இறை மகத்துவம் என்பது வெறும் வாய்ச் சொல்லால் விளக்கிட முடியாத ஒன்று. அப்படிப் பட்ட இன்றியமையாத இறைவழிபாட்டையும், இறை வடிவங்களைத் தாங்கி நிற்கும் ஆலயங்களை யும் நாம் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய தொண்டை மண்டலத்தின் பொக்கிஷ ஆலயமாகத் திகழ்கிறது உக்கல் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோவில். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட- ஸ்ரீ பெருந்திரனார் என்று போற்றப்பட்ட உக்கல் ஆலயத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.
காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, பல்லவ நாட்டை கி.பி. 685 முதல் கி.பி. 705 வரை ஆட்சி செய்தான் பல்லவ மன்னன் இராஜசிம்மன். இவன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்றும் அழைக்கப்பட்டான். சிறந்த சிவபக்தன். காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற கயிலாசநாதர் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையிலுள்ள குடைவரை ஆலயங்களையும் கட்டிய பெருமையைக் கொண்டவன். இவன் ஒருசமயம் தீராத வயிற்றுவலியால் அவதியுற் றான். அவனது கனவில் தோன்றிய கயிலாயகிரி நாதர், "சேயாற்றின் அருகிலுள்ள எமது திருத் தலத்தை அடைந்து வழிபாடு செய்; உனது தீராத வயிற்றுவலி தீரும்' என அருள்புரிந்தார்.
அதன்படி சேயாற்றின் வடகரையிலுள்ள உக்கல் திருத்தலத்திற்கு வந்த நரசிம்மவர்மன், ஸ்ரீ வைத்தியநாதப் பெருமானை மனங்குளிர அபிஷேகித்து, பட்டாடைகள் சாற்றி, பலவகை மலர்களால் மாலைதொடுத்துச் சூட்டினான்.
பலவகை நைவேத்தியங்களையும், பலகாரங் களையும் படைத்தான்.
மகிழ்ந்த பரமேஸ் வரர் ஒரு சித்தர் வடிவில் தோன்றி, தல விருட்சமான வில்வமரத்தின் இலை களை மருந்தாகத் தந்து சாப்பிடச் சொன்னார்.
சாப்பிட்ட சற்று நேரத்திற்கெல்லாம் வயிற்றுவலி காணாமல்போனது. சித்தர் வடிவில் வந்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அரசன், அவரை எங்கு தேடியும் கிடைக்காதது கண்டு நெகிழ்ந்தான். தனக்கு வைத்தியம் பார்த்தது அந்த வைத்தியநாதப் பெருமானே என்பதை உணர்ந்து, அளவில்லாத ஆனந்தம் அடைந்தான். அத்துடன், இக்கோவிலின் முழுத் திருப்பணிகளுக்கும் உத்தர விட்டான். அன்றுமுதல் இத்தல ஈசர், ஸ்ரீ பெருந்திரனார் வைத்தியநாதர் என்று போற்றப்படலானார்.
இந்த இரண்டாம் நரசிம்மவர்மன், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் அல்லாது பனமலையிலும் சிவால யத்தை எழுப்பியுள்ளான். இந்த கோவில் களில் இவனது 250 பட்டப்பெயர்கள் கல்வெட்டின் வாயிலாகக் காணக்கிடைக் கின்றன. அந்த பட்டப்பெயர்களுள் ஒன்று "சிவசூளாமணி' என்பதாகும். வேதம் ஓதும் அந்தணர்களுக்கென பல ஊர்களை அமைத்து, அதை அவர்களுக்கு தானமாகவும் கொடுத்துள்ளதால் "சிவசூளாமணி' என்று பலரால் போற்றப் பட்டான். அதுபோல் உக்கலிலும் பிராமணர்களுக்கென நிலங்கள் ஒதுக்கி, நாளும் வேதம் ஓதிட வழிவகை செய்தான். இதனால் உக்கல் அந்நாளில் நரசிம்மவர்மனின் பட்டப்பெயரோடு "உக்கல் சிவசூளாமணி மங்கலம்' என்று பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 878 முதல் கி.பி. 883 வரை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் உட்கர் என வழங்கப்பெற்றுள்ளது.
