காவிரிக் கரையின் ஈரக்காற்று, தாயைக் கண்டதும் ஓடிவரும் மழலையின் உற்சாகத்தோடு வந்து நம்மேல் செல்லமாய் மோதும். பிறகு, நேச நண்பனாய் நம்மை ஆரத்தழுவி, கன்னத்தில் முத்தமொன்றை இட்டுச் செல்லும். காவிரிக்கரையோரத்து கவிஞர்கள் பிரசவிக்கும் கவிதைகள்கூட அப்படித்தான். காவிரி பாய்ந்த தஞ்சையில் 1950-ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று பிறந்த வர் கவிஞர் நிர்மலா சுரேஷ். இவரின் தந்தை திருச்சி புனித ஜோசப் கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியரான யு.இருதயராஜ் ஆவார். பேரறிஞர் அண்ணா வின் வலதுகரமாக இருந்தவர் இருதயராஜ். திராவிட இயக்கச் சிந்தனைகளோடு இரண்டற கலந்தவர்.
சிறுவயதிலேயே தந்தை இறந்தாலும், படிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வமுடையவராக இருந்த கவிஞர் நிர்மலா சுரேஷ், இளங்கலை பொருளாதாரமும், முதுகலை ஆங்கில இலக்கியமும் பயின்றார். இலக்கிய ஆய்வில் இளமுனைவர் பட்டம் பெற்ற இவர், தனது முனைவர் பட்ட ஆய்வை ‘ஹைக்கூக் கவிதைகள்’ எனும் தலைப்பில் செய்தது குறிப்பிடத்தக்கது.
கவியரங்கம், பட்டிமன்றங்களில் பங்கேற்று, தனது சிந்தனைகளைத் தெளிவுடனும் துணிவுடனும் பதிவுசெய்து வந்த கவிஞர் நிர்மலா சுரேஷ், திராவிட இயக்கக் கவிஞராகவே அறிமுகமானார். 1980-ஆம் ஆண்டில் ‘ஆனந்த விகடன்’ பொன்விழா கவியரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் கவிதை வாசித்தார். பின்னர் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், கவிஞர்கள் வாலி, வைரமுத்து, மு.மேத்தா உள்ளிட்ட பலரோடும் கவியரங்குகளில் பங்கேற்றார். கம்பன் கழக மேடைகளிலும் தனது தனித்துவமான உரைகளால் பாராட்டப்பெற்றார். 1981-ஆம் ஆண்டில் ‘மொழியும் அதன் வாழ்வும்’ எனும் இவரது ஆய்வு நூல் வெளிவந்து, பரவலான கவனிப்பைப் பெற்றது. 1984-ஆம் ஆண்டில் ‘மண்ணில் பதியும் பாதங்கள்’ எனும் புதுக்கவிதை நூலையும் வெளியிட்டார். அதே ஆண்டில், சென்னை வானொலியில் செய்தி வாசிப்பாள ராகப் பணியில் சேர்ந்தார். சில மாதத்திலேயே பணியிலி ருந்து வெளியேற்றப்பட்டார்.
தென்றலும் தலைமை ஏற்கும் (1987), நிர்மலா சுரேஷ் கவிதைகள் (1990), பல்கலை ஆய்வுகள் (1994) ஆகிய நூல்களை எழுதியதோடு, இலக்கிய நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்கேற்று, புகழ்பெற்று விளங்கினார். திராவிட முன்னேற்ற கழக இலக்கிய அணியின் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். பின்னர் சில காலம் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
கவிஞராக, எழுத்தாளராக வலம் வந்தாலும், அரசியலில் ஆர்வமின்றி இருந்தவர், 1991-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளராக மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்கினார். அதுபற்றி கூறுகையில், "அரசியலுக்குள் வர வேண்டும் என்று அந்தரங்கத்தில் பல நினைவுகளோடு பவனி வந்தவள் அல்ல நான். நான் கலந்துகொண்ட கவியரங்க மேடைகள் சில, என்னை அரசியல்வாதியாக்கிவிட்டது. காங்கிரஸ்காரர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். எனது எண்ணத்தைச் செயலாக்கும் அளவிற்கு என்னை விமர்சித்தவர்கள், காங்கிரஸ்காரர்கள்'' என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அப்போது நடைபெறவிருந்த தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால், அந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. நிர்மலா சுரேஷூம் தோல்வியைத் தழுவினார்.
