டாக்டர் அரிகோ என்னும் அதிசய மனிதர் பற்றி இந்த மாதம் காண்போம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் இருபது ஆண்டுகளில் இருபது லட்சம் பேருக்கு மருத்துவம் பார்த்தவர்.
அவரது வாழ்க்கை வரலாறை ஜான் ஜி. ஃபில்லர் என்பவர் எழுதியிருக்கிறார். அதை இராணுவத் தில் பணியாற்றிய எம்.எஸ். பிரகாஷ் என்பவர் தமிழில் மொழிபெயர்த்தி ருக்கிறார்.
அரிகோ தனது பெற்றோருக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர். சரியாகப் படிப்பு வரவில்லை. மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தார். வளர்ந்தபின்பு நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்தார். மிகவும் கடினமான வேலை. அழுக்குப் படிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருப்பார். ஆனால் நல்ல தோற்றத்தைக் கொண்டவர். பருமனான உடல். (அரிகோ என்றால் பூசணிக்காய். காரணப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. இயற்பெயர் வேறு.)
இப்படி இருக்கும் போது அவரது நடவடிக்கைகளில் மாற்றம் உண்டானது. திடீரென தலைவலியால் துடிப்பார். பதட் டத்துடன் காணப்படு வார். சிலசமயம் எதற்கோ பயந்தவர்போல் இருப்பார். இப்படி பல்வேறு உணர்வுகள். ஒருநாள் இரவு ஆடையில்லாமல் தெருவிலும் ஓடியிருக்கிறார். ஆனால் இதற்காக மருத்துவ சிகிச்சை எதையும் அவர் செய்யவில்லை.
அப்படியே நாட்கள் கடந்து சென்றன.
அவரது மனைவிக்கு ஒரு தோழி இருந்தார். அவருக்கு கர்ப்பப்பையில் கட்டிவந்து மிகவும் துன்பப்பட்டார். மருத்துவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை; கைவிட்டுவிட்டனர். இறுதியாக பாதிரியார் வந்து பார்த்துவிட்டு, இறுதிநேரம் நெருங்கிவிட்டதாக உணர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்று விட்டார். அப்போது அரிகோவும் அவரது மனைவியும் அந்த அம்மையாரைக் காண்பதற் காக வந்தனர்.
அரிகோவின் மனைவி தோழிக்கு ஆறுதல் சொல்ல, அரிகோ ஒரு நாற்காலியில் அமர்ந்திருந் தார். அப்போதுதான் அந்த முதல் சம்பவம் நடந்தது. சாதாரணமாக அமர்ந் திருந்த அவருக்குள் ஏதோ மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. தலை சுற்றுவது போலிருந்தது. சில விநாடிகள் கடந்த நிலையில் சட்டென்று எழுந்தார். வேகமாக சமயலறைக்குச் சென்றவர் அங்கு ரொட்டி வெட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு விரைந்து வந்தார். அந்தப் பெண்மணியின் ஆடையை விலக்கி, பிரசவம் பார்ப்பவர்போல கருவாய்க்குள் கத்தியைச் செருகி சுழற்றினார். அடுத்து கையைவிட்டு கர்ப்பப்பையிலிருந்த கட்டியை எடுத்தவர் வெளியே சென்று அதை வீசிவிட்டு வந்தார். "தொப்'பென்று நாற்காலியில் அமர்ந்தார்.
என்ன நடந்ததென்றே அங்கி ருந்தவர்களுக்குப் புரியவில்லை. ஏனென்றால் இவையணைத்தும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்டன. ரொட்டியை வெட்டும் சாதாரண கத்தியால் இருபது விநாடிகளில் ஒரு கர்ப்பப்பை கட்டி அகற்றப் பட்டுவிட்டது. இதில மிகப்பெரிய ஆச்சரியம் அந்தப் பெண்மணி அலறவேயில்லை.
உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். பரிசோ தித்த அவர், "இனி கவலைப்பட எதுவுமில்லை; இயல்புநிலைக்கு வந்துவிட்டார்' என்று கூறினார்.
