக்கும். போரென்றால் இதிலிருந்து வீரர்களைத் திரட்டி போருக்குப் பயன்படுத்திக்கொள்ளும்.
தற்போதைய நிலையில் மேற்கு லடாக் பகுதியில் மட்டும் 60,000 வீரர்களை காவல் பணியில் அமர்த்தியிருக்கிறது சீனா. உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தை ஒட்டி 1 லட்சத்துக்கு நெருக்கமான வீரர்களைக் குவித்திருக்கிறது.
ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பார்கள். ஆசியப் பகுதியில் இரு நாடுகள் வலுவிலும் பரப்பளவிலும் பெரிதாக அமைந்திருப்பதால், இயல்பாகவே யார் பெரியவர் என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. தவிரவும், சீனா உரசலில் இருக்கும் சர்வதேச பெரியண்ணன் அமெரிக்காவுடன் நமது நட்புறவும், இந்தியாவின் மீதான சீனாவின் கடுப்புக்குக் கூடுதல் காரணமாகிவிடுகிறது.
சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிராக இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கிறது? இந்தப் புதிய குடியமர்த்தல்களை எப்படித் தடுக்கப்போகிறது இந்தியா? இந்த தலைவலிக்கு யார் வந்து மருந்திடப் போகிறார் என்பதே நமது கவலையாக இருக்கிறது.