1994-ஆம் ஆண்டில் கனடா நாட்டின் நிரந்தர குடியுரிமைப் பெற்று, தனது கணவர் சுரேஷ் மற்றும் மகன் ரிஷி, மகள் சதுராவோடும் குடியேறினார். கனடாவில் இருந்த இலக்கிய குழுக்களோடும், இதழ்களோடும் நல்ல நட்புறவு கொண்டு, அனைத்து இலக்கிய கூட்டங்களுக்கும் சிறப்பு அழைப்பாளராகச் சென்று உரையாற்றினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனடா சென்றிருந்தபோது, அவரை நேரில் சந்தித்து உரையாடினார். அங்கு வாழும் தமிழர்களை வி.பி.சிங்-கிற்கு அறிமுகம் செய்துவைத்தார்.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பேசவும் எழுதவும் திறன் பெற்றிருந்த கவிஞர் நிர்மலா சுரேஷ், கனடாவில் இருந்த காலத்தில் ஏராளமான ஆங்கில நூல்களை வாசித்தார். அதன் வழி ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மீது கவிஞருக்கு ஈர்ப்பு உண்டானது. தனது முனைவர் பட்ட ஆய்வினை ’ஹைக்கூக் கவிதைகள்’ எனும் தலைப்பில் 1989-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியம் ஆய்வு வழிகாட்டியாக துணை நின்றார்.
1993-இல் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு, 1997-ஆம் ஆண்டில் ’ஹைக்கூக் கவிதைகள்’ (இதயம் பதிப்பகம்) எனும் பெருந்தொகுப்பாக வெளிவந்தது. ஹைக்கூ கவிதைகள் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோருக்கான கையேடாக விளங்கியது. வெளிவந்தவுடனே விற்றுத்தீர்ந்த இந்த ஆய்வு நூல், பல பதிப்புகளைக் கண்டது.
இந்த ஆய்வு நூலின் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள காமராசர் அரங்கில் நடைபெற்றது. தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி விழாவிற்கு தலைமையேற்று நூலினை வெளியிட்டார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தங்கபாண்டியன் திடீரென காலமான சமயமது. விழாவில் உரையாற்றிய கலைஞர், தானுமொரு ஹைக்கூ கவிதை எழுதியிருப்பதாகக் கூறியதோடு, மேடை யிலேயே அந்த ஹைக்கூ கவிதையையும் வாசித்தார்.
அமைச்சர்கள் நிரம்பிய அவை ஓரிடம் காலி நான் மட்டும் அழுகிறேன்...’ என்றதும், அரங்கமே அந்த ஹைக்கூவை உள்வாங்கி ஆர்ப்பரித்து முழங்கியது.
ஆய்வு நூலில் தமிழ்க் கவிஞர்கள் ஹைக்கூ குறித்து அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு புதிய தகவல்களைத் தொகுத்து தந்தார். "தி ஹைக்கூ ஹேண்ட் புக்' எனும் ஆய்வு நூலை எழுதிய அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹைக்கூ ஆய்வாளர் வில்லியம் ஜே.ஹிக்கின்ஸ், நிர்மலா சுரேஷூக்கு எழுதிய வாழ்த்துக் கடித மொன்றையும் (24 நவம்பர்-1989) நூலின் பின்னிணைப்பாகச் சேர்த்திருந்தார்.
"பூக்கள் சிறியனவாயிருந்தால் என்ன? மலர்களின் அளவைப் பொறுத்தல்ல மணம்; இந்தச் சிறுகவிதைகளும் அப்படித்தான்' என்பதே கவிஞர் நிர்மலா சுரேஷின் ஹைக்கூ குறித்த மதிப்பீடு.
