செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்கிற செய்தி வந்ததும் கொங்கு மண்டலம் முழுக்க தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்தனர். அமைச்சரவை மாற்றம் எப்பொழுது, யார் புதிய அமைச்சர்கள் என்கிற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில், "அமலாக்கத்துறை சரியாக வழக்கை கையாளவில்லை' என நீதிபதி குற்றம்சாட்டியிருந்தார்.
செந்தில்பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு, அவர் ‘ஜெ.வின் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கினார் என எழுந்த புகாரின் பேரில், அவர் எடப்பாடி ஆட்சியில் தினகரனுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எடப்பாடி வழக்கு போட்டார். அதை அமலாக்கத்துறை வழக்காக எடுத்து, அந்த ஊழலில் பெற்ற லஞ்சப்பணத்தை அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்தார் என இன்னொரு வழக்காக பதிவுசெய்தது. செந்தில்பாலாஜி மீதான போக்குவரத்து முறைகேடு வழக்கு வேகமாக நடந்துவருகிறது. ஆனால், அவர் மீது பதியப்பட்ட அமலாக்கத்துறை வழக்கில் போதிய முன்னேற்றம் இல்லை.
PMLA என்கிற பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. கடந்த பதினைந்து மாதங் களாக அவருக்கு ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைத்திருந்தது. அந்த வழக்கை நடத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகளை அமலாக்கத்துறை செய்தது. அமலாக்கத்துறையின் குளறுபடிகளை ஒவ்வொன்றாக கேள்வி கேட்டார் செந்தில்பாலாஜி. அதற்கு சால்ஜாப்பான பதில்களை அமலாக்கத்துறை சொன்னது. அந்தப் பதில்களை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் செந்தில்பாலாஜி. அதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒரு ஊழல் வழக்கை பணப் பரிமாற்ற சட்டத்தின்படி வழக்காக மாற்றி அதில் செந்தில்பாலாஜியை கைது செய்ததில் அமலாக்கத்துறை பின்பற்றிய நடைமுறை களை கேள்வி எழுப்பி, அவருக்கு ஜாமீன் வழங்கியது. தனி நபர் சூரிட்டிகளுடன் வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுப்படி செந்தில்பாலாஜி வாரம் இருமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என கண்டிஷன் போடப் பட்டுள்ளது. காலை பத்தரை மணிக்கு இந்த உத்தரவு வந்தாலும், ஜாமீன் நிபந்தனைகளில் எத்தனை பேர் சூரிட்டி கையெழுத்து என்ற குழப்பம் நிலவியது.
ஆனால், அவர் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையையும் சுப்ரீம் கோர்ட் விதிக்க வில்லை. அதனால் மறுபடியும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இடம் பெறுகிறார். கடந்த பதினைந்து மாதங்களில் இதயநோயாளியான செந்தில்பாலாஜி, அவருக்கு ஆபரேஷன் செய்த காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆலோசனை செய்வதற்குக்கூட அமலாக்கத் துறை அனுமதிக்கவில்லை. இப்படி மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொண்ட செந்தில்பாலாஜியின் உடல்நிலை பெருமளவு சீரழிந்துள்ளது. சிறையை விட்டு வெளியேவரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள காவேரி மருத்துவமனைக்கு செல்வார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள். அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வாரா என டாக்டர்கள் முடிவுசெய்வார்கள் என்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்ய நினைத்த தி.மு.க. செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுதலையாகி வர வேண்டும் என காத்திருந்தது. செந்தில்பாலாஜிக்குப் பின்பு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கவிதா, டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் ஜாமீனில் விடுதலையான பிறகும் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஆனால், நம்பிக்கை இழக்காமல் தி.மு.க. போராடிவந்தது. சித்தார்த் லூத்ரா, முகுல் ரோத்தகி போன்ற சீனியர் வழக்கறிஞர்களை அமர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் வாதாடியது. அவர்கள் தொடர்ச்சியாக மோடி ஆட்சியில் அமலாக்கத்துறைக்கு எதிராக வரும் தீர்ப்புகளின் வரிசையில் செந்தில்பாலாஜிக்கும் ஜாமீன் பெற்றுத் தந்தனர். அமலாக்கத்துறையால் பழி வாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சியினரின் கடைசிநபர் செந்தில் பாலாஜி.
அடுத்ததாக, செந்தில்பாலாஜி அமைச்சராவதோடு உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறார். சீனியர் அமைச்சர்கள் இருவரிடம் இருக்கும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்படுகிறது. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோ.வி.செழியன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகின்றனர். மூத்த அமைச்சரிட மிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படும். அவரது இலாகாக்கள் வேறு நபர்களிடம் வழங்கப்படும். இதுபற்றி மூத்த அமைச்சரிடமே பேசிவிட்டார் ஸ்டாலின் என்கிறது தி.மு.க. வட்டாரங்கள். காஞ்சிபுரத்தில் நடக்கும் தி.மு.க. பொதுக் கூட்டம் முடிந்தபிறகு 29ஆம் தேதிவாக்கில் பதவியேற்பு விழா நடக்கும் என்கிறார்கள் தி.மு.க.வினர்.