கி.பி. 872 முதல் கி.பி. 890 வரை காஞ்சியை ஆண்டவன் அபராஜிதவர்மன். இவனே திருத்தணிகை முருகன் ஆலயத்தைக் கட்டிய பெருமைக்குரியவன். இவனது ஆட்சிக் காலத்தில் இவ்வூர் "சிவசூளா மணி மங்கலமாகிய அபராஜித சதுர்வேதி மங்கலம்' என்று அழைக்கப்பெற்றுள்ளது.
பின்னர் கி.பி. 894-ல் தொண்டைநாட்டினை ஆட்சிபுரிந்த சோழ மன்னனான முதலாம் ஆதித்த சோழன் காலத்திலும் இப்பெயரே வழக்கத்தில் இருந்துள்ளது.
இவ்வூரிலுள்ள திருமால் ஆலயக் கல்வெட்டில், கி.பி.999-ல் ஆட்சி புரிந்த முதலாம் இராஜராஜனின் காலத்தில் பராந்தகச் சோழனின் விருதுப் பெயர்களுள் ஒன்றான விக்ரமாபரணன் என்பதனைச் சேர்த்து, "தனியூர் உக்கலான விக்ரமாபரணச் சதுர்வேதி மங்கலம்' என பதிவிடப்பட்டுள்ளது.
பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர் கள் இந்த உக்கல் ஆலயத்தின்மீது கொண்ட பற்றை நன்கு உணரமுடிகிறது.
ஊரின் வடமேற்கு மூலையில் ஆலயம் அமைந்துள்ளது. தோரணவாயில் நம்மை வரவேற்கிறது. இராஜகோபுரம் காணப்பெறவில்லை. உள்ளே நுழைந்ததும் விசாலமான இடப்பரப்பு. இங்கே நந்தி மண்டபம், பலிபீடம் மற்றும் கொடிமரம் காணப்படுகின்றன. தோரணவாயிலின் நேராக தென்முகம் பார்த்தவாறு அமையப் பெற்றுள்ளது அம்பிகையின் தனிச் சந்நிதி.
முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் அமைப்பில் அம்பாள் சந்நிதியுள்ளது. அம்பிகையாக ஸ்ரீ மரகதாம்பிகை அற்புதத் திருமேனி கொண்டு புன்னகை சிந்துகிறாள்.
பின் இறைவனைக் காணச் செல்கிறோம். முன்மண்டபம் மிகவும் விசாலமான கருங்கல் திண்ணைகளுடன் கூடியது. கடந்து உள்ளே செல்ல, மகாமண்டபத்தின் வல- இடப்புறங்களில் திறந்த வெளியாக உள்ளது. வடப்புற திண்ணைமீதுள்ள ஆதி சாஸ்தாவான ஐயப்பன் சிலை மிகவும் அபூர்வமானது.
யோகபட்டையுடன் வலதுக்காலை மட்டும் மடக்கியபடி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை இங்கு மட்டுமே காணமுடியும் என்பது விசேஷமாகும். உடன் ஸ்ரீ கணபதியும், பைரவரும் உள்ளனர். பின் நீண்ட இடைமண்டபம். அதன் வடப்புறம் நடராஜர் சந்நிதி. உடன் ஏனைய உற்சவ மூர்த்தங்களும் வைக்கப்பட்டுள்ளன.
கருவறையுள் பிணிதீர்க்கும் பெருமானாக திருவருள் புரிகிறார் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி. வழவழ பச்சைக் கல்லிலான பாணம். வட்ட வடிவிலான ஆவுடையார். பார்த்தவுடன் பக்தர்களைத் தன்பால் ஈர்த்து, உள்ளத்தை உருக வைக்கிறார். இப்பெருமான் பெருந்திருக்கோவில் பெருமானடிகள் என்றும், பெருந்திருக்கோவில் மகாதேவர் என்றும், பெருந்திருக்கோவிலுடைய நாயனார் என்றும் அழைக்கப்பெற்றுள்ளார்.
