Skip to main content

விஜய் மட்டும் போதுமா? பிகில் - விமர்சனம்

Published on 26/10/2019 | Edited on 27/10/2019

சென்ற தீபாவளி 'சர்கார்', அதற்கு முன்பு 'மெர்சல்' என தொடர்ந்து தமிழ் சினிமா தீபாவளியை தன் வசமாக்கும் முயற்சியில் இருக்கும் விஜய்யின் இந்த தீபாவளிப் பரிசு 'பிகில்'. இந்த தீபாவளி 'பிகில்' தீபாவளி என்ற குதூகலத்துடன் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி, கொண்டாட்டமா ஏமாற்றமா?

 

bigil vijay



வடசென்னை டான் மைக்கேல், ஐந்து நிமிடத்தில் அமைச்சரை புது அரசு ஆணை வெளியிட வைக்கும் அளவு கெத்து... எந்த நேரமும் அவரை சுற்றி இருக்கும் பாசக்கார 'புள்ளிங்கோ'தான் அவரது சொத்து. இதை அவருக்கு விட்டுச் சென்றவர் அவரது தந்தை 'ராயப்பன்'. ராயப்பனின் கனவு, தனது மகனின் ஃபுட்பால் திறமை அவனது வாழ்வை மட்டுமல்லாமல் அந்தப் பகுதி மக்களின் வாழ்வையும் அடையாளத்தையும் மாற்ற வேண்டும் என்பது. ஆனால், வில்லன்கள் சும்மா இருப்பார்களா? ராயப்பனை கொன்று மைக்கேலின் வாழ்க்கையில் 'டேக் டைவர்ஷன்' போடுகிறார்கள். தந்தையின் கனவு என்ன ஆனது? கண்டிப்பாக ஒரு மாஸ் ஹீரோவின் படத்தில் அந்தக் கனவு நனவாகிவிடும். எப்படி ஆகிறது என்பதுதான், ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் மசாலா 'பிகில்'.

 

kaithi ad



ஒரு டான் ஆக்ஷன் கதை, ஒரு ஸ்போர்ட்ஸ் கதை... இரண்டும் கலக்கப்பட்டிருக்கும் 'பிகில்'லை ஆக்கிரமித்திருப்பது நாயகன்தான். விஜய் ரசிகர்களுக்கு பல 'கூஸ் பம்ப் மொமெண்ட்'டுகளை பரிசளித்திருக்கிறார் அட்லி. ராயப்பனாகவும் மைக்கேலாகவும் சண்டைக் காட்சிகளில் மெர்சல் செய்கிறார், ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் கில்லி அடிக்கிறார், விஜய். அவற்றுக்கு 'வெறித்தனம், வெறித்தனம்' என இறங்கி அடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் கேமரா கோணங்களும் வலு சேர்க்கின்றன. ஹீரோயிசத்திற்கு அடுத்ததாகப் படத்தில் ஈர்ப்பது பல்வேறு காரணங்களால் முடங்கியிருக்கும் பெண்களை தங்கள் கனவுகளைத் தொடர, வாழ அழைக்கும் காட்சிகளும் 'சிங்கப் பெண்ணே' பாடலும்.

 

rayappan vijay



விஜய், ஒவ்வொரு படத்திலும் கூடிடும் எனர்ஜி, பொலிவுடன் செம்ம ஸ்மார்ட்டாக இருக்கிறார். அதுவும் அட்லி படங்களில் இன்னும் கொஞ்சம் பளிச்சென இருக்கிறார். கர கர குரல், ஃபிட்டான உடல் என வயதான ராயப்பன் பாத்திரத்திலும், கல கல பேச்சு, விறு விறு ஆக்ஷன் என மைக்கேல் பாத்திரத்திலும் தன்னால் முடிந்த வேரியேஷன் காட்டியிருக்கிறார். படத்தில், விஜய்யை தவிர்த்து நம் மனதில் இடம் பிடிப்பது வெகு சிலர்தான். ஒன்லைன் காமெடிகளால் யோகிபாபுவும் உருக்கமான ஃபிளாஷ்பேக்கால் கால்பந்து வீராங்கனையாக வரும் ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் கவனமீர்க்கிறார்கள். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சமீபத்திய பாத்திரங்களில் மிக சுமார் 'பிகில்'தான். எந்த சிறப்பும் இல்லாத பாத்திரம் என்றாலும் நயன் வரும் காட்சிகளில் அழகு சேர்க்கிறார். கதிர், இந்துஜா இருவரும் நன்றாக நடிக்கக் கூடியவர்கள். கதிர், குறைவாகப் பயன்பட்டிருக்கிறார், இந்துஜா சற்று அதிகமாக நடித்திருக்கிறார். வில்லன் ஜாக்கி ஷ்ராஃப், ஆழமில்லாத பாத்திரமென்றாலும் தனது அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி உள்ளிட்ட இன்னும் பலர் படத்தில் இருக்கின்றனர். விவேக், ஆங்காங்கே பழைய 90ஸ் மேஜிக்கை முயன்றிருக்கிறார், ஓரிரு இடங்களில் வொர்க்-அவுட் ஆகிறது.

