tamilisai

மோடியின் 3.ஞ அமைச்சரவை பதவியேற்றாலும் பிரச்னைகள் இன்னும் முடிந்தபாடில்லை. இஸ்லாமியர் ஒருவர் கூட மந்திரியாகவில்லை. சபாநாயகர் பதவி யாருக்கு, அமைச்சர்களின் இலாகாக்கள் எவை என இதில் பிரச்னைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குஜராத்திலும் பீகாரிலும் மத்தியப் பிரதேசத்திலும் இஸ்லாமியர்கள் கணிசமாக வாக்களித்திருந்தனர். இந்த இடங்களில் மோடி பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகையில் இருபது கோடிக்கும் மேல் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தருக்குக் கூட அமைச்சரவையில் இடம் தரவில்லை. கிரிஸ்தவர்களுக்கென கேரளாவில் தேர்தலில் போட்டியிடாத ஜான் குரியன் என்பவருக்கு மந்திரிசபையில் இடம் கொடுத்தார். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஏன் இடம் தரவில்லை எனக் கேட்டதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து இஸ்லாமியர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம் என திமிராக பதில் வந்தது.

Advertisment

இது மதச்சார்பற்ற கட்சிகளை நடத்திவரும் தெலுங்குதேசம், நிதிஷ்குமாரின் ஜனதாதளம் ஆகிய கட்சிகளை கடும் அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தவர் பிரபுல் பட்டேல். பழுத்த காங்கிரஸ்காரரான இவர் பலமுறை கேபினெட் அமைச்சராக இருந்திருக்கிறார். இவருக்கு ராஜாங்க மந்திரியாக பதவி கொடுப்பதாக மோடி சொல்ல.. அவர் அதை ஏற்காமல் பதவியேற்பு விழாவின்போதே மோடிக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அவர்கள் ஏற்கெனவே வகித்த பதவிகளை மறுபடியும் கொடுப்பதற்கும் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே கூட்டணி அமைச்சரவையில் முக்கிய பதவி என்பது சபாநாயகர் பதவிதான். நாளை பா.ஜ.க. எந்த ஒரு கட்சியை உடைத்தாலும் அதை ஏற்பதும் மறுப்பதும் ஸ்பீக்கரின் வேலைதான். இந்தப் பதவியை கூட்டணிக் கட்சிகளுக்குத் தர வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்தது. ஆனால், பா.ஜ.க. அதை மறுத்துவிட்டது.

இதற்கிடையே தமிழகத்திலிருந்து யார் அமைச்சராவது என்பதில் மாநிலத் தலைவருக்கும், தமிழிசைக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்தது. மத்திய பா.ஜ.க. அரசின் தமிழகப் பிரதிநிதிகள் என்கிற விஷயம் வந்தபோது, ""தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் தோற்று விட்டார்கள். நான் பத்துமுறை பிரச்சாரத்துக்குச் சென்றேன். கும்பல், கும்பலாக பொதுமக்களைக் கூட்டி வந்து எனக்கு சீன் போட்டார்கள். மொத்தம் மூன்று ரோட் ஷோக்களை நடத்தினேன். இந்த முயற்சிகளை நான் உத்தரப் பிரதேசத்தில் நடத்தியிருந்தால் கட்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கும். கர்நாடகத்தில் நான் எடுத்த முயற்சி ஓரளவு பலனைத் தந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் எனது முயற்சி வீண் முயற்சியாகிவிட்டது. தமிழகத்தில் அதிகம் பிரச்சாரம் செய்யாதீர்கள் என அமித்ஷா சொன்னார். அதை மீறி நான் எடுத்த முயற்சிகளை வீணடித்து விட்டார்கள் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வினர்'' என மோடி வருத்தப்பட்டார்.

