ரசியல் பிரபலம் ஒருவரது உறவினர் என்ற அடையாளம் இருந்தால் போதும், மக்கள் தேடிவந்து வலையில் விழுந்து லட்சங்களை இழக்கின்றனர்.

தனது அடையாளமாக நல்லதம்பி என்ன சொல்கிறார்?

"நான், முன்னாள் சபாநாயகர் காளி முத்துவின் கடைசித்தம்பி ஆவேன். வழக்குரைஞ ராக, விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, மதுரை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞராகப் பணி செய்துள்ளேன். அரசியலில் ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய கவுன்சிலராக, மாவட்ட கவுன்சிலராகப் பதவி வகித்துள்ளேன். என் மனைவி மாலதியும் மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார்.''

Advertisment

vc

நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள இந்த அடையாளமே, லஞ்சம் கொடுத்து அரசு வேலையைப் பெற்றுவிடத் துடித்தவர்களை ஈர்த்துள்ளது.

உடன்பிறந்த அண்ணன் ரவிச்சந்திரன் மற்றும் அண்ணி வள்ளி மீது நல்லதம்பி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை -

"2016 முதல் 2019 வரை கொடைக்கானல் - மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வள்ளி இருந்தார். அப்போது, பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தர் பணி பெற்றுத் தருவதாகச் சொல்லி, பலரிடமும் அதற்கான தொகைகளை ஏற்பாடு செய்யும்படி என்னிடம் கூறினார்கள். பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில், பசநஊப மதர் தெரஸா பல்கலைக்கழகம் மூலம் தேர்ச்சிபெற, போதுமணி, மங்கையர்க்கரசி, அன்புமணி ஆகியோருக்கு துணைவேந்தர் வள்ளி மூலம் நான் உதவினேன். இத்தகைய சேவைக்காக, ரவிச்சந்திரன் மற்றும் வள்ளியிடம் பலர் பணம் கொடுத்தனர். தகுதி யில்லாதவர்களை இவர்கள் தேர்ச்சி பெறவைத்த விபரம், மதுரை முனியசாமி போன்றோ ருக்குத் தெரியும். ஆவின் துறையில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் பெற்றது, மதர் தெரஸா பல்கலைக்கழகம். ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபோது, அவருடைய உதவியாளர் பாபுராஜ் மகன், ஆவின் மேலாளர் தகுதித் தேர்வில், தகுதியில்லாவிட்டாலும் தேர்ச்சியானது இப்படித்தான்.

கொடைக்கானல் விஜய் மனைவி சத்யா, கணினி உதவிப் பேராசிரியர் பணிக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் தந்தார். பெற்றுக்கொண்ட வள்ளி, மீதத் தொகை ரூ.10 லட்சத்தை ரெடி பண்ணச் சொல்லிவிட்டு, உதவிப் பேராசிரியர் கணிதம், வேதியியல் மற்றும் எழுத்தர் பணிக்கு வேறு ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யச் சொன்னார். வேதியியல் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஸ்ரீஜா என்பவரிடம் ரூ.20 லட்சம், கணித உதவிப் பேராசிரியர் பணிக்கு சத்யா என்பவரிடம் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.45 லட்சத்தை என் அண்ணன் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார்கள். எழுத்தர் பணிக்காக ஜெனிபரிடம் ரூ.4 லட்சம், சந்திராவிடம் ரூ.5 லட்சம், கிருஷ்ணம்மாளிடம் ரூ.5 லட்சம், சுகன்யாவிடம் ரூ.5 லட்சம், கீர்த்தனாவிடம் ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.23 லட்சத்தை, நான் சொன்னதன் பேரில் விஜய் கொடுத்தபோது, அண்ணனுடன் அண்ணியும் உடன் இருந்தார். இதுபோக, ரவிச்சந்திரன் சாத்தூர் -மேட்டமலை பூபாலன், சாத்தூர் மணி ஆகியோரிடம் பஞ்சாயத்து கிளார்க் வேலைக்கு ரூ.12 லட்சம் வாங்கினார்.