ஆலயவலம் வருகையில் கோஷ்ட தெய்வங்கள் முறையே ஸ்தாபிக்கப்பட் டுள்ளன. அவற்றுள் நர்த்தன கணபதி அழகோ அழகு. தென்முகக் கடவுளான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சற்றே இடப்பக்கம் திரும்பியபடி, கால்மீது கால் மடித்து கலையெழில் கொஞ்ச காட்சி தருகிறார். தல கணபதியின் சந்நிதி ஆலயத் தென்மேற்கு மூலையிலும், வள்ளி- தெய்வானை உடனான ஸ்ரீ ஷண்முகர் சந்நிதி வடமேற்கு மூலையிலும் உள்ளன. கருவறையின் வெளிப்பக்கச் சுவரில் கல்வெட்டுச் சாசனங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. பரகேசரிவர்மன் கல்வெட்டுகள் இரண்டு காணப்பெறுகின்றன.
கி.பி. 917-ல் முதலாம் பராந்தகன் ஆட்சியில், இவ்வூரைச் சேர்ந்த வணிகன் "மருதம்பாக்கிழான் உற்றியாட்டை' என்பவன் ஸ்ரீவைத்தியநாதர் ஆலயத்திற்கு நிலம் வழங்கியுள்ளான்.
வருடந்தோறும் நடை பெறும் பிரம்மோற்சவத் திருவிழாவின்போது சுவாமி திருவீதியுலா செலவுகளுக்காக, முதலாம் இராஜராஜன் நிலக்கொடை அளித்துள்ளான். அதுபோல தினமும் தீபத்திற்கு பசுநெய் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தியினைத் தாங்கிய (கி.பி.1045) முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டொன்று கோவிலின் தென்புறச் சுவரில் காணப்படுகிறது.
அதுபோல் கி.பி. 1303லி கி.பி. 1322 ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த மூன்றாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், நீண்ட நாட்களாகப் பாழடைந்து கிடந்த குளத்தை சீரமைத்துள்ளான். இதை ஆலய வடகிழக்குச் சுவரிலுள்ள கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.
பராக்கிரம சோழன் வாய்க்கால் ஒன்றும் இங்கு இருந்துள்ளதாக இராஜநாராயணன் சம்புவராயன் கல்வெட்டு விவரிக்கிறது.
சோழர்காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்து பாகூர் நாட்டில், தனி ஊராகத் திகழ்துள்ளது உக்கல்.
ஏனைய குறுநில மன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன. இவ்வாலயத்திலுள்ள கல்வெட்டுகளின்மூலம் பல அரிய வரலாற்றுச் சம்பவங்களை நன்கு அறியப்பெறலாம் என்பது உறுதி.
பழமையானதொரு சிவாலயம் திருப்பணி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அமைதியான சூழலில் அமைந்திருப்பதால் மனம் ஆனந்தத்தில் திளைக்கிறது. இனிமை சுரக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள இவ்வாலய பரம்பரை அறங் காவலராக ஜிஜேந்திர குருக்கள் திகழ்கிறார்.
தல விருட்சமாக வில்வமும், தல தீர்த்த மாக ரோக நிவாரண தீர்த்தமும் திகழ்கின்றன.
தினமும் ஒரு காலபூஜை நடைபெறும் இவ்வாலயம் காலை 6.00 மணிமுதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரையும் திறந்திருக்கும்.
வருடத்தின் சிறப்பு விழாவாக தைப்பூசத்தன்று 18 ஊர்களிலிருந்து செய்யாற்றில் ஒன்றுகூடும் தீர்த்தவாரி உற்சவம் வெகு விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. அது தவிரவும் அனைத்து சிவாலய விசேடங்களும் சிறப்புற அனுசரிக்கப் படுகின்றன.
தீராத பிணிகளால் அவதிப்படுபவர்கள் ஸ்ரீ வைத்தியநாதருக்கு அபிஷேகித்த நீரைப் பருகிட நிவர்த்தி ஏற்படும்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்திலுள்ள இவ்வூர், காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையிலுள்ள கூழமந்தலி-ருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது உக்கல்.