இறுதி நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி மறுவாழ்வு பெற்றுவிட்டார்!
இந்த செய்தி காட்டுத்தீபோல பரவிவிட்டது. தினமும் அவரை நாடி நோயாளிகள் வரத் தொடங்கி விட்டனர். இவரோ நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றுபவர்.
அப்படியும் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். நாளாக நாளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பத்து, இருபது என்று இருந்த எண்ணிக்கை முந்நூறு, நாநூறு என்றானது. இவர் வசித்ததோ சிறியவீடு.
அறுவை சிகிச்சை செய்ய போதிய இடவசதி இல்லை. அவரது வீட்டுக்கருகே ஒரு பாழடைந்த தேவாலயம் இருந்தது. அங்கு பிரார்த் தனை எதுவும் நடப்பதில்லை. அந்த இடத்தை அனுமதி கேட்டுப் பெற்றார். இரண்டு பலகைகளை வைத்து அதன்மேல் ஒரு மரக்கதவைப் போட்டார். அதுதான் அறுவை சிகிச்சை மேடை.
காலை சுமார் ஏழு மணிக்கு அங்கு வருவார். பலரும் அங்கு காத்திருப்பர். குறிப்பிட்ட இரண்டு மூன்றுபேரை சுட்டிக்காட்டி முதலில் வரச்சொல்வார். ஏனெனில் அவர்கள்தான் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர் கள். அவர்கள் சாப்பிடவேண்டிய மருந்துகளை, மருத்து வர்களுக்கே உரிய கையெழுத்தில் வேகமாக எழுதிக் கொடுத்துவிடுவார். இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், இவர் போர்த்துக்கீசியர். ஜெர்மன் மொழியை எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் சிகிச்சையின்போது ஜெர்மன் மொழியை வெகு சாதாரணமாகக் கையாண்டார்.
இது எப்படி சாத்தியம்? பலராலும் இதை நம்ப முடியாது. ஆனால் ஒரு காரியத்துக்குக் காரணம் இருக்குமல்லவா?
அடால்ஃபோ ஃப்ரிட்ஜ் என்னும் ஒரு மருத்துவரின் ஆவி, தன்னுடன் மேலும் சில மருத்துவர்களின் ஆவியை சேர்த்துக்கொண்டது. அடால்ஃபோதான் தலைமை மருத்துவ ஆவி. அது- அவர் என்றே சொல்வோம்- பத்து ஆண்டுகளாக அரிகோவை கண்காணித்திருக்கிறார்.
நல்லவனா- ஒழுக்கமானவனா- பேராசை இல்லாதவனா-
பிறன்மனை விழையாதவனா என்று 360 டிகிரி கோணத்திலும் ஆராய்ந்திருக்கிறார். அவர் எதிர்பார்த்த எல்லா தகுதிகளும் அரிகோவிடம் இருக்கவே, தன் பணிக்கு ஏற்றவன் அரிகோவே என்று முடிவுசெய்தார்.
அதன்பின்னர் அரிகோவின் உடலுக்குள் அடால்ஃபோவின் ஆவி இறங்கியது. அவ்வாறு இறங்கியபின் முதன்முதலாக செய்யப்பட்டதே கர்ப்பப்பை கட்டியை அகற்றிய அறுவை சிகிச்சை. அரிகோ முறையான எந்த உபகரணங்களையும் பயன்படுத்தவில்லை. சாதாரண கத்திதான். மயக்க மருந்து தருவதில்லை. டிஞ்சர், பஞ்சு, டெட்டால் என்று எதுவுமில்லை. தையல் போடுவதும் கிடையாது. எழுதித் தருவதும் நோய்க்கு சம்பந்தமில்லாத மாத்திரைகள். சிலசமயம் காலாவதியாகிப்போன மாத்திரை களையும் எழுதித் தருவார். ஆச்சரியம் என்னவென்றால் அனைவரும் சுகமடைந் தனர்.
