அனைவருக்கும் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே விருப்பம். ஒருவர் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால் அவர் அனைத்து செல்வங்களையும் அடைந்துவிட்டதாகவே இன்றைய நிலைமை உள்ளது. ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தனிப்பட்ட ஜாதகம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. பிறந்த நேர கிரகநிலை சிறப்பாக இருந்தால் திடகாத்திரமான உடலமைப்பு, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். அதுவே பிறந்த நேர கிரகநிலை சாதகமற்றிருந்தால் உடல் உபாதைகள், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னம், ஆயுள் ஸ்தானம் எனப்படும் 8-ஆம் வீடு, ஆயுள்காரகன் சனி ஆகியவை பலம்பெறுவது முக்கியம். கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் சிறப்பான உடலமைப்பு, நல்ல ஆரோக்கியத்தை ஒருவர் அடையமுடியும். கிரகங்கள் நீசம் பெற்றிருந்தாலும், பலமிழந்திருந்தாலும், வக்ரம் பெற்றிருந்தாலும் எந்த கிரகம் பலமிழந்திருக்கிறதோ அந்த கிரகத் தொடர்புடைய உடல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
ஜாதகத்தில் நீச கிரகத்தைக்கூட நம்பிவிடலாம். ஆனால் வக்ர கிரகங்களை நம்பமுடியாது. வக்ர கிரகங்கள் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பலனை ஏற்படுத்தும் என்பதனைத் தீர்மானிப்பது கடினம்.
உடல்நலம் சிறப்பாக இருப்பதுபோல் தெரியும்; ஆனால் வக்ர கிரக தசாபுக்தி நடைபெறும்பொழுது எதிர்பாராத திடீர் உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
ஒருவர் நீண்ட ஆயுளோடு இருப்பதற்கு லக்னாதிபதி பலம்பெறுவதும், சனி வலுவாக இருப்பதும், லக்னத்திற்கு 6, 8-ஆம் வீடுகள் பலமாக இருப்பதும் சிறப்பு. ஜோதிடத் தில் ஆறாம் வீட்டைக்கொண்டு ருணம், ரோகத்தைப் பற்றி அறியமுடியும். ஆறாம் வீடு பாதிக்கப்பட்டால் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானம் பாதிக்கப்பட்டால் அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
லக்னாதிபதி, 6, 8-க்கு அதிபதி, சனி ஆகிய கிரகங்கள் சுபகிரகப் பார்வையுடன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் சிறப்பான ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், திடகாத்திரமான உடலமைப்பும் ஏற்படும்.
எப்பொழுது ஒருவர் கவனமாக இருக்கவேண்டுமென பார்க்கும்பொழுது ஒருவர் ஜாதகத்தில் நீசம்பெற்ற கிரகங்களின் தசாபுக்தி, வக்ர கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும்பொழுது ஆரோக்கியக் குறைபாடுகள், உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக 6, 8-ஆமதிபதிகள் பலவீனமாக இருந்து- அதாவது நீசம்பெற்றோ, பகை நட்சத்திரங்களில் அமையப் பெற்றோ, வக்ரம் பெற்றோ இருந்து, அதன் தசாபுக்தி நடைபெறும்பொழுது திடீரென்று உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவரீதியாக உடல் உபாதைகள் ஏற்படும்.
சூரியன் பலவீனமாக இருந்தாலும், சர்ப்ப கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் அதன் தசாபுக்திக் காலங்களில் இதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட உபாதைகள், கண்களில் கோளாறு ஏற்படுகிறது. சந்திரன் பலவீனமாக இருந்தாலும், சர்ப்ப கிரகச் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் அதன் தசாபுக்திக் காலங்களில் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகும் நிலை, மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் புதன் வக்ரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு புதன் தசை அல்லது புக்தி நடைபெறும்பொழுது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள்- குறிப்பாக மூட்டுவலி, கை, கால் வலி ஏற்படுகிறது. குரு வக்ரம் பெற்றிருந்தா லும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசாபுக்திக் காலங்களில் வயிறு பாதிப்பு, குடல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் செவ்வாயின் தசை அல்லது புக்தி நடைபெறும்பொழுது ஹார்மோன் பிரச்சினை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை- குறிப்பாக ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய்க் கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆண்களுக்கு ரத்தம் சம்பந்தபட்ட பாதிப்புகள், வெட்டு காயங்கள், விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
சுக்கிரன் வக்ரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசாபுக்திக் காலங்களில் கண் பாதிப்பு, சர்க்கரை வியாதி, ரகசிய உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. சனி வக்ரம் பெற்றிருந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அதன் தசாபுக்திக் காலங்களில் உடலில் எதிர்ப்பு சக்திகள் குறையும் நிலை, உடல் ஊனம், எலும்பு சம்பந்தபட்ட பிரச்சினை, பற்களில் பிரச்சினை, கால் பாதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
சர்ப்ப கிரகங்களான ராகு- கேது சாதகமற்றிருந்து அதன் தசாபுக்தி நடைபெற்றால் அலர்ஜி பிரச்சினை, ஒருவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலை உண்டாகிறது.
ஜோதிடரீதியாக ஒருவருக்கு எந்த நேரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுமென பார்க்கும்பொழுது, சில கிரக தசாபுக்தி நடைபெறும்பொழுது உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என பிரித்துள்ளார்கள். சர லக்னம் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகர லக்னங்களில் பிறந்த வர்களுக்கு 2, 7-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமென வைத்துள்ளார்கள்.
ஸ்திர லக்னங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 3, 8-ஆம் வீடுகள் மாரக ஸ்தானங்களாகும். உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்த வர்களுக்கு 7, 11-ஆம் வீடுகள் மாரக ஸ்தானங் களாகும்.
ஆக, மேற்கூறிய விதிப்படி சர லக்னத்தில் பிறந்த வர்களுக்கு 2, 7-ஆம் வீட்டு அதிபதிகளும், 2, 7-ஆம் வீடுகளில் அமையப்பெற்ற கிரகங்களின் தசை, புக்தி நடைபெறும்பொழுதும், ஸ்திர லக்னத்தில் பிறந்த வர்களுக்கு 3, 8-ல் அமையப்பெற்ற கிரகங்களும், 3, 8-ஆம் அதிபதியின் தசை, புக்திக் காலத்திலும், உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 11-ல் அமையப்பெற்ற கிரகங்களும், 7, 11-ஆம் அதிபதியின் தசை, புக்திக் காலங்களிலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.
மேற்கூறிய கிரகங்களின் தசை, புக்தி நடைபெறும்பொழுது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, ஜென்ம ராசிக்கு 1, 7, 2, 8-ல் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது சஞ்சரித்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அக்கிரகத்துக்குரிய தெய்வங்களை மனதார வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.