Skip to main content

ரஜினின்னா 'கரிஸ்மா'... முருகதாஸ்ன்னா? தர்பார் - விமர்சனம்

Published on 09/01/2020 | Edited on 10/01/2020

ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ஸ்வாக், ஸ்டைல், ஹீரோயிசம்... இன்னும்... ஒரு நாயகனின் கவர்ச்சியை குறிக்க இப்போது பயன்படுத்தப்படும் அத்தனை வார்த்தைகளுக்கும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்த்தமாக நின்றுகொண்டிருக்கும் தமிழ் திரை நாயகன் ரஜினிகாந்த். காண்போரில் பெரும்பாலானோரை கவர்ந்து, இன்ஸ்பிரேஷனாகத் திகழும் வண்ணம் ஒருவருக்கு இயல்பாக இருக்கும் ஈர்ப்பு அம்சத்தை 'கரிஸ்மா' (charisma) என்று கூறலாம். ரஜினிக்கு, திரையில் அந்த கரிஸ்மா உண்டு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். 2020ஆம் ஆண்டின் முதல் பெரிய படமாக வெளிவந்திருக்கும் 'தர்பாரி'ல் ரஜினியின் கரிஸ்மா தொடர்கிறதா? ரசிகர்கள் மனதில் ரஜினியின் 'தர்பார்' தொடர்கிறதா? 

 

rajinikanth



ஆதித்யா அருணாச்சலம்... எடுத்துக்கொண்ட காரியத்தை இடையில் நிறுத்தாத, போலீஸ் வேலைக்காக தாடியை எடுக்காத, எவர் எதிரில் வந்தாலும் அஞ்சாத, குற்றம் செய்தவர் என தான் நினைப்பவரை கொலை செய்யத் தயங்காத, பேட் காப் (bad cop). மும்பை காவல்துறையின் மேல் மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்க, மும்பை காவல்துறையை புணரமைக்க, டெல்லியில் இருந்து நியமிக்கப்படுகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினிகாந்த்). மும்பையில் களமிறங்கியவுடன் எதிர்கொள்ளும் ஒரு பெரிய இடம் தொடர்புடைய குற்ற வழக்கை பயன்படுத்தி, மும்பையை க்ளீன் செய்யத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில் தனது மகள் (நிவேதா தாமஸ்) கொலை செய்யப்பட, ரௌத்திரம் கொண்டு பழிவாங்கும் சிம்பிள் கதைதான் ஏ.ஆர்.முருகதாஸின் 'தர்பார்'.

நூறு வில்லன்கள் இருந்தாலும் சிங்கிளாக சென்று வெளுத்துவாங்கும் 'பேட் காப்'பாகவும் வேறு வேறு ஆங்கில்களில் ஐடியா பண்ணி துப்பறியும் 'ஸ்மார்ட் காப்'பாகவும் அன்பை பொழியும் தந்தையாகவும் குறும்பு  வழியும் சீனியர் காதலராகவும் முதல் பாதி முழுவதும் ரஜினியின் 'தர்பார்' களைகட்டுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை போலீசாகக் காட்டியுள்ள முருகதாஸ், ஏற்கனவே அவரிடம் ரசிக்கப்படும் அம்சங்களை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். ஸ்மார்ட் ஐடியாக்கள், அதிரடிகள் என முதல் பாதியில் முருகதாஸின் எழுத்து நாம் ரசிக்க பல விஷயங்களை வைத்துள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஓப்பனிங் சீனில் அதிகம் யோசிக்கவில்லை போல... ரஜினி படங்களின் ஈர்ப்பாக இருக்கும் இன்னொரு அம்சம் பன்ச் வசனங்கள். 'தர்பாரில்' எந்தப் பன்ச்சும் பலமாக இல்லை. ஆனால், ஆங்காங்கே சிறு சிறு அரசியல் குத்துகளில் கைதட்டல் பெறுகிறார் முருகதாஸ்.