இரண்டு விதமான கதைகளை மிக்ஸ் செய்த அட்லி, இரண்டிலுமே ஆழமும் அழுத்தமும் இல்லாமல் போனதை கவனித்திருக்க வேண்டும். நாயகன் விஜய் தவிர்த்த மற்ற எந்த பாத்திரங்களுக்கும் முழுமையான தன்மை என்பதே இல்லாமல் இருப்பது குறை. ஜாக்கி ஷ்ராஃப் என்ற பெரிய நடிகரை வில்லனாக நடிக்க அழைத்துவிட்டு அவரது பாத்திரத்தையும் இத்தனை பலவீனமாக எழுதியிருக்க வேண்டாம். இன்னொரு வில்லனான டேனியல் பாலாஜியும் எந்தப் புதுமையும் செய்யவில்லை.  விஜய்யின் பாத்திரங்களிலேயே கூட ராயப்பன் பாத்திரத்துக்கு பின்னணி, தன்மை என எல்லாம் மேலோட்டமாகவே இருக்கிறது. தொடக்கத்தில் சென்னை மொழி பேசும் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் போகப்போக அதை மறக்கின்றனர். நாயகன் வாழும் பகுதியில் மக்கள் கூட்டம், ஃபுட் பால் ஆட்டக் காட்சிகளில் மைதானம், அரங்கம் என அனைத்திலும் அதீதம் என பிரம்மாண்டம் காட்சி அளவில் மட்டுமே இருக்கிறது. கதைக்குள் அது இல்லாததால், இவை அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு செயற்கையாகத் தெரிகிறது. சென்னை முதல் டெல்லி வரை காவல்துறை கடமைக்கு வருகிறது. குறிப்பாக டெல்லி காவல் நிலையத்தில் மைக்கேல் செய்யும் அலப்பறைகளை காணும் போது இவ்வளவு பலம் பொருந்தியவரா மைக்கேல் என இயற்கையாய் கேள்வி எழுகிறது.
 

 

jackie



வழக்கமாக நம் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுத்துக்கொள்ளும் அத்தனை சுதந்திரங்களையும் அதிகமாகவே எடுத்துக்கொள்கிறார் அட்லி. ஃபுட்பாலுக்கே உண்டான நுணுக்கங்களோ, வார்த்தைகளோ கூட படத்தில் எங்கும் இல்லாதது குறை. வீரர்கள் தேர்வு, அணியின் அமைப்பு என அனைத்து முடிவுகளையும் நாயகனே எடுத்துவிடுகிறார். படம் நெடுக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சற்று தொய்வான இந்தத் திரைக்கதைக்கு மூன்று மணிநேரம் என்பது சற்று அதிகம்தான். நீளத்தை குறைத்திருந்தால் அது படத்துக்கோ பார்பவர்களுக்கோ  உதவியிருக்கக்கூடும்.


விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தும் பல வசனங்களை எழுதியுள்ள அட்லி - ரமணகிரிவாசன் கூட்டணி, திரைக்கதையில் கோல் அடிக்க மிஸ் பண்ணிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் 'வெறித்தனம்' பின்னணி இசையும் 'நெஞ்சுக்குள்ள' மற்றும் 'சிங்கப்பெண்ணே' பாடலும் படத்திற்கு பெரும் பலம். ஆனால், மற்ற இடங்களில் அவருமே சற்று அடக்கி வாசித்திருக்கிறார். 'சிங்கப்பெண்ணே' பாடலை மிக சிறப்பாகப் படமாக்கியிருப்பதில் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் பங்கு பெரியது. படம் முழுவதையும் வண்ணமயமாக ரிச்சாகக் காட்டியிருக்கிறார் விஷ்ணு. அதுவே சற்று அந்நியத்தன்மையையும் உண்டாக்கியிருக்கிறது.

அட்லி, விஜய்யை இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. ஒரு வெற்றிப் படத்திற்கு விஜய் மட்டுமே போதும் என்று முடிவு செய்தால் அது விஜய் ரசிகர்களுக்கே கூட சில நேரங்களில் ஏமாற்றத்தை தரும். அதை உணர்ந்து வடசென்னை பின்னணி, ஸ்போர்ட்ஸ், பெண் விடுதலை என பல வெடிகளை வைத்திருக்கிறார்.  தீபாவளி வெளியீடு என்பதால் சுமாராக வெடித்தும் இருக்கிறது பிகில்! 
                                       

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி - இரண்டு ஹீரோயின்களிடம் அட்லீ பேச்சு வார்த்தை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
trisha or samantha to pair in atlee next allu arjun movie

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

trisha or samantha to pair in atlee next allu arjun movie

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருவதையடுத்து தற்போது ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளான வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், மலையாளத்தில் ஐடென்டிட்டி, ராம் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா படத்தை கைவசம் வைத்துள்ளார். சமந்தா சிட்டாடெல் நெப் தொடரை வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வருகிற 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக வெளியாகிறது.