அனைவருமே மறதி நோயில் சிக்கிக்கொண்டு விட்டார்கள்... சார்.
எல்லாருக்குமே மறதி...
இல்லாவிட்டால்...
நெருக்கடி... பணி நெருக்கடி உண்டானால், மறதி உண்டாகும்.
இல்லையா... சார்?
முன்பெல்லாம்...
ஓணத்திற்கு கோழிக்கோடைச் சேர்ந்த என் நண்பர் அரை கிலோ வறுத்த காயை எனக்கு அனுப்புவார். இப்போது... கடந்து சென்ற இரண்டு ஓணத்திற்கும் காயும் இல்லை, பெருங்காயமும் இல்லை.
முன்பைப்போல தலசேரிக்காரரான குஞ்ஞிக் கண்ணு அண்ணன் பருமனான ஃப்ளாஸ்கில் எனக்கு பதப்படுத்தப்பட்ட நத்தைக் கறியை ஏன் அனுப்பி வைக்கவில்லை?
தோட்டுவா என்ற கிராமப் பகுதியில் என் மருமகன்கள் இருக்கிறார்கள். தென்னையும் தேங்காயும் ஜாதிக்காயும் கிராம்பும் உள்ளகுட்டி முதலாளிகளான அவர்கள் சமீபகாலம்வரை ஒருவரோடொருவர் போட்டியிட்டு எனக்கு பலாப் பழத்தையும் மங்குஸ்தான் பழத்தையும் வடு மாங்காய் ஊறுகாயையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இப்போது பலாப்பழமும் இல்லை... குலையும் இல்லை. யானையும் வடு மாங்காயும் அம்பாரியும் இல்லை.
இல்லை... சார்.
போகட்டும்...
தின்பண்டங்கள் போகட்டும்!
நான் இவர்களுக்கெல்லாம் இடையே அவ்வப்போது இன்லேண்ட் காகிதத்தில் கடிதம் அனுப்புகிறேன். இவர்கள் பதில் அனுப்பக் கூடாதா? சாதாரண அஞ்சல் அட்டையிலாவது...?
விடுங்க... சார்.
கடிதமும் வேண்டாம்.. குடிதமும் வேண்டாம்!
ஆனால், இந்த நண்பர்கள்... இந்த உறவினர்கள்... இந்த விசேஷ சரக்குகள் அனந்தபுரிக்கு வரும்
போது...
இல்லை... வந்து பார்க்கவேண்டாமா? கொஞ்சம் ஃபோன் பண்ணக் கூடாதா?
மறதி...
நெருக்கடி... பணி நெருக்கடி காரணமாக உண்டான மறதி.... இதுதான் நேரில் சந்தித்துக் கேட்டால், கிடைக்கக்கூடிய விளக்கம்!
என் சாரே... இந்த மறதி என்ற விஷயம் ஒரு "ட்ரிக்'தானே? ஒரு தந்திரம்...?
"கிழவா... உன்னை எங்களுக்குச் சிறிதுகூட தேவையில்லை' என்பதை கூறுவதற்கான தந்திரச் செயல்...?
ஒருவேளை அதிக வயது காரணமாக எனக்கு இப்படியெல்லாம் தோன்றியிருக்கலாம். நான் இங்கு கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறேன்.
திவாகரன் தைலத்தைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருக்கிறான். வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறது.
முற்றிலும் வீட்டின் ஆட்சி. ஞாபகம் இல்லையா... பழைய வெண்டைக்காய் உயில் விஷயம்...?
ஆனால்... சார்.. எனக்கு அதிக வேலைகள் இல்லை என்பதற்காக, மற்றவர்கள் வேலைகள் அதிகம் உள்ளவர்களாக இருக்கக்கூடாதா?
இதோ.... எனக்கு முன்னால் இருக்கும் சாலையின் வழியாக எவ்வளவு ஆட்கள் அவசரகதியில் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்! பள்ளிக்கூடக் குழந்தைகள்...
சந்தைக்குச் செல்லும்... தலையில் தட்டையும் சுமையையும் வைத்திருக்கும் பெண்கள்....
