ந்தப் பெயரைக் கேட்டாலே இன்னும் தமிழினப் பகைவர்களின் அடிவயிற்றுக்குள் பற்றி எரிகிறது தீ. அணைக்க முடியாத பெருநெருப்பாய் நாளுக்கு நாள் மேலெழுந்து வருகிற மாமனிதரின் பெயரை வடக்கு இப்போது வழிமொழிந்து கொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் விழிகளில் ஒளிபிறக்க வைத்த பெருமகனின் சிந்தனைகள் திசைகள் எங்கும் சிறகடித்துப் பறந்து வருகின்றன. என்ன செய்ய முடியும் எங்களை என்று எகத்தாளமாக ஏறிட்டுப் பார்த்தவர்கள் என்ன செய்தாவது இவரை மக்களிடமிருந்து விலக்கி விட முடியாதா என்று வெந்து நொந்து வண்ணங்களைப் பூசியும், சேற்றை வாரி இறைத்தும், சிலைகளை உடைத்தும் தங்களுக்குள் தாங்களே சிதைந்து போகிறார்கள். கிடைக்கும் ஊடங்களில் ஓயாமல் அவருக்கு எதிரான பொய்களையும் புரட்டுகளையும் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுயசிந்தனைச் சூரியனின் ஒளிக் கீற்றுகள் இந்த மண்ணின் மூலை முடுக்குகளில் எல்லாம் பகுத்தறிவை ஏற்றிவைத்ததன் விளைவு எதிரிகளைப் பதறவைக்கிறது. யார் அவர்?

அவரைத்தான் நம் புரட்சிக்கவிஞர்

“அவர்தாம் பெரியார்-பார்

அன்பு மக்கள் கடலின் மீதில்

Advertisment

அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்

சுரண்டுகின்ற வடவருக்குச்

சூள்அறுக்கும் பனங்கருக்கு

Advertisment

மருண்டு வாழும் தமிழர்க்கு

வாழ வைக்கும் அருட்பெருக்கு.’’

என்று சொல்லித்

தொண்டுசெய்த பழுத்தபழம்

தூயதாடி மார்பில்விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்.’’ (குயில் 26.8.1958- பாவேந்தம் தொகுதி 18 பக் 62 சிறைமீண்டார்க்குத் தில்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியார் நகர்வலக்காட்சி)

என்று பாடிப்பரவசப்பட்டார். அந்தச் சிறுத்தை சிலிர்த்த போது முடைநாற்றமெடுத்த மூடத்தனங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன. சாதியின் ஆணிவேரைக் கிள்ளி எறிந்தெறிந்தாலொழியச் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதைக் கண்டுகொண்டவர், வர்ணாசிரம வஞ்சகங்கள் விதைத்த கள்ளிச்செடிகளைக் களையெடுக்கக் காலமெல்லாம் பாடுபட்டவர் அந்தப் பெருமகன்.

மாண்பமை உச்சநீதிமன்றம் சில நாள்களுக்கு முன் வழங்கிய தீர்ப்புகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை என்று பிறப்பித்த தீர்ப்பும், பட்டியல் இனத்தவர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று வழங்கிய மற்றொரு தீர்ப்பும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கச் செய்கின்றன. பெண் ஏன் அடிமையானாள்? என்று கொதித்த பெரியார், அவர்களின் விடுதலைக்கு எப்படியெல்லாம் சிந்தித்தார் என்பதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழ எப்படியெல்லாம் உழைத்தார் என்பதையும் எண்ணிப் பார்க்கையில் எத்தனை புண்களைப் பெற்றுப் போராடினார் என்பதும் நினைவுக்கு வந்துதான் தீரவேண்டும். பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை, அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் பிறப்பித்த ஆணைகளுக்குப் பின் எவருடைய சிந்தனைகள் முழங்கிக் கொண்டி ருக்கின்றன என்பதையும் நினைக்கத்தான் வேண்டும். அதே நேரத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு மையத்தின் ஒற்றைப்புள்ளியில் ஒதுக்கப்பட்டு நிற்பதும் எல்லாவற்றுக்கும் எங்கோ கையேந்த வேண்டிய நிலையை நினைக்கையில்

“பண்டை நாளில் உலகமே பார்த்து

வியக்கும் பேரர சாக விளங்கி

தமிழ்த்திரு நாடு, தில்லியின் தாளில்

அடிமை என்ற நிலையை அடைந்தது.