அரிகோவின் இந்த செயல் வேறு சிலரை எரிச்சலுக்குள்ளாக்கியது. குறிப்பாக அங்கிருந்த மருத்துவர்கள் சங்கம். ஏனெனில் இவரால் அவர்களது வருமானம் பாதித்தது. கத்தோலிக்க பாதிரியார்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்-
அவர்கள் கொள்கைக்கு முரணாக இருந்ததால். அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும்கூட இது பிடிக்கவில்லை. எனவே இந்த நான்கு தரப்பினரும் சேர்ந்து, அரிகோமீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியோ நாத்திகவாதி. அமானுஷ்யம் போன்ற எவற்றையும் நம்பாதவர். அரிகோவிடம், "மருத்துவம் படிக்காத நீ நிறைய பேருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லப்படுகிறதே... உண்மையா?' என்று கேட்க, "எனக்கு எதுவும் தெரியாது. ஏதோ ஆவி என்னுள் புகுந்து இப்படி செய்கிறது'' என்றார். அதை நீதிபதி நம்பவில்லை. காவல்துறையின் அறிக்கை அவர் சிகிச்சையளித்ததை உறுதி செய்தது. எனவே அரிகோ சிறையில் அடைக்கப் பட்டார்.
சிறையிலும் அவர் வெறுமனே இருக்கவில்லை. அங்கிருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்தார். சிறைச்சாலையில் பணியாற்றுவோரின் உறவினர்களும் வந்தனர். அனைவரும் குணமடைந்ததால், பொதுமக்களுக்கு சிகிச்சை செய்ய சிறையதிகாரியே அனுமதி வழங்கிவிட்டார். சிறைச்சாலையையே மருத்துவமனையாக்கிவிட்டார் அரிகோ. பின்னர் மேல்முறையீடு செய்து சிறையிலிருந்து வெளிவந்த அரிகோ தொடர்ந்து சிகிச்சையில் ஈடுபட்டார்.
நமது உடலுக்கு மேலே ஒளியுடம்பு (ஆரோ) என்றுண்டு. அது கண்களுக்குப் புலப்படாது. ஆனால் நம்மோடு தொடர்பு டையது. சாதாரண மனிதர்களுக்கு நான்கு அங்குலம் அளவுக்கு உடலைச் சுற்றியிருக்கும். பெரிய மகான்களுக்கு 24 அடிவரை இருக்கும் என்பர். அந்த வளையத்திற்குள் உள்ள எவரும் அவரது நற்பண்புகளுக்கு கட்டுப்பட்டுவிடுவோம். புத்தருக்கு ஏழு மைல் சுற்றளவுக்கு இருந்ததாம். அந்த எல்லைக்குள் உள்ள உயிரினங்கள் ஒன்றையொன்று கொல்லாது. புலியும் மிக சாந்தமாக இருக்கும் என்பார்கள்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்ட்டீ சியன் என்பவர்கள், நான்கு அங்குலம் உள்ள ஒளியுடலில், நம் உடலுக்கு மேலாக இரண்டு அங்குல உயரத்திலேயே அறுவை சிகிச்சை செய்வார்களாம். அரிகோ நிஜ உடலில் சர்வ சாதாரணமாகச் செய்தார். ஒரு பொது மருத்துவமனையிலுள்ள அத்தனைக் கருவிகளைக் கொண்டும் பல மருத்துவர் கள் செய்யும் சிகிச்சையை தனியொரு நபராகச் செய்தது பேரதிசயம்.
இதையெல்லாம் கேள்விப்பட்டு இதன் உண்மையை அறிவதற்காக அமெரிக் காவிலிருந்து 45 பேர்களைக்கொண்ட ஒரு குழுவினர் வந்தனர். அந்தக் குழுவில் மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், அறிவியலாளர்கள் என பல்துறை வல்லுனர் களும் இருந்தனர். அவர்கள் அரிகோவி டம் அவர் சிகிச்சையளிப்பதைப் பார்க்க வேண்டும் என்றும், அதைப் படமெடுக்கப் போவதாகவும் கூறினர். அரிகோ சம்மதித்தார்.