மேலும், "இருண்மையை ஹைக்கூ ஏற்காது' என்பது கவிஞரின் அழுத்தமான கருத்தாகும். "இருண்மை என்பது நம்மை மிரட்டும் ஒரு வார்த்தை பிரயோகமே. புரிபடாத அல்லது குழப்பமேற்படுத்தும் வார்த்தைப் பிரயோகத்தை ஹைக்கூவில் மேற்கொள்ளுதல் கூடாது' என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தினார். "சொல்லவரும் கருத்தினைத் தெளிவாக, கவிதையின் கருவிற்கு அருகில் நின்று, தெளிவுபட சொல்ல வேண்டும் என்பதே ஹைக்கூவின் சித்தாந்தம்' என்பதில் மிக உறுதியாக நின்றவர் நிர்மலா சுரேஷ்.
கனடாவிற்கும் சென்னைக்குமான தொடர் பயணத்தில் இருந்தாலும் படைப்பிலக்கியப் பணிகளைச் சோர்வின்றி தொடர்ந்து செய்தார். 1999-ஆம் ஆண்டில் பாலைவனப் பௌர்ணமிகள், எப்போதும் உதயம் எனும் இரு கவிதை நூல்களோடு, ‘அரபுக் கவிதைக்கு ஆரத்தி’ எனும் மொழிபெயர்ப்பு கவிதை நூலொன்றையும் வெளியிட்டார்.
தனது பல்லாண்டுகாலப் பெருமுயற்சியில் 2001-இல் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையாக எழுதிய ‘இயேசு மாகாவியம்’ எனும் நூலை வெளியிட்டார். இந்த நூலில், இயேசு சிலுவை சுமக்கும் காட்சியைப் பற்றி கவிஞர் வர்ணித்திருக்கும் வரிகள், ஹைக்கூ கவிதையை ஒத்திருந்தன.
‘விழுப்புண் பட்ட வீரன்
தன் நடு கல்லைத் தானே
சுமக்கிறானோ?’ (இயேசு மாகாவியம் - பக்: 601)
2004-இல் கவிஞர் வெளியிட்ட ‘சிரிக்கும் வில்லோ மரம் சென்ரியூ’ எனும் நூல், தமிழில் ஹைக்கூ எது, சென்ரியூ எது என்பது குறித்த புரிதலுக்குத் துணை நின்றது. இந்த நூலில், “ஹைக்கூ இயற்கைக் கவிதை; சென்ரியூ மக்கள் கவிதை” என்று சொல்லியிருப்பதோடு, “ஹைக்கூ முழு உண்மையையும் சொல்லாது; சென்ரியூ உண்மையைப் போட்டு உடைக்கும்” (பக்கம்: 16) என்றுரைத்தார். காரை ஹாச்சிமோன் (1718-1790) என்ற இயற்பெயரையுடைய ஜப்பானியக் கவிஞரின் புனைபெயர் காரை சென்ரியூ ஆகும். இவரது பெயராலேயே சென்ரியூ என அழைக் கப்பட்டது. சென்ரியூ என்பதற்கு ‘ஆற்றோரத்து வில்லோ மரம்’ என்பது பொருளாகும் என பல தகவல்களை விவரித்திருந்தார்.
‘உணவு விடுதியில் விருந்தினர்
மேசை விரிப்புக்குக் கீழே ஒளியும்
கைகள் - பணத்தை எண்ண.’
- கிளெண்ட் ஹாய்
‘நூலகம் மூடும் நேரம்
தூங்கிய பெண் எழுந்தாள்
கையில் மூடியிருந்த நூலோடு.’
- சிடெல் ரோஸன்பர்க்
மேலுள்ள இரு சென்ரியூ கவிதைகளும் கவிஞர் நிர்மலா சுரேஷ் மொழிபெயர்த்தவையாகும்.
