இணையதளம் புழக்கத்துக்கு வந்த காலத்திலிருந்தே, அவற்றிலுள்ள ஆபாச இணையதளங்கள், பெண்களை இழிவுபடுத்துவதற்கான ஓர் கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தங்க ளுக்குப் பிடிக்காத பெண்களின் முகங் களை, அந்தரங்கப் படங்களை ஆபாசத் தளங்களில் ஏற்றி விட்டு அவர்களை மிரட்டும் போக்கு தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், இந்த 2022-ஆம் ஆண்டின் முதல்நாளில், புல்லி பாய் (Bulli Bai)என்ற பெயரிலான செயலியில், இஸ்லாமியப் பெண் செயற்பாட்டாளர்கள், இஸ்லாமியப் பெண் பத்திரிகை யாளர்கள், இஸ்லாமியப் பெண் வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் ஏற்றப்பட்டு, அவர்களை ஏலத்தில் விடுவதாக வெளியான அறிவிப்பு, சமூக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கியது. இந்த புல்லி பாய் செயலி, கிட்ஹப் (GitHub) என்ற தளத்திலிருந்து செயல்படுத்தப் பட்டு வந்தது. இச்செயலியில், மகாராஷ்டிரா, உத்தரப்பிர தேசம், டெல்லி, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த இஸ்லா மியப் பெண் கள் பலரின் புகைப்படங் களும் இடம் பெற்றதால் அம்மாநிலங் களில் இச்செயலிக்கு எதிராகப் புகார்கள் பதியப்பட்டன.
இவ்விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த விஷால் குமார் ஜா என்ற 21 வயது பொறியியல் கல்லூரி மாணவன் முதலில் கைது செய்யப்பட்டான். அவனிடம் 10 மணி நேரமாகத் தீர விசாரித் ததில், அவனது நெட்வொர்க்கிலிருந்த உத்தரகாண்டைச் சேர்ந்த 19 வயதான சுவேதா சிங், 21 வயதான மயங்க் ராவத் ஆகியோர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அடுத்ததாக, இதில் மிகமுக்கியமான குற்றவாளியான, அசாம் மாநிலம் ஜோர்ஹட்டைச் சேர்ந்த நீரஜ் பிஷ் னோய் என்ற 21 வயது பொறியியல் மாணவனை கடந்த ஜனவரி 20-ம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த நீரஜ் பிஷ்னோய் தான் புல்லி பாய் செயலியின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவன். அந்த செயலியை கடந்த நவம்பர் மாதத்தில் உருவாக்கிய பிஷ்னோய், அதன்மூலம் இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து ஏலத்தில் விடுவதுபோல் அறிவித் துள்ளான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவனது தீவிர இந்துத்துவ மன நிலை காரணமாக, தனது செயலுக்காக எவ்விதத்திலும் வருத்தப்படவே இல்லையென்றும், தான் செய்தது சரியென்றும் அவன் குறிப்பிட் டது போலீசாரை ஆச்சர்யப் பட வைத்தது. இஸ்லாமி யப் பெண்களைத் தனது செயலியில் பதிவேற்றியவன், அந்த பதிவுகளைத் தனது நண்பர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளான். பிஷ்னோய் மீது, மதரீதியிலான கல வரத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட தற்காகவும், பெண்களுக்கெதிரான குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் ஐ.பி.சி. செக்சன் 153ஏ, 153பி, 354ஏ, செக்சன் 509 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அவனை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஷ்னோயின் தந்தை ஒரு மளிகைக் கடையை நடத்திவருகிறார். தனது மகன் சமூக வலைத்தளங்களில் செய்துவரும் சட்ட விரோதமான செயல்பாடுகள் குறித்து காவல்துறையால் கைது செய்யப்படும்வரை எதுவுமே தெரியாமல் இருந்துள்ளார். தன் மகன் நன்றாகப் படிப்பவன் என்றும், குறிப்பாக கம்ப்யூட்டர் சயன்ஸில் ஆர்வமுள்ளவன் என்று மட்டுமே தெரிந்துவைத்துள்ளார். அந்த படிப்பை எதற்குப் பயன்படுத்துகிறான் என்பது தெரியாதிருந்திருக்கிறார்.
