மும்பாதேவி மந்திர்...
இந்த ஆலயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறது. மும்பையின் ஒரு பகுதியிலுள்ள புகழ்பெற்ற ஆலயமிது. பம்பாய் நகரத்திற்கு மும்பை என்ற பெயர் வந்ததற்குக் காரணமே இந்த தேவிதான்.
15-ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஆலயம் இருக்கிறது. 1675-ஆம் வருடத்தில் இது புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மராத்தி மொழி பேசும் "கோலி' என்ற இனமக்கள் இந்த அன்னையைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இந்தக்கோவில் அமைந்திருக்கும் பகுதியில் ஏராளமான ஸ்டீல் கடைகளும் துணி கடைகளும் இருக்கின்றன.
வைர நகை வியாபாரமும், தங்க நகை வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறும் பகுதி இது. இது ஒரு சுற்றுலாதளம். அதனால் தினமும் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடிவருகின்றனர்.
அன்னை பார்வதியின் இன்னொரு வடிவம்தான் மும்பாதேவி.
தெற்கு மும்பையின் போலேஸ்வர் பகுதியில் இந்த ஆலயம் இருக்கிறது. மக்கள் இந்த தேவியைத் தங்களின் அன்னையாகவே நினைத்து வழிபடுகிறார்கள்.
இந்த ஆலயத்தைப் பற்றிய கதை இது...
அன்னை பார்வதி, மீனவப் பெண்ணாக பிறக்கிறாள். அவளை அனைவரும் "மட்ஷயா' என்று அழைக்கின்றனர்.
மீனவ இனத்தில் பிறந்ததால், பார்வதி மீன்களை எப்படி பிடிப்பது என்பதையும் கற்றுக்கொள்கிறாள். அந்தப்பகுதிக்கு மீனவராக வரும் சிவபெருமான், பார்வதியைத் திருமணம் செய்துகொள்கிறார்.
அன்னை பார்வதி அங்கிருந்து போய்விடக்கூடாது என மீனவ மக்கள் வேண்டிக்கொள்ள, ""நான் எங்கும் போகவில்லை. உங்களுடனே இருக்கிறேன்'' என்று கூறுகிறாள் பார்வதி.
கூறியதுடன் நிற்காமல், அங்கேயே இருக்கவும் செய்கிறாள். அவளை மக்கள் "ஆயி' என்று அன்புடன் அழைக்கின்றனர்.
"ஆயி' என்றால் "அம்மா' என்று அர்த்தம். மும்பைக்கு அன்னையாக அவள் இருந்ததால், அவளின் பெயர் "மும்பா ஆயி' என்றாகிறது. இந்த ஆலயம் இருக்கும் கடை வீதிக்குப் பெயர்... ஜவேரி பஜார்.
இந்த ஆலயத்திற்குள் துர்க்கைக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. விநாயகருக்கு ஆலயம் இருக்கிறது. ஆலயத்திற்கு எதிரே கிருஷ்ணரின் ஆலயம் இருக்கிறது.மும்பா தேவியின் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக அளிக்கின்றனர்.
திருமணமான புது மணமக்கள் தங்களின் இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்காக மும்பா தேவியை வழிபடுவார்கள்.
இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்பு பவர்கள் சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணிக்கவேண்டும். பயண தூரம் 1,268 கிலோமீட்டர். பயண நேரம் 22 மணிகள். மும்பை ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் "மும்பாதேவி மந்திர்' ஆலயம் இருக்கிறது.