மிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் தனது பார்வையை நக்கீரனிடம் பகிர்ந்துகொள்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கொறடா எஸ்.எஸ்.பாலாஜி.

ss

"நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை கூட்டத் தொடரில், 31-ந் தேதியிலிருந்து கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல் கேள்வியை கேட்கும் வாய்ப்பு பா.ம.க.வின் சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணிக்கு கிடைத்தது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை முழுமையாக தடுப்பது குறித்த கேள்வியைக் கேட்டார் ஜி.கே.மணி. இந்த கேள்வி, உள்துறை சம்பந்தப்பட்டது என்பதால் அத்துறை யின் அமைச்சரான முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு விளக்கமான பதில் தந்தார். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கேள்வி-பதில் நேரத்தில் முதலமைச்சர்கள் பதில் சொன்னதில்லை. அதற்கேற்ப, முதல்வர் வசமுள்ள துறைகளின் மீதான கேள்விகளை உறுப்பினர்கள் கேட்டிருந் தால் அந்த கேள்விகள் நீக்கப்பட்டுவிடும்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமிருப்பதற்கான ஆதாரத்தை எந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது காட்டினாரோ, அதே சட்ட மன்றத்தில் முதல்வராக இருந்து போதைப்பொருள் தடுப்பு குறித்து பதிலளித்தார். பத்தாண்டுகளில் கேள்வி நேரத்தில் முதல்வர் பதில் சொல்வது இதுதான் முதல்முறை. போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் அரசுக்கு உள்ள முனைப்பை முதல்வரின் புள்ளிவிவரங்களுடனான பதில் எடுத்துக்காட்டியது.

Advertisment

kk

இதனைத்தொடர்ந்து பல்வேறு வகையிலான கேள்விகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர். "மணல் மற்றும் ஜல்லிகள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது' குறித்த கேள்விக்கு அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், "சிட்லப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பது' குறித்த கேள்விக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படுமா?' என்ற கேள்விக்கு அமைச்சர் பொன்முடி, "பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுவது' குறித்த கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் விரிவாகவும் தெளிவாகவும் பதில்கள் சொன்னது சிறப்பாக இருந்தன.

இந்த இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷை பற்றி சில வரிகள் குறிப்பிடத் தோன்றுகிறது. அதாவது, சபைக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லாததுபோல் புன்னகை மாறாமல் பளிச்சென்று அமர்ந்திருப்பார். ஆனால், தனது துறை சார்ந்த விசயங்கள் வருகிறபோது, அவர் பதிலளிக்கும் பாய்ச்சலில் ஒரு வேகம் இருப்பதை கவனித்திருக்கிறேன். அவ்வளவு லாவகமாக அவரது பதில் தெறிக்கும்.

Advertisment

ssb

கேள்வி நேரம் முடிந்ததும், விழுப்புரத்திலுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி. அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., உயர்கல்வியின் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் அந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாகக் கூறினர்.

ss

இதனை பொன்முடி ஏற்காமல் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்த, ஓ.பி.எஸ். பேசுவதற்கு வாய்ப்புக் கேட்டார். ஆனால், "அறிமுக நிலையிலேயே எதிர்த்த பிறகு கருத்துக் கூற முடியாது' என சட்ட விதிகளை சுட்டிக்காட்டிய அவைமுன்னவர் துரைமுருகன், "மசோதா மீதான ஆய்வின்போது பேசலாம்' என்றார். இதனை ஏற்காத அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓ.பி.எஸ். தலைமையில் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் மசோதாவை ஆதரித்து பேசின. அதேசமயம் மசோதாவுக்கு பா.ஜ.க. தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, தொழில்துறை, தமிழ்வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன், தான் ஒரு தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் என்கிற உணர்வை விட, ஒன்றிய அரசின் மாநில நலன்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளை நியாயப் படுத்தும் உணர்வுகளையே வெளிப்படுத்தினார். இதனால் அடிக்கடி அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவானது.