Advertisment

vcc

வாங்கிய பணத்துக்கு எந்த வேலையும் நடக்காத சூழலில், என்னுடைய அண்ணன் ரவிச்சந்திரனை சாத்தூர் சட்டமன்ற வேட்பாளராக, அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. என்மூலம் பணம் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி தந்தார்கள். நான் அண்ணன் ரவிச்சந்திரனிடம், அவரும் அண்ணியும் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கேட்ட போது, ‘"அ.தி.மு.க. தலைமை தேர்தலுக்குப் பணம் கொடுக்கும். அந்தப் பணத்தில் செட்டில் செய்து விடுகிறேன்'’ என்றார். அந்த வகையில், அவருக்கு அ.தி.மு.க. தலைமை கொடுத்த ரூ.10 கோடியே 80 லட்சம் ரூபாயிலிருந்து, ரூ.25 லட்சத்தை ஊட்டியில் வைத்து என்னிடம் திருப்பிக் கொடுத்தார். தருவதாகச் சொன்ன மீதி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்.

அண்ணி வள்ளியின் துணைவேந்தர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அண்ணன் வாங்கிய ஊழல் பணத்தில், அண்ணியின் பெயரிலும், அவருடைய மகள் பெயரிலும் பல இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்த பட்டியல் என்னிடம் உள்ளது.''

நாம் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கா.ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்டோம்.

"காளிமுத்தண்ணன் பேரை களங்கப்படுத்திட்டு இருக்கான். எவ்வளவோ அசிங்கப்படுத்திட்டான். என் மனைவி வள்ளி பல்கலைக்கழகத்துல இருந்த காலத்துல, கல்வித்துறையில் ரொம்ப ஹானஸ்ட் டான துணைவேந்தர்ன்னு பேர் வாங்கினவங்க. ஒரு போஸ்டிங் போட்டால்கூட தவறாகிடும்ன்னு எந்த போஸ்டிங்கும் போடல. நல்லதம்பியை கட்சியைவிட்டு நீக்கிட்டோம்கிற காழ்ப் புணர்ச்சில பொய்யான புகார் கொடுத்திருக்காரு. அவரு பண்ணுன தவறுகளுக்கு எல்லாம் வேற யாரையாவது பழி சொல்லணும்னு பார்ப் பாரு. இதுக்கு முன்னால, இப்படித்தான் ராஜேந்திர பாலாஜி மேல பழிபோட் டாரு. இப்ப என்மேல பழிபோடறாரு. ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நான் 2007-ல இருந்தே நல்லதம்பியோடு தொடர்புல இல்ல. காளிமுத்து அண்ணன் இருக்கும்போதே, அவருடைய கையெழுத்தை நல்லதம்பி தவறா பயன்படுத்தி னாருன்னு அண்ணனே சொன்னாரு. 2006-ல், அண்ணன் காளிமுத்து சபாநாயகரா இருந்தப்ப, அவருடைய கையெழுத்தை, அவருடைய லெட்டர்பேடை நல்லதம்பி தவறா பயன்படுத்தி னாரு. நல்லதம்பி படிச்ச படிப்பு, அறிவு எல்லாத் தையும் மோசடிக்கு மட்டுமே பயன்படுத்திட்டு இருக்காரு. தமிழ்நாடு பூராவும் நல்லதம்பி மேல ஆயிரக்கணக்குல கேஸ் இருக்கு'' என்று நொந்தபடி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

நல்லதம்பியைத் தொடர்புகொண்டு, "உங்கள் மீதே குற்றச்சாட்டைத் திருப்புகிறாரே ரவிச்சந்திரன்?''’என கேட்க, விளக்கம் அளித்தார்.