 

nayanthara



மும்பை குற்றங்கள், பின்னணி, நயன்தாராவுடன் குறும்பு நட்பு, யோகிபாபுவின் கவுண்ட்டர் கலாட்டா என கலகலப்பாக, ஓரளவு விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற முருகதாஸ், இரண்டாம் பாதியில் முழு பாரத்தையும் ரஜினியின் தோள்களில் வைத்துவிட்டார். சுவாரசியம், பலம் இல்லாத வில்லன் பாத்திரம் (சுனில் ஷெட்டி), நாயகன் - வில்லன் இருவருக்குமிடையில் விறுவிறுப்பான தேடல், வேட்டை, சண்டை எதுவும் இல்லாதது, மீண்டும் மீண்டும் சண்டையிலேயே சால்வ் ஆகும் பிரச்சனைகள் என த்ரில்லராக இல்லாமல் ஆக்ஷனாகவே நகர்ந்து முடிகிறது படம். அங்கு மனதில் நிற்பது ரஜினி - நிவேதா தாமஸ் இருவரின் பாசக் காட்சிகள் மட்டுமே. மும்பை காவல்துறைக்கு ஏற்பட்ட பெரும் களங்கம், போதை மருந்தால் சீரழிக்கப்படும் இளைஞர்கள் என சுவாரஸ்யத்துக்கான சாத்தியங்கள் நிறைந்த களத்தை எடுத்துக்கொண்ட முருகதாஸ், திரைக்கதையில் நின்று விளையாடியிருக்கலாம். ரமணாவின் மருத்துவமனை காட்சி, துப்பாக்கியின் ஷூட்-அவுட் காட்சி ஆகியவற்றில் இருந்த முருகதாஸ் மேஜிக் இதில் மிஸ்ஸிங். சில ஐடியாக்கள் 'செம்ம' சொல்லவைத்தாலும் அவை போதவில்லை. அதுபோல வில்லன் பாத்திரத்திலும் துப்பாக்கி, ஏழாம் அறிவு, ஸ்பைடர் போன்ற சுவாரசியம் இல்லை. ரஜினியின் ஸ்டைலும் டெலிவரியுமே படத்தின் இறுதிக்கட்டத்தை நகர்த்துகின்றன.


சூப்பர் ஸ்டாரின் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்குப் பெரிய வேலையில்லை. அவ்வப்போது வந்து அழகால் ஈர்த்து செல்கிறார் நயன்தாரா. நாயகியின் 'லில்லி' பாத்திரத்தை விட நிவேதா தாமஸ் நடித்திருக்கும் 'வள்ளி' (நாயகன் மகள்) பாத்திரம் வலுவாக இருக்கிறது. நிவேதா சிறப்பாக நடித்துள்ளார். ரஜினியை ஜாலியாக சீண்டும் யோகி பாபுவின் கவுண்ட்டர் வசனங்கள் சிரிக்க, ரசிக்க வைக்கின்றன. 'சந்திரமுகி' படத்தில் ரஜினி பிரபுவிடம் சொல்வது போல, ரசிகர்கள் யோகி பாபுவிடம் சொல்லலாம்... "நீங்க குண்டா இருந்தாதான் அழகு", இளைத்துவிட்டார். இந்தப் பாத்திரங்களைத் தவிர யாரும் மனதில் நிற்காமல் செய்து விடுகின்றன, டப்பிங், மொழி கோளாறுகள். முதல் பாதி வில்லனாக வரும் நவாப் ஷா, மெயின் வில்லனான சுனில் ஷெட்டியை ஓவர்டேக் செய்துவிடுகிறார்.

 

 

sunil shetty



அனிருத் இசையில் 'சும்மா கிழி' பாடல், தரமான அனுபவம், அதன் படமாக்கலில் எதுவும் சிறப்பில்லை என்றாலும். தன் இடைவிடாத பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு 'மாஸ்' ஏற்ற முழு மூச்சாக முயன்றிருக்கிறார். பல இடங்களில் வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது, சில இடங்களில் கொஞ்சம் ஓவராகியிருக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு எந்த இடத்திலும் ஸ்பெஷலாக உணர வைக்கவில்லை, அதே நேரம் குறையுமில்லை. சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஸ்டாரின் அசைவுகளையும் அடிகளையும் அதிரடியாகக் காட்டுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் பல காட்சிகள் தப்பித்துவிட்டன. கஜினி, துப்பாக்கி போன்ற படங்களிலேயே சில பாடல்கள், காட்சிகள் இல்லாவிட்டால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே தோன்றும். ஆனால், வணிகம் என்ற காரணம் கருதி  வைத்திருப்பார் இயக்குனர். அவை அந்தப் படங்களின் உறுதியால் படங்களை பாதிக்கவில்லை. ஆனால், இங்கே, இரண்டாம் பாதியில் வரும் திருமண பாடல், படத்தை பாதிக்கிறது, நம்மை சோதிக்கிறது.

மொத்தத்தில் இது ரஜினியின் 'தர்பார்'... அங்கே முருகதாஸ் கொஞ்சம் வீக்காக இருக்கிறார்.                                                    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.