Advertisment

அதனால் தமிழகத்தைச் சார்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி தர வேண்டாம் என மோடி முடிவெடுத்தார். அவரது முடிவின்படி எல். முருகனுக்குப் பதிலாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தலித் தலைவருக்கு மந்திரி பதவி என முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு பா.ஜ.க. வட்டாரங்களில் ஒரு பெரிய விவாதத்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்த ஆரம்பித்தார்கள். அதன் முடிவில் இரண்டு அமைச்சரவைப் பதவிகள் தமிழகத்துக்கு என முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று முருகன் இன்னொன்று யார்? என்ற கேள்விக்கு ஏற்கெனவே கவர்னர் பதவி வகித்த தமிழிசைக்குத் தரலாம் என முடிவு செய்யப்பட்டது. உடனே மாநிலத் தலைவர் அவருக்கு நெருக்கமான வார் ரூம் தலைவர் வாராகியை அழைத்து தமிழிசைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்துமாறு உத்தரவிட்டார்.

பொதுவாக பா.ஜ.க.வுக்குள் விவாதம் நடக்குமே ஒழிய சமூக வலைத்தளங்களில் பெரிதாக வெளிவராது. அதற்கு நேர்மாறாக மாநிலத் தலைவரின் ஆதரவாளர்கள் தமிழிசையை பின்னியெடுக்க டென்ஷனான தமிழிசை, மாநிலத் தலைவரை நேரடியாக விமர்சித்தார். அத்துடன் டெல்லிக்குப் புறப்பட்டுப் போய் தனக்கு மந்திரி பதவி கிடைக்க ஆதரவைப் பெற முயன்றார். உடனே மா.தலைவர் சிருங்கேரி மடாதிபதிகளை கர்நாடகாவில் சந்தித்து “"அதிகாரியாக இருந்த என்னை நீங்கள்தான் அரசியல்வாதி ஆக்கினீர்கள். இப்பொழுது எப்படியாவது என்னை மத்திய அமைச்சர் ஆக்குங்கள்'’என கெஞ்சினார். மடாதிபதிகள் கொடுத்த ஊக்கத்துடன் டெல்லிக்கு வந்த மாநிலத் தலைவர் அமித்ஷா, மோடி என அனைவர் வீட்டுக் கதவையும் தட்டினார். யாரும் கதவைத் திறக்கவில்லை. இந்த மோதலால், யாரும் வேண்டாம் என தமிழகத்துக்குக் கிடைக்கவிருந்த இரண்டாவது மந்திரி பதவி வாய்ப்பு பறிபோனது.

பதவியேற்புக்கு முன்பு பிரதமர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள எல்.முருகன் மட்டுமே அழைக்கப்பட்டார். தனக்கு ஆதரவான மீடியாக்களிடம், "நான் மந்திரியாவேன்' என செய்திகள் வெளியிடச் சொன்ன மா.த., “"என்னை மந்திரி பதவி ஏற்கச்சொல்லி மோடி நிர்ப்பந்தித்தார். ஆனால், இப்பொழுது பா.ஜ.க. தமிழகத்தில் தோற்றுப்போய்விட்டது. இப்பொழுது பதவியேற்பதைவிட அடுத்து தமிழகத்தில் நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இவற்றில் பா.ஜ.க.வை பெரும் வெற்றிபெற வைத்துவிட்டு நான் அமைச்சர் ஆகிறேன் என சொல்லிவிட்டு வந்தேன்'’என்று ஊடகங்களிடம் பேசினார்.

உண்மையில் மா.த.வுக்கு அடுத்த ஆறு மாதம்வரை அவரது திறமையை நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது பா.ஜ.க. தேசியத் தலைமை. இதற்கிடையே மா.த.வை வெளிப்படையாக எதிர்க்கும் தமிழிசையை, தேசியத் தலைமையைச் சேர்ந்த யாரும் கண்டிக்கவில்லை. மா.த. டெல்லியில் இல்லாதபோது தமிழிசை மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை டெல்லியில் நடத்தியதோடு அதை எக்ஸ் தளத்திலும் பதிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆக... தமிழக பா.ஜ.க.வில் கோஷ்டிச் சண்டை உச்சத்திலுள்ளது.