இந்தியா ஒருநா டென்று கூறித்

தமிழ ரைச்சிறு பான்மைய ராக்கி

உயிரை உறிஞ்சு கின்றது தில்லி! (பாவேந்தம் தொகுதி 15 பக் 129)

என்றும்

“நாட்டையும் மொழியையும் நசுக்குதல் கண்டும்

நாய்வாழ்க்கை யைநாம் நாடுதல் நல்லதா?“ (பாவே தொகுதி 15 பக்521-)

என்றும் புரட்சிக்கவிஞர் பல ஆண்டுகளுக்கு முன்பே பற்ற வைத்த நெருப்பு நமக்குள் கொழுந்துவிட்டு எரிகிறது.

பெரியார் இல்லையென்றால் நம் மக்களின் அறிவுத் தளத்தில் இப்படியொரு பேரெழுச்சி எழுந்திருக்குமா என்பதை எண்ணிப் பார்க்காமல், வாங்கிய காசுக்கும்,

வரும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிற பதவிகளுக்காகவும், விருதுகளுக்காகவும் வாய்க்கு வந்த பொய்களையும் வஞ்சகங்களையும் வாரி இறைக்கிற சில வயிற்றெரிச்சல் குள்ளநரிகள் வரலாற்றின் தீராத களங்கமாக இன்று குதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற உள்ளங்களுக்கு ஆறுதல் சொல்ல அறிஞர் அண்ணா இல்லையே என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. தந்தை பெரியார் குறிப்பிட்டார் வைத்தியத்திலே இரண்டு முறை சொல்வார்கள். அதாவது, மருந்து கொடுத்து வியாதியைக் குணப் படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து, நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான், நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல. நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை.அவன் சாகக் கூடாது என்று கருதி, அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள்பிழைக்க வேண்டும் என்பதுதான்.

pp

நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2 000, 3000 வருஷங்களாகத் தடித்துப் போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டும் என்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும்’’( தமிழர் தலைவர் பக் 26) பெரியாரின் முரட்டுப் பேச்சு எல்லாப் பொய்மை களையும் புரட்டிப் போட்டது. எதற்காக இந்த நிலையை அவர் எடுத்தார்? இதோ அவரே சொல்கிறார்.

ஈ.வெ. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத் தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ’ யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்று கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன் (17.9.1967) என்றும்

நான் எந்த மதத்திற்கும் விரோதிதான். மதங்கள் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும். அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவன். இதை நான் 1926-ல் “நான் இந்துவாய் இறக்கப் போவதில்லை என்று கூட்டத்தில் சபதம் செய்துமிருக்கிறேன்.1922ல் இந்து மத சாஸ்திரங்களைக் கொளுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேடையிலேயே பேசினேன். 1927-ல் மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களைக் கொளுத்தினேன்.

(31.5.1936)

(ஆதி்க்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? ப.திருமாவேலன் பக் 43, 44)

இந்தக் கோபம்தான் தாழ்ந்து கிடந்த தமிழனின் தலையை நிமிரச் செய்தது. அவர் ஏன் இப்படிச் சினந்து எழுந்தார்? புரையோடிப் போன மூட நம்பிக்கைகள், புழுத்துப் போன சாதிய வெறி, கோயில், கடவுள் என்ற பெயரில் நடத்தப்பட்ட கொடுமைக் கூத்துகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் வீதியில் நடக்கவும் கட்டுப்பாடுகள், சட்டை, ரவிக்கை, செருப்பு அணியக்கூட வக்கற்ற மக்களின் வாழ்க்கை நிலை, கல்வியையும் வேலைவாய்ப்புகளையும் எளிய மக்கள் எட்டிப் பார்க்க முடியாத நிலை, தொட்டால் தீட்டு, பார்வை பட்டால் பாவம் என்று இட்டுக்கட்டப்பட்ட பொய்மைகள், தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு சாராரைக் கோயில் வாயிற்படியைக் கூடத் தொட முடியாமல் செய்த கொடுமை,புராணப் புளுகுகளை அரங்கேற்றித் தங்களின் அட்டூழியங்களை அரங் கேற்றிக் கொண்டவர்கள்,. இப்படி எத்தனையோ அவர்முன் வந்து நின்று வதைத்தன. கொதித்தார்.. சிந்திக்க வேண்டாமா நீ என்று சீறினார். மனிதனை நினை கடவுளை மற என்றார்.