அதுவரை சாதாரணமாக இருந்த அரிகோ, அறைக்குள் சென்று சட்டையணிந்து திரும்பும்போது ஒரு இராணுவ அதிகாரிபோல் மிக மிடுக்குடன் இருந்தார். அவரது பேச்சு கட்டளையிடுவது போலிருந்தது. முதலில் வந்தவர் கண்புரை (கேட்ராக்ட்) குறைபாட்டுக்காக வந்தவர். அவரை சுவரோரம் சாய்த்து நிற்க வைத்த அரிகோ, ஒரு கத்தியை எடுத்து கண்களின் மேலே செருகி ஏதோ செய்தார். அப்படியே கத்தியை விட்டுவிட்டு அவர் நகர, அது அந்த நபரின் முகத்தில், பழத்தில் செருகப்பட்டதைப்போல நின்று கொண்டிருந்தது. அவரது முகத்தில் ஒரு ஈ அமர, அதை விரலால் தட்டிவிட்ட அவருக்கு, ஒரு கத்தி குத்தப்பட்டிருக்கும் உணர்வு இல்லவே இல்லை. இப்படி பல சிகிச்சையை அந்த குழுவினர் கண்டனர். படமாக்கப்பட்ட ஒரு சிகிச்சையைப் போட்டுப் பார்த்தபோது, அது ஆறேழு விநாடிகளிலேயே செய்யப் பட்டதைக் கண்டு திகைத்தனர்.
அரிகோ சாதாரணமாக இருந்தபோது இதுபற்றிக் கேட்க, "1918-ல் அடால்ஃபோ ஃப்ரிட்ஜ் என்னும் அறுவை சிகிச்சை நிபுணர் இறந்துவிட்டார். அவர் தன்னுடன் இருபது முப்பது மருத்துவர்களின் ஆவிகளைச் சேர்த்துக் கொண்டு இதைச் செய்கிறார். என் இடது காதில் அவர்கள் சொல்வார்கள்'' என்றார்.
லட்சக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை யளித்த அவர், தன் இதயத்திலிருந்த பிரச் சினைக்கு சிகிச்சை செய்துகொள்ளவில்லை. இறுதி நாட்களில் சற்று படபடப்புடன் இருந்தார். "கனவில் அடிக்கடி கருப்புநிற சிலுவை வருகிறது. நான் விரைவில் இறந்து விடுவேன்' என்றார். ஒரு நாள் இன்னொரு வருடன் ஒரு நீலநிறக் காரில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார். அப்போது அவருக்கு வயது 49. 1921 அக்டோபரில் பிறந்த அவர், 1971 ஜனவரியில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் இருபது லட்சம் அறுவை சிகிச்சை களை செய்த அவர் கடைசிவரை ஏழ்மை நிலை யிலேயே இருந்தார். ஏனென்றால், அவரைத் தேர்ந்தெடுத்த டாக்டர் அடால்ஃபோ வின் ஆவி, "யாரிடமும் பணமோ, பரிசுப் பொருளோ வாங்கக் கூடாது' என்று கூறியிருந் தது. இவரும் அத்தகைய இயல்புடையவர்தான். உலகின் எட்டாவது அதிசயமாக இந்த மாமனிதர் கருதப்படுகிறார்.
இவர் நிகழ்த்திய இந்த மாபெரும் அதிசய சாதனைக்கான அறிவியல் விளக்கத்தை அமெரிக்காவாலேயே இதுவரை சொல்ல முடியவில்லை. 32 கருவிகளை வைத்து சோதித்துப் பார்த்துவிட்டார்கள். எதுவும் புலனாகவில்லை. நாம் கண்களால் காணும் இந்த ஜட உலகத்துக்கும், சூட்சும உலகத்துக் கும் சம்பந்தமில்லை என்பதை இதன்மூலம் உணரலாம்.