Skip to main content

விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஆசை! சங்கத்தமிழன் - விமர்சனம்

Published on 19/11/2019 | Edited on 21/11/2019

நம் மனதிற்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர் என்ன செய்தாலும் பிடிக்கும். தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமீபத்தில் அப்படியாகிவிட்டார் விஜய் சேதுபதி. அந்த அன்பையும் அபிமானத்தையும் எந்த அளவு நம்பலாம், பயன்படுத்தலாம்? விஜய் சேதுபதிக்கு உருவாகி, பெருகி வரும் மாஸ், ரசிகர் கூட்டத்தை முழுமையாக நம்பி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர். எப்படி இருக்கிறது 'சங்கத்தமிழன்'?

 

vijay sethupathi



சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வரும் விஜய் சேதுபதி (முருகன்), ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரை பெரும் பணக்காரரின் மகளான ராஷி கண்ணா காதல் செய்கிறார். இருவரும் ஒன்றாய் நேரம் கழிப்பதை அறியும் ராஷி கண்ணாவின் தந்தை இடைவேளைக்கு சற்று முன் விஜய் சேதுபதியை பார்க்க வருகிறார். விஜய் சேதுபதியை பார்த்து அதிர்ச்சியடையும் அவர், "இவன் முருகன் இல்லடா... சங்கத்தமிழன்டா..." என்கிறார். பிறகு என்ன? என்னவெல்லாம் வருமென்று நம் மனது சொல்கிறதோ அதெல்லாவற்றையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.


முதல் காட்சியில் ஒரு வில்லன் கும்பலால் பெண் ஒருவர் பலவந்தப்படுத்தப்படும்போது என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி, பெண்ணை காப்பாற்றி, "கீழ அத்தனை பேர் இருக்கும்போது எப்படிடா மேல வந்த?" என்று கேட்டவருக்கு, "அதை கீழ இருக்கவன்கிட்ட கேளுடா, நான்தான் மேல வந்துட்டேன்ல" என்று பன்ச் சொல்கிறார். திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்கச் செல்லும் பெண்ணுக்கு அறிவுரை சொல்கிறார், அவரது தந்தைக்கு அறிவுரை சொல்கிறார், சினிமா முயற்சி செய்வோருக்கு அறிவுரை சொல்கிறார், கிராம மக்களுக்கு அறிவுரை,  விவசாய அறிவுரை என பாசிட்டிவ் விஷயங்களை பாதையெங்கும் தூவிச் செல்கிறார் விஜய் சேதுபதி. வழியில் ஆங்காங்கே அரசியல் டச், காதல், சண்டை என ஒரு முழு மாஸ் நாயகனாக உருமாறி முழு மாஸ் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் போல... தவறான ஆசையில்லை. இத்தனையும் வெற்றி பெற அடித்தளமான நல்ல கதை, திரைக்கதை இருக்கிறதா என்பதை உறுதி செய்திருக்கலாம்.

 

 

vijay sethupathi soori



விஜய் சேதுபதி, தனது ஸ்டைல் வசனம், மேனரிசம்களால் நாம் பார்த்துப் பழகிய நாயகன் பாத்திரத்தை வித்தியாசப்படுத்தி கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். அவருடன் வரும் சூரி, சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். நாயகிகளில் ராஷி கண்ணா, ஹீரோவை லவ் பண்ணும் பணக்காரத் தந்தையின் மகளாக எந்த சிறப்புமில்லாத பாத்திரத்தில் உலா வருகிறார். இன்னொரு நாயகி நிவேதா பெத்துராஜ், தைரியமான கிராமத்துப் பெண்ணாக துடிப்பான பேச்சுடன் கவனம் ஈர்க்கிறார். நாசர், மைம் கோபி, ஸ்ரீமன், கல்லூரி வினோத், இன்னும் பலரென எக்கச்சக்க நடிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், எந்த நடிகருக்கும் புதிதாக, பெரிதாக மனதில் நிற்கும் பாத்திரம் இல்லாதது குறை. மிரட்டலான வில்லன்களாக வரும் இருவரையும் பார்த்து பயத்திற்கு பதில் பாவ உணர்வே வருகிறது.


அறிமுகக் காட்சியில் பெண்ணை காப்பாற்றும் ஹீரோ, திருவிழாவில் தீவைக்கும் வில்லன், ஹீரோவை பழிவாங்க ஊர் மக்களை தாக்கும் டெக்னிக், அடிக்கடி ஸ்லோ மோஷனில் நடை, அடிக்கு அடி ஸ்லோ மோஷன் என படத்தில் எங்கெங்கு காணினும் பார்த்துப்பழகிய விஷயங்களை நச்சு ஆலைக்கு எதிராகப் போராட நாயகன் தலைமையில் இணையும் கிராமம் என்ற சமீபத்திய ட்ரெண்டில் கலந்து கொடுத்திருக்கிறார் விஜய் சந்தர். ஆனால் அது சரியாகப் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.மக்கள் போராட்டங்களை 'ட்ரெண்ட்' என்று சொல்வது தவறுதான். ஆனால், அந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன தொடர்ந்து அத்தகைய காட்சிகளை, கதையை கொண்டு வரும் படங்கள். குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் நாயகன் மட்டுமே போதும், அவரை 'மாஸ்'ஸாகக் காட்டினால் போதுமென்று அவர் திருப்தியடைந்துவிட்டார் போல... படம் பார்த்தவர்கள் திருப்தியடையவில்லை. இந்தப் படத்தின் நோக்கத்திற்குத் தங்களால் இயன்ற அளவு உதவியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும், இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இரட்டையர்களும். 'கமலா கலாசா' பாடல் கலகலப்பாகக் கடக்கிறது.

 

 

rashi kanna



2000ஆம் ஆண்டு தொடங்கி பல வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் வணிக ரீதியான பொழுதுபோக்குப் படங்களுக்கென ஒரு டெம்ப்லேட் உருவானது. தில், தூள், கில்லி, திருப்பாச்சி, ஏய், சாமி... இப்படி பல படங்களில் சில சில மாற்றங்கள் இருந்தாலும் நாயகனுக்கான தன்மை, பன்ச் வசனங்கள், சண்டை காட்சிகள், வில்லனின் தன்மைகள், பாடல்கள் உள்ளிட்ட பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமையை உணரலாம். அந்த ஒற்றுமையை தாண்டி அந்தந்தப் படங்களின் சுவாரஸ்யங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவை, பாடல்கள் என பலவும் சேர்ந்து அந்தப் படங்களை வெற்றிப்படங்களாக்கின. பின்னர் இந்த டெம்ப்லேட் படங்கள் குறைந்துவிட்டன. அந்த டெம்ப்லேட்டை மட்டும் கொண்டு வந்திருக்கிறது 'சங்கத்தமிழன்'. விஜய் சேதுபதி மீதான ரசிகர்களின் அன்பும் அபிமானமும் எப்படிப்பட்ட படங்களால், பாத்திரங்களால் உருவானது என்பதையும் அவர் திரும்பிப்பார்க்கவேண்டும்.                     
        

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.