இன்றைய 20ஆம் நூற்றாண்டில் இந்திய தேசம் என்னும் காட்டுமிராண்டி சமுதாயம் நிறைந்துள்ள நாட்டில் மனிதனில் பிறவியின் பேரால் மேல் ஜாதி, கீழ் ஜாதி,பிராமணன், சூத்திரன்,பறையன், முதலாம் ஜாதி, நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்கின்ற பாகுபாடும் நடப்பும் நடத்தப் படுவதும் ஆன அநீதியும், அயோக்கியத் தனங்களும் சாமி பேராலும் சாஸ்திரங்களின் பேராலும், சட்டத்தின் பேராலும் நீதியின் பேராலும் அமலில் இருந்து வருகிறது.’’ (பக் 111 விடுதலை 20.11.1967)

என்றும்

உயர்ந்த ஜாதி என்று எவன் திமிரோடு உங்கள் முன் வருகிறானோ அவனைக் குறுக்கே வரும் பாம்பைப் போலக் கருதி துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் ஜாதி ஒழிப்புக்கான சரியான மருந்து.

(பக் 9 விடுதலை27.2.1948)’’

என்றும்

மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும்.ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச் செய்வதற்காக நாம் உழைக்கும் காலத்தில் நம்மைத் தாக்குபவர்களுடைய வார்த்தைகளையாவது செயல்களையாவது நாம் சிறிதளவும் பயமின்றி, சிநேகிதர்- விரோதி என்கிற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்பட மாட்டோம். (குடியரசு 9.4.1933)’’

என்றும்

நமக்கு இரத்தத்தைப் பற்றித்தான் கவலை. வேற்றுமையில்லாத சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டுமென்பதல்ல நமது குறிக்கோள்.’’ (விடுதலை 5.10.1948)

என்றும்

மனிதன் மனிதனாக வாழ வேண்டும். எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அதுபோலவே எவனும் எனக்கு மேலானவன் அல்ல.ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்.(பக் 144 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்-பக் 144- கி.தளபதிராஜ்)

என்றும் பட்டிதொட்டி எங்கும் மக்கள் மொழியில் பேசினார். இன்றைக்குப் பதவி கிடைக்குமென்றால்

வேட்டி அவிழ்வது தெரியாமல் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிற அரசியல்வாதிகளைத்தான் காண முடிகிறது. ஆனால் பெரியாரோ

இராஜாஜி அவர்களும் இரு கவர்னர்களும், இரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும் கேட்டுக் கொண்டும் மந்திரி பதவியை வெறுத்தவன்நான். தவிர, எந்தப் பதவியையும் நான் விரும்பியவன் அல்லன்’’ (பகுத்தறிவு 21.10.1934)

என்று தெளிவுபடுத்தினார்.

இந்த மனத்தின்மை அவருக்குள் எப்படி எழுந்தது? மக்களுக்காக உண்மையாகப் பாடுபட்டதால் எழுந்தது. எவனெவனுக்கோ நாம் அடிமைகளாக இருப்பதா என்கிற நியாயமான கோபம் நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செய்த கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக எத்தகைய பழிச்சொற்களையும் ஏற்றுக் கொண்டார். எங்கிருந்தோ எவனோ சாட்டையைச் சொடுக்கினால் இங்கிருப்பவன் ஏன் எழுந்து நின்று ஓட வேண்டும் என்று எகிறினார்.

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதவாது சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு

என்பது “கடவுள், மதம்’’ மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன்.’’ (விடுதலை 17.9.1971)

என்றதோடு யார் யார் நம்மை அடிமைப் படுத்தத் துடிக்கிறார்கள் என்பதையும் அடையாளப்படுத்தினார்.

எனது கவலை, இலட்சியம் யாதெனில் அன்னியன் என்றால் வெள்ளையன், பனியா, மூல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி ஆகிய இவர்கள் ஆதிக்கத்திலிருந்து அதாவது ஆரிய ஆதிக்கத்திலிருந்து விலகுவதும், பிரிட்டீஸ்காரன், அமெரிக்கன், ரஷ்யன் மேற்கண்ட மார்வாடி, பனியா, பார்ப்பனன், மேல்லோகத்தான் என்பவன் எவனும் நம்மைச் சுரண்டக் கூடாது என்பதும் ஆகும்’’ (விடுதலை 22.2.1959)

இப்படித் தெளிவாகச் சொல்லிக்கொண்டுதான் ஒவ்வொரு போராட்டத்தையும் நடத்திக் காட்டினார். அடிமைநிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை

“விடுதலை இல்லாத போது

மொழி ஏது,?- இனம்

ஏது?-பண்டை

மேலான வரலாறும் ஏது?-நீ

விலக்கல் இலாததமிழ் இலக்கியத்தில் சல்லி

வேரும் சிறிதும்நிலைக் காது.’’ (பா.வே.18 பக் 47)

