Skip to main content

மக்கள் முதல்வர் தெரியும், திடீர் முதல்வர் தெரியும், ரௌடி முதல்வர் தெரியுமா? - நோட்டா விமர்சனம் 

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

அமைதிப்படை, மக்களாட்சி, முதல்வன், கோ... ஒரு புறம், ஜி, ஆயுத எழுத்து, சகுனி மறுபுறம் என தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்திருக்கின்றன. இதில் எந்த வரிசையில் நோட்டா இணைகிறது என்று பார்ப்போம். தெலுங்கு தேசத்தில் 'பெல்லி சூப்புலு' படம் மூலம் மிகவும் பிரபலமடைந்து பின் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் மூலம் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேரடி தமிழ் படமாக வந்துள்ளது நோட்டா.
 

nota vijay



முதல்வராக இருக்கும் நாசர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி கைது செய்யப்பட இருப்பதால், லண்டனில் ஜாலியாக ஊர் சுற்றி கும்மாளம் அடித்துக்கொண்டு, கேம் டெவலப்பராக வேலை பார்க்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை ஒரே இரவில் சி.எம் ஆக்குகிறார். ஆரம்பத்தில் தனக்கு பிடிக்காமல் வேண்ட வெறுப்புமாக பதவி ஏற்கும் விஜய் தேவரகொண்டா பின்னர் ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியின் உன்னதத்தை உணர்ந்து, பத்திரிகையாளர் சத்யராஜின் ஆலோசனைப்படி பொறுப்பாக ஆட்சி நடத்தும் வேளையில் ஏற்படும் எதிர்ப்புகளையும், சவால்களையும் சமாளித்தாரா இல்லையா என்பதே 'நோட்டா'.

நிகழ்கால அரசியல் சூழலை கதையின் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் படத்தைத் தாங்கி நிற்கும் இரு தளபதிகளாக சத்யராஜும், நாசரும் நடித்துள்ளனர். அரசியல் படம் என்பதால் சத்யராஜும், நாசரும் கரும்பு தின்னக்  கூலியா என்பதுபோல் காட்சிக்கு காட்சி சுலபமாகப் புகுந்து விளையாடி விடுகின்றனர். இப்படி அரசியல் என்றால் என்ன என்பதை இவர்கள் வசனம் மட்டுமல்லாமல், உடல் மொழியிலும் காட்டி அசத்திக்கொண்டிருக்கும் வேலையில் இவர்களுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். இவர்கள் இருவரும் மாறி மாறி வசனம் பேசி கவரும் வேலையில் சின்னச்  சின்ன அசைவுகள் மூலமே அப்லாஸ்களை தட்டிச் சென்றுவிடுகிறார் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். குறிப்பாக சொகுசு விடுதியில் நாசர் எம்.எல்.ஏக்களிடம் உணர்ச்சிபொங்க பேசும் இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் காட்டும் உடல் மொழி வேற லெவல்.

 

nota sathyaraj



தெலுங்கு தேசத்திலிருந்து வந்தாலும் தமிழை ஒழுங்காக உச்சரித்ததற்கே விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், உழைப்பும் தெரிகிறது. பத்திரிகையாளர்களிடம் உணர்ச்சிகரமான மிரட்டல் தொனியில் பேசுவது, மக்களுக்கு ஒரு பிரச்னை என்றவுடன் துரித நடவடிக்கையில் இறங்குவது, உருக்கமான காட்சியில் காட்டும் முகபாவம் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி தமிழுக்கு சரியான விதத்தில் அறிமுகமாகியுள்ளார். வெல்கம் டு தமிழ் சினிமா ப்ரோ.

படத்தின் நாயகி மெஹ்ரின் பிர்சாடாவிற்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் இவரைக்காட்டிலும் பெண் அரசியல்வாதியாக வரும் சஞ்சனா நடராஜன் அந்த வேலையை சிறப்பாக செய்து மிரட்டியுள்ளார். தன் அறிமுகப்படத்திலேயே மனதில் பதியும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
 

nota nasser



எம்.எல்.ஏ க்கள் சொகுசு விடுதியில் குடித்து கும்மாளம் அடிப்பது, ஐ.சி.யு வார்டு அட்ராசிட்டி, ஸ்டிக்கர் பிரச்சனை, முதல்வரை பார்க்கும் எம்.எல்.ஏ க்கள் தலைகுனிந்தபடியே இருப்பது, இரவு நேர அறிக்கை, இடைத்தேர்தல் என நிகழ்கால அரசியல் நையாண்டியை கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். செம்பரம்பாக்கம் ஏரி திறந்து ஏற்பட்ட வெள்ளம் போன்ற சம்பவங்களை இக்கால நிகழ்வுகளோடு காட்சிப்படுத்தி அதிரடியாகக் கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். என்னதான் படத்தில் உள்ள பலமான காட்சிகள் ஆங்காங்கே ரசிக்கும் படி இருந்தாலும் முதல்பாதி முடிவில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை பிற்பாதியில் நிறைவாக பூர்த்தி செய்யாதது சற்று ஏமாற்றமே.

ரௌடி சி.எம் எனும் பில்ட்-அப்போடு வரும் இடைவேளைக்குப் பின் ரௌடி சி.எம் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஷான் கருப்பசாமி எழுதிய வெட்டாட்டம் நாவலின் அடிப்படையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். திரைக்கதையை அவரும் இணைந்து எழுதியிருக்கிறார். ஆனால், அந்த விறுவிறுப்பு படத்தில் குறைவே. படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்படும் சவால்களும் அவர் எதிர்கொள்ளும் வில்லன்களும் பலமாக இல்லை. நிகழ்கால அரசியல் சம்பவங்களை இணைத்தது தைரியம்தான், பாராட்டலாம். ஆனால், அந்தக் காட்சிகளை காமெடியாக அமைத்தாலே போதுமென்று நினைத்தது தவறாகிவிட்டது.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் விக்ரம் வேதாவிற்கு பிறகு நோட்டா உட்பட இவர் இசையில் வந்த படங்களின் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாததை அவர் சற்று சின்சியராக பரிசீலிப்பது நல்லது.  சந்தானகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தை தரமாக உருவாக்க உதவியுள்ளது. 'அருவி' ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் படத்தொகுப்பு ஷார்ப்பான கட்டிங்கால் படத்தை பரபரப்பாக்க முயற்சி செய்துள்ளது.     
 

நோட்டா - மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!