Skip to main content

தற்காப்பு விழிப்புணர்வா? -  ‘சித்தா’ விமர்சனம்!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

siddha movie review

 

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் சித்தா. இந்த தடவை பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய கதையை எதார்த்த சினிமாவாக கொடுத்திருக்கிறார். அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை ரசிக்க வைத்துள்ளது? என்பதை பார்க்கலாம்.

 

பழனியில் உள்ள கார்ப்பரேஷனில் குப்பை அள்ளும் பிரிவில் ஆபீஸராக இருக்கும் சித்தார்த் தனது அண்ணி அஞ்சலி நாயர் மற்றும் மறைந்த அவர் அண்ணன் மகள் சிறுமி சஹஸ்ராஶ்ரீ உடன் வசித்து வருகிறார். அவரது அண்ணன் மகள் சித்தார்த் மீது மிகுந்த பாசமாக இருக்கிறது. இதனால் அவர் சித்தப்பா என்பதால் அவரை சித்தா என்று அழைக்கிறது. இருவரும் தந்தை மகளாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சித்தார்த் போலீஸ் நண்பனின் அக்கா மகள் சிறுமி திடீரென காணாமல் போய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதற்கு முதலில் சித்தார்த் தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டு பின்னர் அதற்கு வேறு ஒருவர் தான் காரணம் என கண்டுபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சித்தார்த்தின் அண்ணன் மகளும் திடீரென மாயமாகிறார். அவளையும் பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஒருவன் கடத்தி விடுகிறான். இதையடுத்து அவனிடம் இருந்த அந்த சிறுமியை காப்பாற்றினார்களா, இல்லையா? சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசாமி என்னவானார்? என்பதே சித்தா படத்தின் மீதி கதை.

 

கொஞ்சம் பிசகுனாலும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அரதப்பழசான ஒரு கமர்சியல் பாலியல் வன்கொடுமை கதையை பார்த்தது போல், உணரும் வகையில் அமைந்திருக்கும் இந்த படத்தை, எதார்த்தமான உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள் மூலம் கவனிக்கத்தக்க ஒரு படமாக கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார் சேதுபதி புகழ் எஸ் யு அருண்குமார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் சமரசம் செய்யாமல் எதார்த்த சினிமாவை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு அதன்படி திரைக்கதை அமைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிரூட்டி பார்ப்பவர்களுக்குள் அதை கடத்தும் படியான திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ் யு அருண்குமார். பழனியில் வசிக்கும் ஒரு எதார்த்த இளைஞனை அப்படியே நம் கண் முன் நிறுத்தி அவர்கள் வாழ்வில் நடக்கும் எதார்த்த விஷயங்களை மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தி அதை ரசிக்கும்படியும் கொடுத்து லைவ்வான ஒரு படமாக கலக்கத்துடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

 

பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த படம் மூலம் உணர்த்தி இருக்கிறார். முதல் பாதி முழுவதும் எதார்த்தமான காட்சி அமைப்புகள் மூலம் வேகமாக நகரும் படம் இரண்டாம் பாதியில் உணர்ச்சி பூர்வமான காட்சி அமைப்புகளால் சற்றே அயற்சி ஏற்படும் படி அமைந்து பின்னர் கிளைமாக்ஸில் வேகம் எடுத்து நிறைவாக முடிந்து இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இன்றைக்கு நடக்கும் எதார்த்தத்தை டிவிஸ்ட் ஆக வைத்து இதுபோல் பாலியல் வன்கொடுமைகள் செய்யும் நபர்களிடமிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதையும் எதார்த்தமாக கூறி கைத்தட்டலும் பெற்றிருக்கிறார். படத்தின் பிற்பகுதியில் வரும் காட்சிகளில் மட்டும் சற்று தெளிவான திரைக்கதை அமைத்து ஒரே இடத்தில் சுற்றி கொண்டு இருக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

எப்பொழுதும் ஒரு மெடுக்கான நாயகனாகவே நடித்து இருக்கும் சித்தார்த்  இந்த படம் மூலம் இன்றைய சூழலில் வளம் வரும் யதார்த்த இளைஞனாக நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். இவருக்கும் அவரது அண்ணன் மகளுக்குமான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர். குறிப்பாக அண்ணன் மகளை இழந்து வாடும் சித்தப்பா கதாபாத்திரத்தையும், அவருடைய தவிப்பையும் மிக எதார்த்தமாக வெளிப்படுத்தி விருதுகள் வாங்கும் அளவுக்கான நடிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார் சித்தார்த். இந்தப் படம் அவரது நடிப்பில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. அவருக்கு விருதுகள் நிச்சயம்.

 

அதேபோல் இவருக்கு சரிசம போட்டியாளராக நடித்திருக்கிறார் சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீ. இவ்வளவு சிறிய வயதில் நேர்த்தியாக முகபாவனைகளிலும் வசன உச்சரிப்புகளிலும் மிக எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கும் விருதுகள் நிச்சயம். நாயகியாக வரும் நிமிஷா சஜயன் ஆரம்பத்தில் அமைதி காத்து கிளைமாக்ஸில் வெகுண்டு எழுந்திருக்கிறார். இவரின் எதார்த்தம் அடிப்பு படத்தோடு ஒன்றி இருக்கிறது. சித்தார்த்தின் அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயரும் அவரது பங்குக்கு அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் நடிகரும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பாலியல் வன்கொடுமை செய்யும் வில்லனாக வரும் துணை நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவரைப் பார்க்கும் பொழுது நமக்கே பயம் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். மற்றபடி இவர்களுடன் நடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

 

திபுநினன் தாமஸ் இசையில் சித்தார்த் நிமிஷா சஜயன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி கேட்கும் ரகம். வன்கொடுமை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறுமி சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிகச் சிறப்பான ஒலி அமைப்பை கொடுத்து பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் பழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஒரு அழுத்தமான கதையை மிக எதார்த்தமான திரைக்கதையோடு இன்றைய சூழலை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி ஒரு சமூகத்துக்கு தேவையான படமாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்கள் சித்தா பட குழுவினர்கள்.


சித்தா - விழிப்புணர்வு!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

அதிதி ராவுடன் திருமணமா? - புகைப்படத்துடன் தெளிவுபடுத்திய சித்தார்த்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
siddharth calrifies on his marrige news to aditi rao

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சித்தார்த் - அதிதி ராவ் தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.  

siddharth calrifies on his marrige news to aditi rao

இந்த நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அவள் ஒப்புக்கொண்டாள். நிச்சயதார்த்தம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவருக்கும் நிச்சயம் முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தார்த், 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.