Skip to main content

வெள்ளிக்கிழமை ரேஸில் வெற்றி பெற்றதா பொய்க்கால் குதிரை..? - விமர்சனம் 

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

Poikkal Kuthirai movie review

 

அடல்ட் காமெடி படங்கள் மூலம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஒரு வித்தியாசமான திரைப்படம் பொய்க்கால் குதிரை. தன்னால் குடும்பங்களுடன் ரசிக்கக்கூடிய வகையிலான திரைப்படங்களையும் கொடுக்க முடியும் என்று நம்பி பொய்க்கால் குதிரையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா?

 

ஒற்றைக் காலுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பிரபுதேவா, தன் ஒரே மகள் ஆழியாவுடன் வசித்து வருகிறார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சமயத்தில் மகள் ஆழியாவுக்கு தீவிரமான இதயநோய் ஏற்படுகிறது. அதை சரி செய்ய 70 லட்சம் தேவைப்படுவதால் பெரிய தொழிலதிபரான வரலட்சுமி சரத்குமார் மகளை கடத்தி மிரட்டி பணம் வாங்க முடிவெடுக்கிறார் பிரபுதேவா. வரலட்சுமி மகளை பிரபுதேவா கடத்துவதற்கு முன் வேறு யாரோ கடத்தி விடுகின்றனர். பழி பிரபுதேவா மேல் விழுகிறது. இதையடுத்து தன் மேல் விழுந்த பழியை எப்படி பிரபுதேவா தீர்க்கிறார்? தன் குழந்தையின் ஆபரேஷனுக்கான பணத்தை தயார் செய்தாரா? இல்லையா? கடத்தப்பட்ட வரலட்சுமியின் குழந்தையின் கதி என்ன? என்பதே பொய்க்கால் குதிரை படத்தின் மீதி கதை.

 

Poikkal Kuthirai movie review

 

அடல்ட் பட  இயக்குநர் என்ற பெயரை துடைப்பதற்கான முயற்சியில் பொய்க்கால் குதிரை படத்தை உருவாக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார், அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். தந்தைக்கும் மகளுக்குமான கெமிஸ்ட்ரியை நன்றாக ஒர்க்கவுட் செய்து அதன்மூலம் செண்டிமெண்ட் கலந்த ஒரு திரில்லர் படத்தை கொடுத்த இயக்குநர், அதை ஓரளவு ரசிக்கும்படியும் கொடுத்துள்ளார். படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் கலகலப்பான காட்சிகளாக நகர்ந்து பின்னர் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகளோடு பயணித்து கடைசியில் திரில்லிங்கான திருப்பங்களுடன் முடிந்து பார்ப்பவர்களை சீட் நுனிக்கு இழுத்து செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அடுத்தடுத்த டிவிஸ்டுகள் சிறப்பாக அமைந்து படத்தை பாசிட்டிவ் நோட்டில் முடித்திருக்கிறன. ஆனாலும் படம் முழுவதும் ஆங்காங்கே வரும் க்ளீஷேவான காட்சிகள் சில இடங்களில் அயர்ச்சியை கொடுப்பதையும் தவிர்க்க முடியவில்லை. படத்தின் ட்ரீட்மெண்டை குடும்பங்கள் ரசிக்கும்படி அமைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே இப்படத்தை இயக்குநர் இயக்கி உள்ளதால் திரைக்கதையில் புதுமைகளை புகுத்த சற்று தவறியிருக்கிறார். இருந்தும் கிளைமாக்ஸ் பகுதி படத்தை காப்பாற்றியுள்ளது.

 

ஒற்றைக் காலுடன் பாசமிகு தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பிரபுதேவா, ஆங்காங்கே தனது நடிப்பால் கண்கலங்க வைத்து கவனம் ஈர்த்துள்ளார். இவருக்கும் மகள் ஆழியாவிற்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து காட்சிகளுக்கு கலகலப்பூட்டியுள்ளது. அதேபோல் இவர்கள் இடையே இருக்கும் பாசப் பிணைப்பும் பார்ப்பவர்களை பல இடங்களில் நெகிழச் செய்துள்ளது. படத்தில் நாயகி இல்லை. ஆனால் கடமைக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன். வரலட்சுமி சரத்குமார் அலட்டலான தொழிலதிபராகவும் அன்பான தாயாகவும் நடிப்பில் மிளிர்கிறார். குழந்தையை பறிகொடுத்துவிட்டு ஏங்கும் காட்சிகளில் நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளார். டம்மி தந்தையாக நடித்திருக்கும் சார்பட்டா புகழ் ஜான் கொக்கைன் ஆரம்பத்தில் அனுதாபம் பெற்று பிற்பகுதியில் வழக்கமான வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். பிரபுதேவாவின் நண்பனாக நடித்திருக்கும் நடிகர் ஜெகன் கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக செய்துவிட்டு சென்றுள்ளார். 

 

Poikkal Kuthirai movie review

 

பிரபுதேவா மகளாக வரும் பேபி ஆழியா அழகான நடிப்பை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி வந்து செல்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். 

 

பல்லு ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. டி இமான் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே.

 

ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட ஒரு கதையை சிறப்பான டிவிஸ்டுகள் மூலம் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதை இன்னமும் சிறப்பான திரைக்கதை மூலம் கொடுத்திருந்தால் இப்படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.

 

பொய்க்கால் குதிரை - வேகம் குறைவு!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் பிரபல நடிகர்

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
prabhu deva stper hero movie minman

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் பிரபு தேவா. இரண்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். நடனத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவப்படுத்தியது. ஆனால் சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரபு தேவா. விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் பிரபு தேவா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி கோட் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. 

prabhu deva stper hero movie minman

இந்த நிலையில் பிரபு தேவாவிற்கு வாழ்த்து தெரிவித்து பட அறிவிப்பை அறிவித்துள்ளது ஒரு படக்குழு. மின்மேன் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபு தேவா நடிக்கிறார். கதை மற்றும் இயக்கத்தை பிரவீன் மற்றும் சதீஷ் என்பவர்கள் கவனிக்க, வசனம் மற்றும் திரைக்கதையை மதன் கார்கி கவனிக்கிறார். வினோத் செந்தில் தயாரிக்கும் இப்படத்திற்கு கஷ்யப் இசையமைக்கிறார். அறிவிப்பு வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.