கடற்கரையில் ஜெ. நினைவிடம், போயஸில் ஜெ நினைவு இல்லம் என அரசியல் காய் நகர்த்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவின் சாதனைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்படும்’என கடந்த 2017, ஆகஸ்ட்டில் அறிவித்திருந்தார் எடப்பாடி. இதனையடுத்து இதற்கான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நிர்வாக ஒப்புதலுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் பணிகளை 2017, அக்டோபரில் துவக்கினர் அரசு அதிகாரிகள்.
இதற்கு ஜெயலலிதாவின் உறவு ரீதியிலான வாரிசுகள் தீபக்கும், தீபாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பொது மக்கள் சிலரும் ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து ஆய்வு செய்திருந்த சென்னையின் அப்போதைய கலெக்டர் அன்புச்செல்வன், ஜெயலலிதாவின் வீட்டை கையகப்படுத்துவதால் அப்புறப் படுத்தலுக்கோ- பாதிப்பிற்கோ உள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. மறுகுடியமர்த்தல்- மறுவாழ்வளித்தல் போன்ற சூழலும் இல்லை. அதனால் மக்களின் ஆட்சேபனை என்பது அர்த்தமற்றது என அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தார். மேலும், இது தொடர்பான நில எடுப்பு வரைவு வரைபடங்கள் கிண்டியில் உள்ள தென்சென்னை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப் பதையும் தெரிவித்திருந்தார் அன்புச்செல்வன்.
அதனால் சட்டரீதியான பணிகளை துவக்கியது எடப்பாடி அரசு. இதுகுறித்து அப்போது பேசிய அன்புச்செல்வன், ""அரசாணையின்படி ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கின. முதல்கட்டமாக, வேதா இல்லத் தின் நிலத்தை கூட்டுப்புல தணிக்கை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நில அளவைத் துறையினர் அடங்கிய குழு தணிக்கை செய்யும் பணிகளில் ஈடுப்பட்டன. ஜெயலலிதாவின் இல்லத்தில் 2 அறைகள் வருமானவரித் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்தன. அது குறித்து ஆய்வு செய்ய அத்துறையின் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்களும் இதில் பங்கேற்றனர். அந்த அறைகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை'' என்றார்.
கடந்த ஒண்ணரை ஆண்டுகாலமாக இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில்தான், ஜெ. இல்லத்தை அரசு கையகப்படுத்துவதற்கான அவசர சட்டத்திற்கு தற்போது ஒப்புதலளித் திருக்கிறார் கவர்னர்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ""போயஸ் இல்லத்தில், அம்மாவால் பயன்படுத்தப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தற்காலிகமாக அரசுடைமையாக்கி பராமரிப்பதற்காகவும், அதனை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வ தற்கும், இதனையடுத்து நினைவு இல்லமாக மாற்றும் பணிகளை துவக்குவதற்கும் சட்டரீதியாக ஒரு அறக்கட்டளை தேவை. அதற்காக, ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை‘அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட இவைகளை நடைமுறைப்படுத்த ஒரு அவசர சட்டம் தேவை. அதற்காகத்தான் பிறப்பிக்க வேண்டியதிருந்தது. அந்த சட்டத்திற்குத்தான் தற்போது ஒப்புதல் தந்துள்ளார் தமிழக ஆளுநர். அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும். நினைவு இல்லம் அமைப்பதில் எந்த சட்டச் சிக்கல்களும் ஏற்படாமல் அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை'' என்கிறார் விளக்கமாக.
அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், உறுப்பினர்களாக துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இருக்கும் வகையில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை தான், ஜெ.வின் வேதாநிலையத்தையும் அங்குள்ள பொருட்களையும் பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்'' என்கிறார்கள்.
இந்த அவசர சட்டத்தின் பின்னணியில் சில அரசியல் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் சசிகலா உறவுகளோடு தொடர்புடையவரும், ஜெயலலிதா மீதான வழக்குகளின் நீள அகலங்களை அறிந்தவருமான புதுமை பாலு. அவரிடம் நாம் பேசியபோது, ’""ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சட்டப்பிரச்சனை இருக்கும் நிலையில் அதனை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டி ருப்பது தவறு. குறிப்பாக, ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களில் போயஸ்கார்டன் பங்களாவும் உண்டு. ஜெயலலிதா நடிகையாக இருந்த போது வாங்கப்பட்ட சொத்தாக இருந்தாலும், அவர் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு மாற்றங்களை அந்த பங்களாவில் செய்திருக்கிறார். அதனால்தான் போயஸ் கார்டன் பங்களாவை யும் வழக்கில் இணைத் தது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.
ஜெயலலிதா இறந்து போனதால் சிறை தண்டனையிலிருந்து மட்டும்தான் தப் பித்திருக்கிறார். அபராத தொகை 100 கோடியிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி இறந்து போனால் வழக்கில் இணைக்கப்பட்ட அவரது சொத்துக்கள் ஏலம் விடப் பட்டு அபராத தொகை எடுத்துக் கொள்ளப்படும்.
