கீழ்பவானி வாய்க்கால் மூலமாக இப்பகுதியிலுள்ள சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், முழுக்க முழுக்க மண் வாய்க்கால் தான். இதன்வழியாகத் தண்ணீர் போகும்போது அப்பகுதி நிலத்தினுள் தண்ணீர் இறங்குவதால், நிலத்தடி நீர் அதிகரித்து, ஏரிகள், விவசாயக் கிணறுகள் அனைத்தும் பயன்பெறும். தற்போது இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முதற்கட்டமாக ரூ.950 கோடி அறிவிக்கப்பட்டு, சென்ற மாதம் கோவை வந்த பிரதமர் மோடி, திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இத்திட்டப்படி கான்கிரீட் தளம் அமைத்தால், வாய்க் காலில் செல்லும் தண்ணீர், நிலத்துக்குள் இறங்க வாய்ப்பிருக்காது. எனவே, ஏரி, கிணறு களில் நிலத்தடி நீர் குறைந்து அப்பகுதியே வறண்டுவிட வாய்ப்புள்ளது. இக்கால்வாயை நம்பியிருந்த லட்சக்கணக்கானோருக்கு இது பேராபத்து என்பதால் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசு செவிமடுக்கவில்லை. கோபி தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் செங்கோட்டை யனும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் கொதிப்படைந்த ஈரோடு மாவட்ட விவசாயிகள், செங்கோட்டையனுக்கு எதிராக, நம்பியூரைச்சேர்ந்த மூர்த்தி என்பவரை சுயேட்சையாகக் களமிறக்கியுள்ளனர். இவர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட இளைஞர் அணித் தலைவராக உள்ளார். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில், ""கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து, 8 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங் களை நடத்திவந்தோம். இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் தமிழக அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்றும் எச்சரித்திருந்தோம். ஆனால் எடப்பாடி அரசு கமிஷனுக்காக இத்திட்டத்தை பிரதமர் மோடியை வைத்து அறிவித்துவிட்டது. இதற்கு எங்களது எதிர்ப்பைக்காட்ட, கோபி தொகுதியில் செங்கோட்டையனுக்கு எதிராக மூர்த்தியைக் களமிறக்கியுள் ளோம். மேலும் கள்ளுக்கு தடையை நீக்கவேண்டும், தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிக்கு மாற்றவேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு எருமைப்பால் லிட்டருக்கு ரூ.60, பசும்பால் லிட்டருக்கு ரூ.50 என விலையை உயர்த்திக் கொடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டும் நாங்கள் தேர்தலில் இறங்கியுள் ளோம்'' என்றனர்.