சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, விரைவில் விடுதலையாவார் என சொல்லப்படுகிற சூழலில், சசிகலாவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி தொடர்ந்துள்ள வழக்குகள் இறுதிக்கட்ட விசாரணைக்கு வரவிருக்கிறது. இவ்வழக்கு அதிமுக அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என தேர்தல் வழக்கறிஞர்கள் தரப்பில் எதிரொலிக்கின்றன. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகும் சசிகலாவின் அரசியலுக்கு உங்கள் வழக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்களே?
அ.தி.மு.க.வின் சட்டவிதிகளின் படி பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுச்செய லாளர் பதவியையே ரத்து செய்து புதிய விதிகளை உருவாக்கியது செல்லாது என்றும் தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு மனுக் களை தாக்கல் செய்திருக்கிறேன். அதில் விரைந்து முடிவெடுக்க விருக்கிறது ஆணையம். அதே சமயம், இரட்டைஇலை சின்னம் தொடர்பான பிரச்சனையில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாக தீர்ப்பளித்த ஆணையத்தை எதிர்த்து, சசிகலா-தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததிலும் அவர்களுக்கு எதி ராகவே தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தரப்பு முறையிட்ட ரிவியூ பெட்டிசனும் அண் மையில் தள்ளுபடி யானது.
அதேசமயம், பொதுச்செயலாளர் நியமனம் குறித்த முடிவை அறிவிக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத் தில் நான் போட்டுள்ள வழக்கின் விசாரணையின் போது, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் உரிமை விதிகளை ரத்து செய்தது தவறு’என ஒரு அப்சர்வேஷனை கொடுத்துள்ளது. விரைவில் தீர்ப்பு வரும்போது சசிகலாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
சசிகலாவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?
விடுதலை ஆனதற்குப் பிறகு அடுத்த 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் நிற்க முடியாது. ஆனால், கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படாதது அவருக்கு சாதகமாக இருப்பதால், அ.தி.மு.க.வை கைப்பற்ற தீவிரமாக முயற்சிப்பார். எனக்கு கிடைக்கிற தகவல்படி, எடப்பாடியும்-பன்னீர்செல்வமும் இல்லாத அதிமுகவை கட்டமைக்கவே சசிகலா விரும்புகிறார். அந்த வலிமையை உருவாக்கினால் மட்டுமே அவருக்கு அரசியல் எதிர்காலம் உண்டு.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சை தவிர்த்து அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது எந்த வகையில் சாத்தியம்?
சசிகலாவின் தயவில் முதல்வரான எடப்பாடி, மத்திய அரசிடமுள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சசிகலாவின் முன்விடுதலைக்கு முயற்சிக்காமல் துரோகமிழைத்துவிட்டார் என்கிற கோபம் முக்குலத்தோர் சமூகத்திற்கு இருக்கிறது. அதே போல, முக்குலத்தோரான ஓ.பி.எஸ்., சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை நடத்தியிருக்கக் கூடாது என்பதே முக்குலத்தோர் சமுகத்தின் நிலைப் பாடு. எடப்பாடியை புறக்கணித்தால் கவுண்டர் சமூகம் சசிகலாவை ஏற்கத் தயங்கும். அதனை சமாளிக்கத்தான் அதே சமூகத்தை சேர்ந்த என்னையும் சசிகலாவையும் ஒரு புள்ளியில் இணைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இது நடக்கும்பட்சத்தில் பல விசயங்களில் சசிகலாவின் திட்டம் சாத்தியமாகும்.
அ.தி.மு.க.வுக்குள் சசிகலாவை கொண்டுவர பா.ஜ.க.வின் ஆதரவுடன் எடப்பாடி முயற்சிப்ப தாகத்தானே தகவல்கள் வருகின்றன?
தினகரனை பலகீனப்படுத்த எடப்பாடியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பரப்பப்படும் பொய்கள் அவை. என்னுடைய வழக்கால், பொதுச்செயலாளர் கட்டமைப்பில் அதிமுக மீண்டும் வரவிருக்கிறது. அதனை வைத்து எடப்பாடியின் ஆளுமையில்லாத அ.தி.மு.க.வை உருவாக்குவதே சசிகலாவின் திட்டம்.
மத்திய அரசின் அனைத்து உதவிகளும் எடப்பாடி-பன்னீருக்கு இருப்பதால் தினகரன் கட்சியை வழிநடத்துவதற்குத்தான் சசிகலாவுக்கு வாய்ப்புகள் அதிகம் எனப்படுகிறதே?
ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை தினகரன் கையிலெடுத்ததையும், தனி கட்சி துவக்கியதையும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் சசிகலா. ஜா-ஜெ அணி என இருந் ததுபோல, சசிகலா விடுதலையாகும் வரை ஒரு அணியாக நின்று போராடியிருக்க வேண்டுமே தவிர, தனிக்கட்சியில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால், தினகரன் கட்சியை சசிகலா வளர்க்கமாட்டார். அ.தி.மு.கவை வளர்க்கவே முயற்சிப்பார்.
தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
குன்ஹா தீர்ப்பின்படி சிறையி லிருந்த 21 நாட்கள், சசிகலாவின் 4 வருட சிறை தண்டனை காலத்தி லிருந்து கழிக்கப்படும். அந்த வகை யில், 2021, ஜனவரி 25-ந்தேதி சட்டரீதியாக விடுதலையாகலாம். அதேசமயம், 10 கோடி ரூபாய் சசிகலாவுக்கு அபராதம் விதிக்கப் பட்டிருப்பதால் அந்த பணத்தை அவர் கட்டாதபட்சத்தில் மேலும் 1 வருட சிறை தண்டனையை அனு பவிக்க நேரிடும். அதனைக் கட்டிவிடும் சூழலில் சசிகலா இருக்கிறார்.
பெங்களூர் சிறையில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் வேலைகளை முழுமையாக செய்திருந்தால் நன்னடத்தை காரணமாக குறிப்பிட்ட நாட்களை தண்டனை காலத்தில் கழிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஜெயில் சூப்பிரடெண்ட்டுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரி ரூபாவின் புகாரின்படி சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்கிறது. அது தொடர்பான விசாரணை கமிசனின் அறிக்கை மீது கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்பதில்தான் சசிகலாவின் விடுதலை அடங்கியிருக்கிறது.
-இரா.இளையசெல்வன்