தவிர, கடந்த காலங்களில் வருமானவரி பாக்கியாக 6 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், செல்வ வரி பாக்கியாக 10 கோடியே 12 லட்ச ரூபாயும் என சுமார் 16 கோடியே 74 லட்ச ரூபாய் வரி பாக்கி யாக வைத்திருக்கிறார் ஜெயலலிதா. இதனால், போயஸ்கார்டன் வீடு உள்பட சில சொத்துக்களை முடக்கி வைத்திருக்கிறது வருமானவரித்துறை. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு இன்னும் முடியவில்லை. வரி பாக்கியை செலுத்தியப்பிறகே போயஸ்கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியும். அதனால், சொத்துக்குவிப்பு வழக்கிலும், வருமானவரித்துறை வழக்கிலும் சம்மந்தப்பட்டுள்ள போயஸ் கார்டன் பங்களாவை நினைவில்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.
இந்தச் சிக்கல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். ஆனால், இனி வரும் மாதங்கள் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான காலம் என்பதால், அதிமுக தொண்டர்களை வசியப்படுத்த ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் நாங்கள்தான் என்கிற தோற்றத்தை உருவாக்க நினைவு இல்லம் கான்செப்ட்டை கையிலெடுத்திருக்கிறார் எடப்பாடி.
ஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் துரிதமாகி வருகிறது. ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5-ந்தேதி நினைவிடத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதே நாளில் நினைவு இல்லத்தையும் திறந்து, இரு விழாக்களையும் பிரமாண்ட மாக நடத்தி, அதன்மூலம் தமிழக மக்களிடமும் அ.தி.மு.க. தொண்டர்களிட மும் எடப்பாடியின் இமேஜை உயர்த்துவதே அவரது ஆதரவு அதிகாரிகளின் யோசனை. அதேசமயம், சட்டரீதியாக சிக்கல் உருவானால், ""நான் முயற்சி எடுத்தேன்; நீதிமன்றம்தான் தடுத்து நிறுத்தியுள்ளது''’என எடப்பாடி சொல்லிக்கொள்ளவும் முடியும். நினைவு இல்லம் பிரச்சனையில் இப்படிப்பட்ட அரசியல்கள் இருக்கின்றன'' என்கிறார் அதிரடியாக.
மூத்த வழக்கறிஞர் இளங்கோவனிடம் பேசியபோது, ""ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானவரித்துறை தொடர்ந்துள்ள வரி பாக்கி வழக்கில், வரி பாக்கியை செலுத்திய பிறகு நினைவு இல்லம் அமைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என சொல்லியிருக்கிறது வருமானவரித்துறை. ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக்கத் துடிக்கும் எடப்பாடி அரசு, ஜெ.வின் வரி பாக்கியை செலுத்தியதாக தெரியவில்லை. வரி பாக்கி நிலுவையிலுள்ள நிலையில் அது தொடர்பான சொத்தினை நினைவில்லமாக்க முயற்சிப்பது சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல'' என்கிறார் இயல்பாக.
போயஸ் கார்டன் இல்லத்தை ஜெ.வின் ‘நேரடி’ வாரிசுகளான தங்களுக்கு வழங்க வேண்டும் என அவரது அண்ணன் பிள்ளைகளான ஜெ.தீபாவும், தீபக்கும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த இல்லத்தை அரசு கையகப்படுத்தி, நினைவு இல்லமாக்குவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அப்போலோவில் ஜெ. அனுமதிக்கப் பட்டதிலிருந்தே தனது வாரிசுரிமைப் போராட்டத்தைத் தொடங்கிய தீபா, ஜெ. மரணத்திற்குப் பின் தனிக் கட்சி நடத்தி அதே உரிமையைக் கோரியபடி இருந்தார். சசிகலாவாலும் அவரது குடும்பத்தினராலும்தான் தங்கள் அத்தை ஜெ.விடம் தாங்கள் நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டது என்றும், தங்கள் மீது அத்தைக்கு எப்போதும் பாசம் உண்டு என்பதும், தங்கள் பாட்டி வழி சொத்தான போயஸ்கார்டனில் தங்களுக்கு உரிமை உண்டு என்பதும் தீபா-தீபக் தரப்பின் வாதம்.
தற்போது, அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் தீபா-தீபக் தரப்பு, “எங்கள் அத்தை ஒன்றும் அனாதையல்ல. அவரின் வாரிசுகளான நாங்கள் எங்கள் உரிமையைக் கேட்கிறோம் என குரல் எழுப்புகிறது. ஜெ. மரணத்திற்குப் பிறகும் பரபரப்பாகியிருக்கிறது அரசியல் மர்மங்கள் சூழ்ந்த போயஸ் கார்டன் பங்களா.
-இரா.இளையசெல்வன்