‘அந்தரத்தில் காய்த்த மஞ்சள் பூசணி’ எனும்
ஹைக்கூ கவிதை நூலினை 2004-இல் வெளிக்கொண்டு வந்தார். டொரண்டாவிலிருந்து வெளிவரும் ‘சுதந்திரன்’ வார இதழில், இதழ்தோறும் பத்து கவிதைகள் வீதம் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூலிது.
‘வலைக்குள் சிக்கியும்
துடிக்காமல் உற்சாகமாய் மீன்கள்
கோஷா விழிகள்!’
‘தத்துகிறது மரக்கிளையில்
சிறகொடிந்த கிளி; பறக்கிறது
காற்றில், உதிர்ந்த சிறகு!’
‘பேசிக் கொண்டிருக்கிறது மழலை
அலங்காரத் தொட்டியில் நீந்தும்
மீன்குஞ்சுகளோடு.’
கனடா சென்றாலும் தமிழகத்திற்கு அடிக்கடி
வந்து சென்று கொண்டிருந்தார் கவிஞர் நிர்மலா
சுரேஷ். சென்னை திருவான்மியூரில் இருக்கும் கவிஞரது
இல்லத்திற்கு நான் இருமுறை சென்றிருக்கிறேன். 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்ட ‘இனிய ஹைக்கூ’ கவிதை இதழின் வெளியீட்டு விழா அழைப்பி னைக் கொடுக்கவும், கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய
‘குழந்தைகள் நிறைந்த வீடு’ ஹைக்கூ நூலுக்கான முன்னுரை பெறவும் சென்றேன். அன்புடன் வரவேற்று உபசரித்த கவிஞர், ஹைக்கூ தொடர்பாக மிகுந்த ஈடுபாட்டுடன் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
2003-இல் ‘தைலச் சிமிழும் தச்சன் மகனும்’ கவிதை நூல், 2004-இல் ‘இராக்கியக் கவிதைகள்’ மொழிபெயர்ப்பு நூல், கடிகாரக் குயிலும் கடல் குதிரையும் கவிதை நூல், திசைகளின் ஓசைகள் எனும் அனுபவக் கட்டுரைகள், ஏழிலரசியர் இருவர் எனும் வரலாற்று நூல், காதோடு காதாக... எனும் மகளிர் ஆலோசனை நூல் என சளைக்காமல் எழுத்தின் வழியே தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தவர் நிர்மலா சுரேஷ்.
1990-ஆம் ஆண்டில் இவரது கவிதைப் பணிகளைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாகத் தமிழக அரசு, ‘பாவேந்தர் பாரதிதாசன் விருதி’னை இவருக்கு வழங்கியது. சில ஆண்டுகள் தமிழ்நாடு திரைப்படக் கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். 2006-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த டாக்டர் ஜெ.ஜெயலலிதாவை மதுரையில் சந்தித்த கவிஞர் நிர்மலா சுரேஷ், அதிமுக-வில் இணைந்துகொண்டார்.
கனடா நாட்டிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ இதழின் பிரதம ஆசிரியர் என்.ஆர்.லோகேந்திரலிங்கம், “கவிஞர் நிர்மலா சுரேஷ், கடந்த 2021 மே 27 அன்று தனது 71-ஆவது வயதில் காலமாகி விட்டார்” என்று இரங்கல் பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். இச்செய்தி மிகுந்த மன வருத்தத்தை தந்தது.
தமிழ்ப் படைப்புலகில் தனித்துவமிக்க பெண் ஆளுமையாளராக வலம்வந்த புகழ்பெற்ற கவிஞரின் மறைவு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் தெரியாமலேயே முடிந்துபோனது. ஆனாலுமென்ன... தன் படைப்புகளால் தமிழ் இலக்கியத்திலும், தமிழர் மனங்களிலும் கவிஞர் நிர்மலா சுரேஷூன் புகழ் என்றும் நிலத்திருக்கும்.