Skip to main content

மசாலா படங்களுக்கு மத்தியில் ஒரு பான் இந்தியா காதல் காவியம் - சீதா ராமம் விமர்சனம் 

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

sita ramam movie review

 

மீண்டும் தெலுங்கிலிருந்து தமிழில் வெளியாகியிருக்கும் ஒரு பிரமாண்டமான பான் இந்தியா படம் சீதா ராமம். இந்த தடவை ஃபேண்டசி அல்லது ஆக்ஷன் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு காதல் காவியமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெளியான பிரம்மாண்ட படங்கள் கொடுத்த சிலிர்ப்பை இப்படமும் கொடுத்ததா?

 

1960களில் பாகிஸ்தானின் தலைமை இராணுவ அதிகாரியாக இருக்கும் சச்சின் கடேகர் 20 வருடங்களுக்குப் பிறகு தான் சாகும் தருவாயில் இருக்கும் போது ஒரு பழைய கடிதத்தை தன் பேத்தி ராஷ்மிகாவிடம் கொடுத்து அதை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் சென்று சேர்க்கும்படி கூறிவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதா மகாலட்சுமியை தேடி இந்தியாவில் சுற்றித் திரிகிறார் ராஷ்மிகா. முகவரியே இல்லாத சீதா மகாலட்சுமியை தேடி இந்தியா முழுவதும் அலைந்து திரியும் பயணத்தில் சீதா மகாலட்சுமிக்கும் இந்திய ராணுவ லெப்டினன்ட் (துல்கர் சல்மான்) ராமுக்கும் இடையேயான காதலைப் பற்றி ராஷ்மிகா தெரிந்து கொள்கிறார். இதையடுத்து முகவரியே இல்லாத சீதா லட்சுமியை ராஷ்மிகா கண்டுபிடித்து கடிதத்தை தாத்தாவின் ஆசைப்படி ஒப்படைத்தாரா, இல்லையா? லெப்டினன்ட் ராம் என்னவானார்? என்பதே இக்காதல் காவியத்தின் மீதி கதை. 

 

sita ramam movie review

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகச்சிறந்த ரொமான்டிக் லவ் ஸ்டோரியை கொடுத்துள்ளார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. ஆல் டைம் ஃபேவரிட் காதல் படங்கள் என ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டால் அதில் இடம் பிடிக்கும் திரைப்படங்களுக்குள் ஒரு படமாக இப்படம் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவு மனதை உருக வைக்கும் ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியை சிறப்பான முறையில் அழகான கவிதை போல் கொடுத்து பார்ப்பவர்கள் மனதை வருடி இருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. குறிப்பாக இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வை கொடுக்காமல் நேரடி தமிழ்ப்படம் போன்ற உணர்வை கொடுக்க வசனம், உதட்டசைவு என பலவற்றில் மெனகெட்டுள்ளது படக்குழு. ஒரு சிறந்த காதல் படத்திற்கு என்னென்ன தேவையோ அதை சரியான கலவையில் சிறப்பாக கொடுத்து, வசனமும் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் ரசிக்கத்தக்க வகையில் கச்சிதமாக அமைந்துள்ளன. மேலும், இப்படத்தின் கதாபாத்திர தேர்வும், கதை நடக்கும் காலத்திற்கு ஏற்ப அக்கதாபாத்திரங்களின் நடை உடை பாவனைகளை அமைத்த விதமும் பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது படத்தின் மேக்கிங். இதற்காக ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கலை இயக்குநரும் ஒருசேர போட்டிருக்கும் உழைப்பு படத்தை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதேபோல் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதை, வசனத்தையும் அழகாக அமைத்து கதைக்குள் இருக்கும் பிரம்மாண்டத்தையும் அழகாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். 

 

ராணுவ லெப்டினன்ட் ராமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக நடித்ததை காட்டிலும் லவ்வர் பாயாக நடித்திருக்கும் நடிப்பில் செஞ்சுரி அடித்துள்ளார். காதல் வந்த இளைஞரின் உணர்ச்சிகளை தன் முகபாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி ராம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிக்க வைத்துள்ளார். மிகவும் கடினமான காட்சிகளில் கூட இவரின் அசால்ட்டான நடிப்பு யதார்த்தமாக அமைந்து நடிப்பதே தெரியாத அளவிற்கு அழகாக அமைந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய பலமே நாயகி மிருணால் தாக்கூர் தான். இவர் எந்த காட்சியில், எந்த பிரேமில், எந்த உடையில் பார்த்தாலும் அழகாக தெரிகிறார், அம்சமாக நடித்திருக்கிறார். குறிப்பாக விண்டேஜ் காட்சிகளாக நகரும் இப்படத்தில், அந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களின் நடை உடை பாவனைகளை மிக அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறியிருக்கிறார். இவருக்கு விருதுகள் நிச்சயம்.

 

sita ramam movie review

 

பாகிஸ்தான் பெண்ணாக வரும் ராஷ்மிகா மந்தானா துடுக்கான பெண்ணாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் கோபப்படும் இடங்களில் சரியான அளவில் கோபப்பட்டும், இறக்கப்படும் இடங்களில் சரியான அளவில் இறக்கப்பட்டும், நெகிழ்ச்சி அடையும் இடங்களில் சரியான அளவில் நெகிழ்ச்சியாக நடித்தும் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். கூடவே இவரது நண்பராக நடித்திருக்கும் நடிகர் தருண் பாஸ்கர் ஆங்காங்கே சில கலகலப்பான பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். துல்கர் சல்மானின் நண்பராக வரும் வெண்ணிலா கிஷோர் தனக்கு கிடைத்த ஸ்பேசில் சரியாக விளையாடி நல்ல  நகைச்சுவை செய்து சிரிக்க வைத்துள்ளார். துல்கர் உடன் இன்னொரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் எர்லகட்டா சுமந்த் குமார் நடிப்பால் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பூமிகா, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர்.

 

விஷால் சந்திரசேகர் இசையில் சில பாடல்கள் மட்டும் தரம். பின்னணி இசை உலகத்தரம். பிஎஸ் வினோத் & ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்து பிரமிப்பை கூட்டியுள்ளது. குறிப்பாக ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மிருணாள் தாகூர் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகளும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும், அதேசமயம் மிக அழகாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இப்படm ஏற்படுத்தும் பிரமிப்புக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது இப்படத்தின் கலை இயக்கம். 1960-களில் ஆரம்பித்து 1980 களில் நடக்கும் கதையாக இருப்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் பிரதிபலிக்க சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார் கலை இயக்குநர். அதேபோல, அக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல் அழகான உடைகளை சரியான கலவையில் கொடுத்து படத்தை இன்னமும் மெருகேற்றி உள்ளார் காஸ்ட்யூம் டிசைனர்.

 

ஆக்ஷன் படங்கள், வரலாற்று படங்கள், கேங்ஸ்டர் படங்கள் என பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் பான் இந்தியா படங்களின் வரிசையில் பிரம்மாண்ட காதல் காவியமாக வெளியாகியிருக்கும் சீதாராமம் திரைப்படம் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது. படத்தின் பாடல்களும், படத்தின் நீளமும் படத்திற்கு சற்று மைனசாக பார்க்கப்பட்டாலும் காட்சிகளுக்குள்ளும், கதைக்குள்ளும், காதலுக்குள்ளும் இருந்த பிரம்மாண்டத்தை அழகாக வெளிப்படுத்தி மைனஸ் விஷயங்களை மறக்கடிக்கச் செய்துள்ளது இந்த சீதாராமம் திரைப்படம்.

 

சீதா ராமம் - காதல் காவியம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.