சைக்கிளில் வேகமாகச் செல்பவர்கள்... இரு சக்கர வாகனத்தில் பறந்து செல்லும் அரசாங்க அலுவலர்கள்...
அனைவரும் இளைஞர்கள்...
எப்படிப் பார்த்தாலும், வயதிற்கு வராத வயதிற்கும் கீழே... அதாவது...
ஆண்- பெண் இருவருக்குமே...
ஆனால், வயதிற்கு வந்த காலத்தைக் கடந்து எத்தனையோ வருடங்களைத் தாண்டிவிட்ட... தலையில் வழுக்கை விழுந்துவிட்ட... விக்ரம்ஜிக்கு அப்படியென்ன அவசரமும் மறதியும்?
விக்ரம்ஜி நல்லவன். எனினும், சிலர் "அக்ரம்ஜி' என்று அழைக்கிறார்கள்.
இந்த கிழவன் ஆறு மாத காலமாக எண்களைச் சுழற்றி தொலைபேசி என்ற குழலின் வழியாக என்னுடன் ஒரு சிறிய வார்த்தைகூட பேசவில்லை. நான் முற்றிலுமாக "கட் அப்' செய்யப்பட்டு விட்டேன். பிறகுதான் தெரிந்தது.... அக்ரம்ஜி அமெரிக்காவிற்குப் பணம் சம்பாதிப்பதற்காகப் போயிருக்கிறான் என்ற தகவலே... ரோட்டரிமூலம் நடைபெற்ற சம்பவம்!
என்ன சார் கேட்டீங்க?
இந்த ஆறு மாத காலத்திற்கிடையே நான்
அக்ரமனை இங்கு வரவழைத்து பேசியிருக்கலாமே என்று கேட்கிறீர்களா?
அது எப்படி சார்?
நான் ஓய்வு பெற்றுவிட்ட ஊழியன்.
தங்க தம்புரான் இடையே அவ்வப்போது கணக்கிட்டுத் தரும் டி.ஏ.யையும் சேர்த்து இப்போது 1859 ரூபாய், 92 பைசாவை எண்ணி வாங்கக்கூடிய தரித்திரன். ஆமாம்... சார்! எனக்கும் தொலைபேசி என்ற குழல் இருக்கிறது. ஆனால்... சார்... நான் அதை அழைப்பைப் பெறுவதற்காக வைத்திருக்கிறேன்.
அழைப்பதற்காக அல்ல.
ஒதுங்கி இருக்கவேண்டும்.... சார்! தரித்திர நாராயணன்கள் ஒதுங்கிச் சுருண்டிருக்கவேண்டும். நீரில் சிக்கிய அட்டையைப்போல....
இருக்கட்டும்... சார்! என்னைத் தவிர, அனைவருக்கும் வேலைப்பளு.... (அத்துடன் மறதியும்) இருக்கட்டும்... சார்!
ஆனால், எனக்கு மறதி இல்லை. மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது. காலில் மட்டும் வாதம்...காலில் மட்டும்.
தெரியுமா சங்கரன் தம்பியை? தேசிங்கநாட்டில் பிறந்தவன். பெரிய வாசிப்பாளன். பணம் கொடுத்து புத்தகம் வாங்கும் மரியாதைக்குரிய மனிதன்.
தம்பியின் மூன்று புத்தகங்கள் நீண்ட காலமாக என் அலமாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன என்ற விஷயத்தை நான் மறக்கவில்லை.
நீரத் சவுதரியின் "ஹிண்டுயிஸம்'...
லே க்யாரேயின் "டிங்கர்- டெய்லர்...
சோல்ஜர்- ஸ்பை'....
பிறகு... "ரமண மகரிஷியின் தரிசனம்'.
நான் அவற்றைத் திரும்பக் கொடுக்க
நினைக்கவில்லை.
அது வேறொரு விஷயம்... தி பாய்ன்ட்... சார்... ஈஸ்... இப்படிப்பட்ட விஷயங்களைக்கூட நான் நினைக்கிறேன். என் "மெமரி' இருக்கிறதே... அது
அபாரமானது!
சந்தேகம் இருக்கிறதா... சார்?
கேளுங்கள்... எந்த கேள்வியையும் கேளுங்கள்.