இதனால் "அமைச்சர்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை எனது நேரத்தில் சேர்க்கக் கூடாது' என வானதி சீனிவாசன் சொன்னபோது, "கடந்த ஆட்சி காலத்தில் அப்படித்தான் கணக்கிடப்பட்டது' என்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நடைமுறையில் கடந்த கால ஆட்சியினை பின்பற்ற வில்லை. "முதல்வரின் ஆணைக்கிணங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதை கடைப்பிடிக்கிறேன்' என்றார் தனது நடுநிலைமையை விவரிக்கும் வகையில்.

ss

அப்போது பேசிய பேரவையின் பா.ஜ.க.வின் தலைவர் நயினார் நாகேந்திரன், "சட்ட முன்வடிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் சரிதான். ஆனால், முன்னாள் முதல்வரின் பெயரை நீக்கியதில் எங்களுக்கு உடன்பாடில்லை' என்று சொல்ல, "அப்படியானால் கேல் ரத்னா விருதுக்கு இருந்த இராஜீவ்காந்தி பெயரை பா.ஜ.க. அரசு நீக்கியது ஏன்?' என்றார் பேரவையின் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

இறுதியில் பேசிய அமைச்சர் பொன்முடி, "ஜெயலலிதாவின் பெயரை நீக்குவது எங்களுடைய நோக்கம் அல்ல. பெயரை நீக்குவதுதான் எங்களின் நோக்கமாகயிருந்திருந்தால் மீன்வள பல்கலைக்கழ கத்தின் பெயரை நீக்கியிருக்க மாட்டோமா? இன்னும் சொல்லப்போனால் கலைஞர் பெயர்தான் பல இடங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் நீக்கப்பட்டது' என்று பதிலடி தந்தார். இதனையடுத்து சட்ட முன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.

தொழில்துறை சார்பில் பல்வேறு அறி விப்புகள் செய்யப்பட்டன. குறிப்பாக, சிப்காட் பகுதிகளில் ஏரிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, திருப்போரூரில் உப்பு தொழிற்சாலை போன்ற அறிவிப்புகள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்கிற வகையில், எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன.

செப்டம்பர் 1-ந் தேதி சபை கூடியது. பொதுவாக, 9:15-க்கெல்லாம் பெரும்பாலான உறுப்பினர்கள் சபைக்கு வந்துவிடுவதுண்டு. பேரவைக் குள் வரும் அமைச்சர்களோடு கட்சி மாச்சரியமில்லாமல் உறுப்பினர்கள் கலந்துநின்று பேசிக்கொண்டிருப்பது வழக்கம். 9:55 மணி வாக்கில் முதல்வர் வருகை தந்ததும் சில நிமிடங்களில் சபாநாயகர் பேரவைக்குள் வருவார். சபை தொடங்கும்.

செப்டம்பர் 1-ந் தேதி சபா நாயகர் தனக்கான நேரத்தில் உள்ளே வந்துவிட்டார். ஆனால், முதல்வர் வரவில்லை. அதுபற்றி ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்ட னர். அப்போதுதான், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ். அவர்களின் மனைவி மாரடைப்பால் மரணமடைந்து விட்ட செய்தியும், அவருக்கு ஆறுதல் சொல்ல முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார் என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. எல்லோருமே அதிர்ச்சி யடைந்தனர். சட்டப்பேரவையே சோகத்தில் மூழ்கியது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை.

கேள்வி நேரத்துடன் பேரவை தொடங்கியது. நெடுஞ்சாலை அமைப்பது குறித்து ஒரு கேள்வி எழுப்பினார் நான் சார்ந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரவைத் தலைவர் சிந்தனைச்செல்வன். அதற்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார் அமைச்சர் வேலு.

hh

கேள்வி நேரம் முடிந்ததும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அம்பேத்குமார், வி.ஜி.ராஜேந்திரன் என ஆளும் கட்சி உறுப்பினர் கள் பேசிக் கொண்டிருந்தனர். ஓ.பி.எஸ்.சின் துணைவியார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சென்றுவிட்டதால் அவர்களது இருக்கைகள் காலியாக காட்சி தந்தன. அஞ்சலி செலுத்திவிட்டு அவர்கள் திரும்பினர்.