என்று புரட்சிக்கவிஞர் சுட்டிக்காட்டினார். அதனால்தான் நம் உணர்வுகளை, உரிமைகளை எப்படி ஒடுக்குவது என்பதற்காகக் கொல்லைப்புற வழியாக வல்லூறுகள் வட்டமடிக்கின்றன. மொழி உணர்வை முதலில் காயடித்துவிட வேண்டும் என்பதற்காக எதைஎதையோ செய்து பார்க்கிறார்கள். விலைபோய்விட்ட ஊடகங்கள் விச விதைகளை நாடகங்களாக, விவாதங்களாகக் காட்சிப்படுத்திக் காட்டிக் காட்டி விதைக்கின்றன. “ஒரே நாடு ஒரே மொழி’’ என்றும் “ஒரே நாடு ஒரே பணியாளர் தேர்வு’’ என்றும் அவரவர்க்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020ல் எத்தனை புற்றுகள் இருக்கின்றன என்பதைக் கல்வியாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்துக்கு முந்தி விரிக்கிற வேலையை எவர் ஏற்க முடியும். இந்திய ஒன்றியம் என்பது மாநிலங்களை உள்ளடக்கியது என்பதை மறந்து விட்டார்கள் போலும். தந்தை பெரியார் அன்றே “நமது மேன்மைக்கு , நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. நம்நாட்டுச் சீதோஷ்ண நிலைமையைப் பொருத்தும், கருத்துகளின் செழுமையைப் பொருத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். தமிழில் ஆரியம் புகுந்தததால்தான் , மற்ற மக்களெல்லாம் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு எடிசன் தோன்ற வில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். (தந்தை பெரியார் நூல் மொழி- எழுத்து) பக்187) என்றும்

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வறட்டுக் கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பானாவது இங்கிலீஷ் வேண்டாம் என்று தள்ளுகின்ற னரா? சொல்கின்றனரா? அப்படிச் சொல்கின்றபடி சங்கராச்சாரிகள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கின்றார்களா?’’ (நூல் தாய்ப்பால் பைத்தியம்-வி. அ. பெரியார் பக்185)(விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்- கி.தளபதிராஜ்)

என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவற்றை நாம் உணராமல் போனால் என்னாகும் எதிர்காலம்? பெரியார் எதற்காகக் கவலைப்பட்டார் என்பதை “தாழ்த்தப்பட் வகுப்பையோ பிற்படுத்தப்பட்ட வகுப்பையோ சேர்ந்த நீதிபதி கூட இன்று அய்க் கோர்ட்டில் இல்லை’’ (விடுதலை 16.3.1968)

“எனக்குள்ள பெருங்குறை தாழ்த்தப்பட்ட இனத் தைச் சேர்ந்தவர் அய்க்கோர்ட் நீதிபதியாக இதுவரை ஒருவர் கூட நிமிக்கப்படவில்லை என்றாலும் இனியாவது வரவேண்டும். கண்டிப்பாக வரவேண்டும்’’ (விடுதலை 3.8.1970)

என்றும் அவர் சொன்ன கருத்துகளில் கனன்று கொண்டிருக்கிறது. அதோடு நம்மவர்கள் வஞ்சக நரிகளின் வலையில் விழுந்து வாழ்விழந்து போய்விடுவார்களோ என்றும் நெஞ்சு பொருமினார்.

“எனக்கேதேவாது குறை, கவலை இருக்கமானால் அது மக்களிடையே காணப்படும் கவலையற்ற தன்மையும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான்’’ (பிறந்தநாள் மலர் 17.9.1966)

என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆரியமாயையில் அறிஞர் அண்ணா நாம் யாருக்கும் மேல் அல்ல. மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம். நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம். நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது.’’ (ஆரியமாயை பக்31)

என்று எழுதினார். திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த அண்ணா திமுகவை 1949ல் தொடங்கிய போது திமுக தோன்றியது திராவிட கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில் தான், திராவிடக் கழகத்தின் அடிப்படைக் கொள்கை களின் மீதேதான், திமுக அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கை களில் - மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறை யிலே சீர்திருத்தம், பொருளா தாரத் துறையலே சமதர்மக் குறிக் கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திமுக வின் கோட்பாடுகளாகும்.

