முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இதை திரைப்பட நடிகரும் கவிஞருமான ஜோமல்லூரி நேர்த்தியாக ஒருங்கிணைத்திருக்கிறார்.
வரும் 12-ஆம் தேதிவரை நடக்கும் இந்தக் கண்காட்சியை, கடந்த மாதம் 28-ஆம் தேதி திறந்து வைத்த மக்கள் நீதி மய்யத் தலைவரான நடிகர் கமல், "ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்து ஸ்டாலின் செய்த சாதனைகளையும், அதனால் அவர் சந்தித்த சவால்களையும் இந்த புகைப்படக் கண்காட்சி விளக்குகிறது''’என்று பெருமிதக் குரலில் பாராட்டிவிட்டுச் சென்றார்.
கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு, திராவிட இயக்க வரலாறாக வும், தமிழகத்தின் அரசியல் வரலாறாகவும் ஃப்ரேம் ஃப்ரேமாக கண்முன் விரிகிறது. இளமைக்கால கலைஞரின் குடும்பப் படத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும், பால் முகத்தோடு கை கூப்பும் ஸ்டாலினின் பிஞ்சுப் பருவ புகைப்படம், எடுத்த எடுப்பிலேயே மனதைக் கொள்ளை யடிக்கிறது.
முரசொலி மாறனுடன் சிறுவனாய், பின்னர் மீசை கூட முளைக்காத மாணவராய், அரும்பு மீசை இளைஞராய், இளைஞரணி வீரராய், மேயராய், துணை முதல்வராய், தமிழ்நாட்டின் நல்லாட்சி நாயகராய், அவருடைய படிப்படியான வளர்ச்சியை கேமரா மொழியில் அத்தனைப் படங்களும் உணர்த்துகின்றன.
நின்ற படியும், சைக்கிள் ஓட்டும் படியும் அமைக்கப்பட்டிருக்கும் அச்சு அசலான ஸ்டாலினின் சிலைகள் முன், பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
அங்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப் படங்களில், ஸ்டாலின் கெத்தாக மாட்டு வண்டி ஓட்டுகிறார், ரயில் மறியல் போராட்டத்துக்கு கொடியுடன் அணிவகுத்து நடை போடுகிறார், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் வரிந்துகட்டிக் களப்பணி ஆற்றுகிறார், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்தியைத் தார் பூசி அழிக்கிறார், பல்வேறு போராட்டங்களில் கைதாகிறார், மேடைகளில் முழக்கமிடுகிறார், கேமராவில் கோணம் பார்க்கிறார். முதல்வராகப் பதவி ஏற்கிறார், மாற்றுத் திறனாளிக் குழந்தை களுக்கு நடுவில் சிரிக்கிறார், மாணவ மாணவிகளின் உற்சாகத்துக்கு மத்தியில் மலர் முகம் காட்டுகிறார், மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறார், கொரோனா வார்டுகளுக்குள் கவச உடையுடன் நுழைகிறார், சாலையோர மக்களிடம் இறங்கி வந்து மனு வாங்குகிறார்... இப்படி அவரது ஒவ்வொரு செயல்பாடுகளையும் படங்கள் மறக்காமல் ஒப்பிக்கின்றன.
திருமணமான ஐந்தே மாதத்தில் புது மாப்பிள்ளையான ஸ்டாலின் மிசாவில் கைதான போது, கலைஞரின் மகன் என்பதற்காகவே, சிறைக் காவலர்கள் அவர் மீது கொடும் தாக்குதலை நடத்தினர். பதறவைக்கும் அந்த நிமிடங்களைக் கண்முன் நிறுத்தும் வகையில், அவர் அடை பட்டிருந்த 9-ஆம் எண் சிறைக் கொட்டடியும் அங்கு அமைக்கப்பட்டிருக்க, உள்ளே தரையில் அமர்ந்த நிலையில் இருக்கும் ஸ்டாலினின் மார்பில் ஒரு காவலர் ஷூ காலால் எட்டி உதைப்பது போன்ற காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக் கிறது. அதேபோல் அவரை லத்தியால் காவலர்கள் தாக்குகிற காட்சிகளும் அப்பட்டமாக சித்தரிக்கப் பட்டிருக்க, வலி தாள முடியாத ஸ்டாலின் மூச்சிரைப்போடு அலறுவது போன்ற ஓசைகளும் அங்கே பின்னணியில் ஒலித்து நம்மை திகிலில் ஆழ்த்துகின்றன. வலி நிரம்பிய அவரின் வரலாற்றை உணர்த்தும் இந்த சிறைக்கொட்டடி முன், பார்வையாளர்கள் பலரும் உருக்கத்தோடு படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
உதயநிதி பிறந்தபோது, இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டிய வழக்கில் கைதான கலை ஞர், சென்னை மத்திய சிறையில் அடைபட்டிருந் தார். தனக்குப் பேரன் பிறந்ததைக் கேள்விப்பட்ட அவர், 28.11.1977 அன்று, தன் மகனான ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில்... “"1953-ல் நான் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று இருந்தபோது, நீ கைக்குழந்தை. பார்க்க வருபவர் களோடு, குழந்தையாக நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (1976), சென்னை சிறையில் மிசா கைதியாக நீ இருந்தபோது, நான் உன்னைக் காண வந்துகொண்டிருந்தேன். இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா?'’என்று எழுதிய எழுத்துக்களும் அங்கே நம்மை பெருமிதமாய் நெகிழ வைக்கின்றன.
சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வர் நிவாரண நிதியாக தி.மு.க. சார்பில் 2005 ஜனவரி 10-ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜெ.வை கோட்டையில் சந்தித்து தி.மு.க. சார்பில் 21 லட்ச ரூபாயை ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஒருவரை ஒருவர் புன்னகையோடு வணங்கி நலம் விசாரித்துக்கொள்ளும் அந்த ஆச்சரிய நொடியும், அங்கே புகைப்படமாக வைக்கப்பட்டிருந்தது. பலரும் அங்கே வியப்போடு நின்று நிதானித்துவிட்டுச் செல்வதையும் நம்மால் காண முடிந்தது.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்களுடன் ஸ்டாலின் இருக்கும் படங்கள் கண்களைப் பெருமிதப்படுத்துகின்றன. அதேபோல் அகில இந்திய அரசியல் பிரபலங்களான சோனியா காந்தி, ராகுல், மன்மோகன்சிங், சரத்பவார், மம்தா, சீதாராம் யெச்சூரி, மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடனும் காட்சிதந்து, இந்தியாவின் எதிர்காலப் புன்னகையைச் சிந்து கிறார் ஸ்டாலின். கலைஞரின் காவிரி மருத்துவ மனை நாட்களின் பதிவுகளும் இடம்பெற்று கலங்க வைக்கின்றன. அப்போது மருத்துவமனைக்கு வந்த பிரபலங்கள் பலரது புகைப்படங்களும் வைக்கப் பட்டிருந்தன. அதில் வன ஆக்கிரமிப்பு சாமியார் ஜக்கியும் இடம்பெற்றிருப்பது லேசாக நெருடியது.
நாம் சென்ற நேரத்தில், அமைச்சர் உதயநிதி வருவதாகத் தகவல் வர, அமைச்சர் சேகர்பாபு அவரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தார். கண்காட்சியைச் சுற்றிப் பார்த்த அவர், ‘"எல்லாம் பிரமிப்பா இருக்கு. சேகர்பாபு அண்ணன், எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கிறவர். இதையும் நல்லாவே ஏற்பாடு செய்திருக்கிறார். தலைவரின் வரலாற்றைச் சொல்லிக்கொடுக்கும் வகுப்பறை போல் இந்தக் கண்காட்சி இருக்கிறது. மாணவ-மாணவிகள் வந்துக்கிட்டே இருக்காங்க... மகிழ்ச்சியாக இருக்கிறது''’என்றார் உற்சாகமாக.
கண்காட்சியைப் பார்வையிட வந்திருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், உதயநிதியைக் கட்டித் தழுவி வாழ்த்தினார். அப்போது அங்கு வந்த நடிகர் பார்த்திபன், முதல்வர் ஸ்டாலினின் பெரிய சைஸ் ஓவியமொன்றை உதயநிதியிடம் வழங்கினார். கண்காட்சியைச் சுற்றிப் பார்த்த பார்த்திபன், "மகத்தான வரலாறு. பார்க்கும் போது எமோஷனாக இருக்கிறது''’என்று நெகிழ்ந்தார்.
இந்தக் கண்காட்சிக்கு தி.மு.க.வினரோடு பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் திரள் திரளாக வந்துகொண்டேயிருக்கின்றனர். நாம் இருந்த நேரத்தில் மண்ணடி மியாஸ் பள்ளி இஸ்லாமிய மாணவியரும், சி.எஸ்.ஐ. ஆண்டர்சன் பள்ளி மாணவர்களும் வரிசையில் வந்து கண்காட்சியைக் கண்டு களித்தனர். அப்போது ஆண்டர்சன் பள்ளி மாணவியான ஹரிணி ’"கண்கட்சியைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பா சிறையில் அவரை போலீஸ் நெஞ்சில் உதைக்கிற காட்சியைப் பார்த்ததும் பயந்துட்டேன். எவ்வளவு கஷ்டங்களை நம் சி.எம். சந்திச்சிருக்கார்னு எங்களுக்குப் புரியுது. ஹி ஈஸ் கிரேட்''’என்றார். இதுபோன்ற தாக்கங்கள் கண்காட்சியின் வெற்றியை உணர்த்துகின்றன.
இந்தக் கண்காட்சியை ஒருங்கிணைத்திருக் கும் நடிகர் ஜோ மல்லூரியிடம் பேசியபோது “"கலைஞர் நூற்றாண்டுக்காக ஒரு புகைப்படக் கண்காட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசனை நடந்தபோது, அமைச்சர் சேகர்பாபு திடீரென்று, நம் முதல்வரின் 70-ஆவது பிறந்தநாளுக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை உடனே ஏற்பாடு செய்யவேண்டும் என்று அதிரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார். இரவு பகல் பாராமல் அவர் எப்படி செயல்படுவார் என்பதை, எங்களோடு அவர் செலவிட்ட நேரமே சாட்சி. அரசு ஆர்ட்ஸ் கோபி அவர்களுடன் இணைந்து, 15 நாள் அவகாசத்தில் இந்த புகைப்படக் கண்காட்சியை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் முக்கியமான படங்கள் எங்களிடம் இருக்கின்றன. எல்லாவற்றையும் தொகுத்து விரைவில் புகைப்பட நூலாகவும் வெளியிடும் திட்டமும் இருக்கிறது'' என்றார் உற்சாகத்தோடு.
இந்தக் கண்காட்சியில் 174 படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அத்தனையும் பேசுகின்றன. சொல்லப் போனால், திராவிட இயக்க வரலாற் றில் முதல்வர் ஸ்டாலினின் ஒட்டுமொத்த நாட்களும், பின்னிப் பிணைந்திருப்பது குறித்து உரையாற்றுகின்றன என்றே சொல்லலாம்.
மொத்தத்தில், 50, 60 ஆண்டுகளாக நாம் அவரோடு சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வை, இந்தக் கண்காட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
-நாடன்
படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்