vcc"அரசியல்ல இருந்தா யாராவது ரெண்டுபேர் புகார் கொடுக்கத்தான் செய்வாங்க. அரசு வேலைக்குப் பணம் வாங்கிக்கொடுத்த நாங்க மோசமானவங்க, வாங்கிச் சாப்பிட்ட மந்திரி, மாவட்ட செயலாளர் எல்லாரும் நல்லவங்கன்னு அ.தி.மு.க. தலைமை முடிவு பண்ணி, என்னை கட்சிய விட்டு எடுத்துட்டாங்க. சாத்தூருக்கு என்னை பொறுப்பாளரா போடும்போது காளிமுத்தண்ணன் லெட்டர் பேடை எடுத்து ஏமாத்துனவன்னு எங்க அண்ணன் ரவிச்சந்திரனுக்குத் தெரியாதா? நான் திருந்திட்டேன்னு சொன்னத நம்பித்தான் எனக்கு பொறுப்பு கொடுத்தாங்கன்னா, நான் போலீஸ் ஸ்டேஷன்ல திருந்திட்டேன்னு எழுதிக் கொடுத்தேனா? இல்லைன்னா நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கிட்டு வந்தேனா? அரசு வேலைக்கு மத்தவங்ககிட்ட பணம் வாங்கிக் கொடுக்குறது மட்டும்தான் எனக்கு பொழப்புன்னு கிடையாது. பசநஊப எக்ஸாம்ல, துணைவேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, எங்க அண்ணி வள்ளி எத்தனையோ பேரை பாஸ் பண்ண வச்சாங்க. எங்க அண்ணனும் (ரவிச் சந்திரன்) அண்ணியும் (வள்ளி) உதவி பண்ணுவாங்கன்னு நம்பி என்கிட்ட வர்றவங்கள கூட்டிட்டு போனேன். நான் அறி முகப்படுத்தி வச்சேன். பணத்த அவங்ககிட்டயே கொடுங்கன்னு சொன்னேன். நான் பணத்த கையில வாங்கல. எனக்கும் எங்க அண்ணனுக்கும் பேச்சுவார்த்தை இல்லைன்னு சொல்லுறது பொய். அண்ணன் -தம்பி உறவு எந்த இடத்துலயும் விட்டுப்போகாது. அறிமுகப்படுத்தி வச்ச பாவத்துக்கு, ஏமாந்தவங்க என்னை நெருக்கடி பண்ணும்போது, எங்க அண்ணன்கிட்ட அவங்க கொடுத்த பணத்தைக் கேட்டேன். எலக்ஷன் நேரத்துல செட்டில் பண்ணிடறேன்னு சொன்னாரு. ஒரு கோடி ரூபாய் செட்டில் பண்ண வேண்டியதுக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்தாரு.

நான் கொடுத்த புகார்ல, ஆதாரம் இல்லாமலா முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல போலீஸ் எப்.ஐ.ஆர். போட்டாங்க? எங்கே தொலைச்சோமோ, அங்கேதானே தேடமுடியும். அதான், எங்கண்ணன் ரவிச் சந்திரன், அண்ணி வள்ளி மேல, ஆதாரங்களோடு புகார் கொடுத்திருக்கேன்.

ராஜேந்திர பாலாஜி கேஸ்ல எங்க அண்ணன் ரவிச்சந்திரனை கூப்பிட்டு விசாரிச்சாங்க. அப்ப என்ன சொன்னாருன்னா, "அவனுக்கும் (நல்லதம்பி) ராஜேந்திரபாலாஜிக்கும் ஆயிரத்தெட்டு கொடுக்கல் வாங்கல் இருந்துச்சு. அவன் கொடுத்தான், அவருதான் வாங்கினாரு. இதுல எனக்கு எந்த சம்பந்தமும் கிடையானுன்னாரு. இப்ப நான் கொடுத்த புகார்ல அவருக்கு (ரவிச்சந்திரன்) வலிச்சதும், ராஜேந்திர பாலாஜி மேல பழிபோட்ட மாதிரி, என்மேலயும் பழி போடறான்'னு சொல்லுறாரு. ஆனா, எல்லா பழியவும் என் மேல போடறாரு''’என்று நிறைய பேசினார்.

ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "விஜயநல்லதம்பியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?''’என விருதுநகர் மாவட்ட காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியது. ஆனாலும், நல்லதம்பியை இன்றுவரையிலும் சுதந்திரமாக உலவவிட்டிருக்கிறது காவல்துறை. அதனால், "இந்தப் புகாரும் எந்த அளவுக்கு நேர்மையாக விசாரிக்கப்படும்?'’என சந்தேகம் கிளப்புகிறார்கள் ரவிச்சந்திரன் தரப்பினர்.

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழலைக் கிளற, நல்லதம்பியை நன்றாகவே பயன்படுத்திக்கொள் கிறது, தமிழ்நாடு காவல்துறை!