பெரியார் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகின்ற போது கூட நான் அவரையே தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை. அந்த அவசியமும் வரவில்லை. இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணியாற்றி வருகிறேன்’’ ( திருச்சி 7.6.1967 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார் - கி. தளபதிராஜ் பக்275)

என்று பேசினார்.அதன் விளைவுதான் தமிழ்நாடு என்று பெயர்சூட்டப்பட்டதும் உலகத்தமிழ் மாநாடு கூட்டப்பட்டுத் தமிழன் என்கிற பெருமிதத்தோடு நடைபோட்டதும். அதற்குப்பின் ஏற்பட்ட வளர்ச்சி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது என்பதுதானே வரலாறு? பெரியார் மதங்களை விரட்டி அடிக்கச் சொன்னார் எனினும் முக்கியமான ஒன்றையும் அவர் முன்மொழிந்தார். என்ன அது என்கிறீர்களா?

என்ன மதம் என்றால் குறள் மதம், மனித தர்ம மதம் என்று சொல்லிப் பழக வேண்டும். யார் எதைச் சொல்லிய போதிலும் எது எத்தன்மையுடையதாயிருப்பினும் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்தபிறகே எது உண்மை என்று முடிவு செய்ய வேண்டும்.“ ( ஈவெரா பெரியார் பக் 83- ஆறு. அழகப்பன்)

திராவிடத்தின் ஆதிமக்களாகிய தமிழர்களுக்குத் தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிகமிக அரிதாகவே உள்ளது. இதன் காரணம் என்னவென்றால் கலாசாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாசாரங்களைத் தமிழன் மீது புகுத்துகின்ற வகையில் , முதல் பணியாகத் தமிழ்நாட்டின், தமிழனின் கலாசாராங்கள், பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். (ஈவெரா பெரியார்- ஆறு. அழகப்பன் பக் 87)

இந்த இரண்டு கருத்துகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய அடையாளங்களை அடியோடு அழித்தொழிக்க என்ன செய்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய காலகட்டமிது. முன்னிலும் வேகமாகப் பெரியாரை முன்னெடுக்க வேண்டிய நேரமாக இருக்கிறது. ஏனென்றால் நான் பிறப்பதற்கு முன்னேயே சூத்திரர்கள் நீங்கள்- நான்காவது சாதி நீங்கள். இப்போது நாளைக்குச் சாகப் போகிறேன். சூத்திரனாய் விட்டுவிட்டுத் தானே சாகப் போகிறேன்? அப்புறம் என்ன என்னுடைய தொண்டு. சிந்திக்கணும் நீங்கள்.. கொஞ்சம் கவலையோடு சிந்திக்கணும். நானும் போய்விட்டேன் (என்றால்) அப்புறம் இதைப்பற்றி பேசுவதற்கு ஆள் எங்கே? யார் வருவார்? வந்தால் இவ்வளவுக்குக் கூட விட்டுக் கொண்டிக்க மாட்டானே.., அரசாங்கம் இவ்வளவு பேச விட மாட்டானே. நானாக இருக்கிறதினாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுகிறான். (குடிஅரசு 4.11.1973)

என்று சொல்லிச்சென்றதை மறந்து விடக் கூடாது. அதே நேரத்தில் பெரியார் என்கிற நெருப்பை எவராவது நெருங்கி விட முடியுமா? சுயமரியாதைச் சூட்டை அணைத்துவிட முடியுமா? முடியவே முடியாது. அது நெருப்போடு விளையாடுவதாகவே முடியும். அதையும் தந்தை பெரியார் ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறது என்கிற தன்மை இருக்கும் வரையிலும், ஒருவன் தினம் ஒருவேளைக் கஞ்சிக்கு வழியின்றிப் பட்டினியில் கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் 5 வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத் தடவிக்கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறதுமான தன்மை இருக்கின்ற வரையிலும்,ஒருவன் இடுப்பு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும் மற்றொருவன் வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதன் தன்மை இருக்கின்ற வரையிலும்,பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதையும் தங்கள் சுயவாழ்வுக்கே என்று எண்ணிக் கொண்டிருக்கிற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும். மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்வியக்கத்தையும் யாராலும் ஒழிக்க முடியாது.“ (குடியரசு 9.1.1927)

என்று வெளிச்சமிட்டுக் காட்டிச் சென்றிருக்கிறார். வரலாற்றுப் பார்வையில் சொல்லப்போனால் ஈரோட்டுப் பெரியவாள் காஞ்சிச் சின்னவாள் இருவரும் தமிழர்க்குப் போர்வாள் என்கிற ஈரோடு தமிழன்பனின் கவிதை வரிகளைத் தான் சொல்ல வேண்டும்.