என் விருப்பத்திற்குரிய விஷயம்....
வரலாறு.
அறிவியலிலும் மோசமானவன் அல்ல. லின்னேஸும் மென்டலும் ஃபாரடேயும் கெப்லரும் பழைய டாவின்ஸியும் சமீபகாலத்து ஐன்ஸ்டீனும் தோஸ்த்துகள்...
எனினும், வரலாறுதான் என் விருப்பத்திற்குரிய விஷயம்.
என்ன கேள்வி? இரண்டாவது உலகப் போர் எப்போது ஆரம்பமானது என்பதா?
1939 செப்டெம்பர் 2.
என்ன? போரில் முதலில் மூழ்கிய கப்பலின் பெயரா?
அதீனியா... பயணி மற்றும் சரக்கு கப்பல்.
ஹிட்லரின் அல்சேஷ்யன் நாயின் பெயரா?
ப்ளாண்டி.
புஷ்கின் நினைவுச் சின்னமா? சார்... அதைத்தானே கேட்டீங்க? சொல்கிறேன்.
புஷ்கினின் புத்தகத்தை வாசிக்கும் ஸ்டாலினின் சிலை.
விடுங்க... சார்.
எலுமிச்சம் பழத்தைப் பிழிவதைப்போல வரலாற்றைப் பிழிந்தெடுத்து உப்பே போடாமல் பருகியவன் நான்.
ஆனால்.... சார்... நான் ஒரு பரிதாபத்திற்குரிய கதாபாத்திரம்... தெரியுமா... சார்?
சமீபத்தில் என் மனைவியும் என்மீது குற்றம் சுமத்தினாள்... நான் மறதிக்காரன் என்று.
எனக்கு அப்போது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் போல இருந்தது.
செய்யவில்லை.
காரணம்... பாழூர் கடவுள் இன்னும் பத்து வருடங்கள் பூமி என்ற நரகத்தில் இருக்கவேண்டும் என்று எனக்கு விதித்திருக்கிறார்.
விஷயத்தைக் கூறட்டுமா... சார்?
ரத்தினச் சுருக்கமாக.... அதாவது... ரேஷன் சுருக்கமாக... முடிந்த வரைக்கும் காட்சியை வர்ணிக்கிறேன்.
சாம்பல் நிறத்திலிருக்கும் தெளிவான ஆகாயம்...
அதன் மார்பில் "பெர்னீஸியஸ் அனீமியா' என்ற நோய்க்குக் காரணமாக இருக்கும் அணுக்களின் வடிவத்தில் நிலவு...
அரிவாள் வடிவம்!
நானும் மனைவியும் படுக்கையில்...
"நீங்கள் மறதிக்காரர்...'' என்று மனைவி.
"நெவர்...'' என்று நான்.
"நேற்று என்ன தேதி?'' குறுக்கு விசாரணை தொடர்கிறது.
"ஜூலை 14.. பஸ்தீல் கோட்டைக்கு எதிரே ஃப்ரெஞ்ச் மக்கள் ஆர்ப்பரித்த நாள்! ஃப்ரெஞ்ச் புரட்சி ஆரம்பித்த நாள்!'' நான் கூறினேன்.
அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். "நீங்க எல்லாவற்றையும் மறந்துட்டீங்க.
நேற்று... ஜூலை 14... நம்முடைய முப்பத்தைந்தாவது திருமண நாள்!''
நிலவின் அரிவாள் மறைந்தது. சார்...
கார்மேகங்களின் ஆர்ப்பரிப்பிற்குக் கீழே...
மனைவிகளுக்கு குறைந்தபட்ச வரலாற்று அறிவு இல்லையெனில், நாம் என்ன செய்யமுடியும்... சார்?''v ஹேய்...!
நான் சமாதானம் செய்யவில்லை.
அவளிடம் ஒரு நல்ல வார்த்தையும் கூறவில்லை.
பிறகு என்ன நடந்தது என்கிறீர்களா?
அவள் என் முதுகில் விரல்களை ஓடவிட்டாள்.
நான் முணுமுணுத்தேன்.
"ஜோஸஃபைன்....''