இஸ்லாமியப் பெண்களை இழிவு படுத்தும் நோக்கிலான புல்லி பாய் செயலியைப் போலவே க்ளோனிங்காக சல்லி டீல்ஸ் (Sulli Deals) என்ற பெயரிலும் ஓர்செயலி இயங்கிவந்தது. அந்த செயலிக்கு மூளையாகச் செயல்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வய தான ஓம்காரேஷ் வர் தாக்கூர் என்பவனை டெல்லி போலீ சார் கைது செய் தனர். புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் மூலமாகத்தான் தாக்கூரை போலீசார் கைது செய் தனர். நீதிமன்றக் காவலில் இருக்கும் இவனது ஜாமீன் மனுவை கடந்த திங்க ளன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஓம்காரேஷ்வர் தாக் கூர், 2020-ம் ஆண்டி லிருந்து 'ட்ரேட் மஹாசபா' என்ற இந்துத்வா குரூப்பில் இணைந்து செயல்பட்டு வந்திருக் கிறான். அந்த குழு, மதரீதியாக இஸ்லாமியப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் கேலிச் சித்திரங்களை உருவாக்கிவந்திருக்கிறது. அடுத்தகட்டமாக சல்லி டீல்ஸ் செயலி மூலமாக இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள், தகவல்களைத் திருடி ஏலத்தில் விடுவதாக வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங் களில் மிகவும் ஆக்டிவாகச் செயல்பட்டுவந்த தாக்கூர், சல்லி ஆப் குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கியதுமே தனது வலைத்தளப் பக்கங்களை மூடியுள்ளான்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கலீதா பர்வீன் என்ற 65 வயதுள்ள சமூகச் செயற்பாட்டாளர், இந்துத்துவா அமைப்பினர் ஹரித்வாரில் நடத்திய மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தீவிரவாதக் கருத்துக்களை பேசிய நர்சிங்கானந்த் சரஸ்வதி என்ற சாமியாரை விமர்சனம் செய்திருந் தார்.
இதனால் கலீதா பர்வீனின் புகைப்படம் மற்றும் தகவல்களை இந்த புல்லி பாய் செயலியில் பதிவேற்றி இழிவுபடுத்தினர். இதுகுறித்து கலீதா பர்வீன், "எனது புகைப்படத்தை புல்லி பாய் செயலியில் பதிவேற்றியவர்களின் அம்மா வயதில் நான் இருக்கிறேன். இவர்களின் செயலைப் பார்த்து எனக்கு கோபம் வரவில்லை. இப்படி இந்தியப் பெண்களுக்கெதிராகச் செயல்படுபவர்கள், அதே நேரத்தில் 'பாரத் மாதா கி ஜே!' மட்டும் எப்படிச் சொல்கிறார்கள் என ஆச்சர்யப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே புல்லி பாய் செயலியில் ஆயிஷா மின்ஹாஸ் என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரின் புகைப்படமும் ஏற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், "இந்தியாவில் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், மோசமான சூழலுக்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியப் பெண்களுக்குத் தொடர்ச்சியான அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நம் நாட்டில், இதை எதிர் கொள்வதற்கு பெண்களுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது'' என்று கூறியுள் ளார்.
இவரைப்போல் இந்துத்துவா கருத்துக்களை விமர்சனம் செய்யும் இஸ்லாமியப் பெண்கள் பலரையும் இந்த செயலிகளில் ஏற்றி இழிவுபடுத்தியிருந்தனர். தற்போது இந்த இரண்டு க்ளோனிங் செயலி களை உருவாக்கிய நெட்வொர்க்கைச் சேர்ந்தவர்கள்மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சல்லி டீல்ஸ் செயலிமீது ஏழு மாதங்களுக்கு முன்பே புகாரளிக்கப்பட்டதில் அந்த செயலி முடக்கப்பட்டாலும், அதைச் செயல்படுத்துபவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. தற்போதுதான் சமூக அழுத்தம் காரணமாக இரண்டு செயலிகளை உருவாக்கியவர்கள்மீதும் நடவடிக்கை பாய்கிறது.
அதேபோல, ஹரித்துவார் இந்துத்வா மாநாடாகட்டும், இஸ்லாமியப் பெண்களுக்கெதிரான செயலியாக இருக்கட்டும், இத்தகைய மதத்துவேசச் செயல்பாடுகளுக்கு எதிரான கடும் கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்காதிருப்பதே அவர் களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்ப தாக உள்ளது.
மதவாதமென்பது இருபுறமும் கூர்மையான கத்தி. அது எல்லா நேரமும் ஓட்டரசியலுக்கு உதவாது,
நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளி விடக்கூடியது. இதை உணர்ந்து கொண்டு தங்கள் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்வதே நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.