மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.
இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங் களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி- அறிமுகம் செய்யப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங் களை ஊக்குவிக்க ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் மின்சார வாகனங் களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ. 1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும்.
லட்சத்தீவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
2023-24-இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடி. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை - 5.8% 2024-25-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 5.1% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டிற்குள் பற்றாக்குறையை ஜிடிபி-யில் 4.5% ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை.
வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் கூடுதலாக செலுத்திய வருமான வரி 10 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்.
ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன் மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.
மாதாந்திர ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடியாக உள்ளது.
ரூ. 11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம்.
கார்ப்பரேட் வரி 22% ஆக குறைப்பு.
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். இதன் காரணமாக நாட்டின் நேரடி வரி வருவாய் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரிப்பு.
10 வருடங்களில் 500 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளது.
உள்கட்டமைப்புக்கான செலவு ரூ. 11.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.
இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க திட்டம்.
பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை.
3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.
விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
கடல் உணவுகளின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.
5 மீன்வள பூங்காக்கள் அமைக்கப்படும்.
விவசாய துறையில் கூடுதல் முதலீடு செய்ய அரசு தயார்.
5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்:
‘பிஎம் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தில் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு இதுவரை 3 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். நடுத்தர மக்கள் வீடு வாங்க புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்படி, வாடகை வீடு, குடிசை பகுதி, அங்கீகாரமற்ற மனை பிரிவுகளில் வசிப்போர் புதிய வீடுகளை வாங்க வழிவகை செய்யப்படும்.
லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சுய உதவி குழுக்களை சேர்ந்த 1 கோடி பெண்கள் லட்சாதி பதிகளாக உருவாக்கப்படுகின்றனர்.
இதில், அடுத்தகட்டமாக 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள்.
துறைகள், முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு:
சாலை போக்குவரத்து துறைக்கு ரூ.2.78 லட்சம் கோடி, ரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி, நுகர்வோர் பொது விநியோக துறைக்கு ரூ.2.13 லட்சம் கோடி, உள்துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.1.77 லட்சம் கோடி, ரசாயனம், உரத் துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடி, தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.1.37 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.86,000 கோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ரூ.7,500 கோடி, செமி கண்டக்டர் திட்டத்துக்கு ரூ.6,903 கோடி, சூரிய மின்உற்பத்தி திட்டத்துக்கு ரூ.8,500 கோடி, தேசிய ஹைட்ரஜன் திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை:
லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப் படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 35 தீவுகள் அடங்கிய லட்சத்தீவுகளில் சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான வசதிகள், ஓட்டல்கள் ஏற்படுத்தப்படும். இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் 2, 3-ஆம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார்.
அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங் களில் பகிர்ந்தார். இவை வைரலாக பரவின. இந்நிலையில் லட்சத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்:
ரயில்வே பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 40,000 ரயில் பெட்டிகளை வந்தே பாரத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மூன்று முக்கிய பிரிவு வழித்தடங்களை ரயில் மூலம் இணைக்க முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி எரிபொருள், கனிமம், சிமெண்ட் பிரிவிலும், துறைமுக இணைப்பிலும், மூன்றாவதாக அதிக போக்குவரத்து அடர்த்தி மிகுந்த பகுதிகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போதைய சேர் கார் சேவை என்பது தூங்கும் வசதியுடன் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றதாக இல்லை. அந்த குறையைப் போக்கவே ஸ்லீப்பர் கோச் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களை விட சிறப்பாக இருக்கும். சமீபத்தில், இந்திய ரயில்வே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியது. இது, சாமானியர்களுக்கான புதிய பிரீமியம் ரயிலாகும். இதிலும், வரும் நிதியாண்டில் ஏசி பெட்டிகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு:
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வேளாண் துறைக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக ரூ.1.27 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த முறை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் படவில்லை?
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், மத்திய நிதி அமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
என்ன காரணம்?
பொருளாதார ஆய்வறிக்கை என்பது முந்தைய நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது, வரும் நிதி ஆண்டில் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய அறிக்கை ஆகும். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத் துறை இந்த அறிக்கையை உருவாக்கும். இது தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்படும். பொதுவாக, முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதே, அதற்கு முந்தையதினம் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும்.
ஆனால், தாக்கல் செய்யப்பட்டது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட். இதன் காரணமாகவே இந்த முறை பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்த பிறகு, வரும் ஜூலை மாதத்தில் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
பிரதான் மந்திரி காப்பீட்டின் மூலம் 4 கோடி விவசாயிகள் பலனடைந் துள்ளனர். சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 58 நிமிடங்கள் உரையாற்றினார். மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதில் வரிச் சலுகைகள் இருக்கலாம், விவசாயிகளுக்கான உதவித் தொகை உயர்வு பற்றிய அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டச் சூழலில் அப்படியான எவ்வித அறிவிப்பு இடம்பெறவில்லை.
நிர்மலா சீதாராமனின் சிறிய பட்ஜெட் உரை:
கடந்த 2019-ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் 2.17 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றினார். 2020-இல் அவரது பட்ஜெட் உரை 2.40 மணி நேரம் நீண்டது. இது இந்திய பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட உரையாகும். 2021-இல் 1.50 மணி நேரம் , 2022-இல் 1.33 மணி நேரம், 2023-இல் 1.27 மணி நேரம் அவர் உரையாற்றினார். இம்முறை இடைக்கால பட்ஜெட் என்பதால், அவரது உரை 58 நிமிடத்தில் முடிந்தது.