அப்போது, என்னிடம் வந்த சிந்தனைச் செல்வன், "இன்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேசும் நிலையில் இல்லை. அதனால் விடுதலை சிறுத்தைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதில், நீங்கள் பேசுகிறீர்களா? என்று கேட்டார். இன்றைய விவாதத்திற்கு எந்த முன் தயாரிப்பும் நான் செய்யவில்லை. ஆனால், வாய்ப்புகள் வரும்போது அதனை தவிர்க்க வேண்டுமா? தவற விடவேண்டுமா? என நினைத்து, பேசுகிறேன்' என சிந்தனைச்செல்வனிடம் சொல்லிவிட்டேன்.

இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைக்கு திரும்பியிருந்தார். வீட்டுவசதித்துறை மீதான விவாதம் என்பதால் அத்துறை சார்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், "தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த பெயர் மாற்ற அறிவிப்பின்போது, "குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கிய கலைஞர் அவர்களின் அரும்பணிகளையும் அந்த வாரியம் மேம்படுத்தப்பட்ட வரலாறுகளையும் அவர் சுட்டிக்காட்டியபோது புதிய இளம் உறுப்பினர்களுக்கு பாடம் நடத்துவது போலிருந்தது. மிகச் சிறப்பான உரை அது.'

விவாதத்தில் பேசிய உறுப்பினர் நீலமேகம், சென்னை அண்ணாசாலையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர். மறைவின்போது தகர்க்கப்பட்டது. "அந்த சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட வேண்டும்' என்று வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்யும் ஐ.ஐ.டி. குழுவினரின் பட்டியலை வாசித்தார். அதேபோல வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, "அரசு கட்டிடங்கள் மட்டுமல்ல; இனி தனியார் கட்டிடங்களையும் அரசு ஆய்வு செய்யும்' என்று தெரிவித்தார்.

எனக்கு கிடைத்த வாய்ப்பில் பேசிய நான், "மகளிர் உரிமையில் தலையாய உரிமை அவர்களின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமைதான். "பண்பாட்டு காவலர்கள்' என்ற பெயரில், அந்த உரிமையை பறிக்க முற்படும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும்; அது மட்டு மல்ல, சமூகத்தில் அதிகரித்துவரும் குடிநோயாளிகளால் பாதிப்புக்குள்ளாகும் இல்லத்தரசிகளுக்காக சிறப்பு திட்டம் வேண்டும்; பல ஆண்டுகளுக்கு முன்பு வரையறுக்கப்பட்ட பயனாளிகளுக்கான வரைமுறைகள் மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டும்; அடுக்குமாடி கட்டிடங்களில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்; இவற்றுக்கான மின்கட்டணத்தை வர்த்தக பயன்பாடு அளவீட்டி லிருந்து சாதாரண கட்டண அளவீடாக மாற்றித்தர வேண் டும்'‘உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன்.

உறுப்பினர்கள் பலரும் பேசியதைத் தொடர்ந்து துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க.வில் ஒரு சோக நிகழ்வு நடந்ததால் சபையில் இறுக்கம் தெரிந்தது. பொதுவாக, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஜனநாயக செயல்களுக்கு முக்கியத்துவம் தருகிறார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக சட்டமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு தரப்பும் தங்களின் கோரிக்கைகளுக்காகவும் உரிமைகளுக்காக வும் வாதாடுவதில் ஏற்படும் வார்த்தை மோதல்களைத் தவிர, மற்றபடி இயல்பாகவும் கலகலப்பாகவும் இருப்பது இந்த பேரவையின் சிறப்பம்சமாகப் பார்க்கிறேன்.

-தொகுப்பு : இரா.இளையசெல்வன்