Skip to main content

பழைய ரூட்டுக்கே போகிறாரா 'பட்டாஸ்' தனுஷ்? பட்டாஸ் - விமர்சனம்

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

ஒரு பெரிய வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் அந்த நடிகரின் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே கூடிவிடுவது தமிழ் திரையுலகில் வழக்கமானது. அதுவும் பல வகைகளிலும் பாராட்டப்பட்ட ஒரு படத்தில், மிக பக்குவமான பாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து 'அசுர' வெற்றி பெற்ற பிறகு தனுஷின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இடையில் வந்த 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' முன்பே முடிக்கப்பட்டது என்பதை பெரும்பாலான சினிமா ரசிகர்கள் அறிந்திருந்தனர். இப்படி எதிர்பார்ப்புக்கு இடையில் வந்திருக்கும் 'பட்டாஸ்' மூலம் தனுஷ் அடுத்த கட்டத்துக்குப் போகிறாரா அல்லது 'மாரி' ஸ்டைல் பழைய ரூட்டுக்கே திரும்புகிறாரா?

 

pattas dhanush



'எதிர்நீச்சல்', 'காக்கிச்சட்டை', 'கொடி' என சுவாரசியமான பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, ட்ரெயிலரை பார்த்தே கணிக்கக்கூடிய எளிய கதையோடு வந்திருக்கிறார். சென்னையில் தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் நண்பன் சதீஷ் (கலக்கப் போவது யாரு) இருவருடனும் சேர்ந்து திருட்டுத் தொழில் செய்து வாழ்கிறார் தனுஷ். ஒரு கொலை குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு விடுதலையாகும் சினேகா, தனுஷைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமடைகிறார். திருடன் 'பட்டாஸ்' தனுஷின் தந்தை 'திரவிய பெருமாள்' தனுஷ் ஒரு மிகச் சிறந்த 'அடிமுறை' வீரர், ஆசான். அவரது தாய் 'கன்யாகுமரி' சினேகா. இவர்களிடமிருந்து மகன் எப்படி பிரிந்தார் என விரிகிறது ஃப்ளாஷ்பேக். என்ன நடந்திருக்குமென்று எந்த ஒரு தமிழ் திரைப்பட ரசிகராலும் சொல்லிவிட முடியும். இதன் பிறகு என்ன நடக்குமென்றும் எல்லோராலும் சொல்ல முடியும். இதுதான் 'பட்டாஸ்'.

 

 

pattas sneha



இப்படி, வழக்கமான எளிதான கதையில் எது நம்மை ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது? முக்கியமாக, முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும், அழுத்தமான ஃப்ளாஷ்பேக்கும்தான். தனுஷ், 'பட்டாஸ்' பாத்திரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த துறுதுறுப்பு, கலகலப்பாக இருக்கிறார். 'திரவிய பெருமாள்' பாத்திரத்தில் மிகவும் பக்குவமான, உறுதியான, வீரன் என நம்பும்படியான சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். வெகு நாட்களுக்குப் பிறகு சினேகாவிற்கு சரியான பாத்திரம், வீரமும் உறுதியுமான தாய். அதை மிக சிறப்பாக நடித்து மெருகேற்றியிருக்கிறார். இந்த இருவரின் பாத்திரங்களும் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம். 'அடிமுறை' என்ற ஆதித்தமிழ் தற்காப்புக் கலை குறித்த காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் பல 'கூஸ்பம்ப் மொமெண்ட்'களை தருகின்றன. சண்டை காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்பாராயனுக்கு ஸ்பெஷல் லைக்ஸ்.

 

dhanush



இதை தவிர படத்தில் இருக்கும் மற்றவை அனைத்தும் இடத்தை நிரப்ப வைக்கப்பட்டவை என்றே தோன்றுகிறது. படத்தின் ஆரம்பப் பகுதிகளில் வரும் தனுஷ் - சதீஷ் - முனீஷ்காந்த் நகைச்சுவை ஆங்காங்கே மட்டுமே சிரிக்க வைக்கின்றன. மெஹரீன் பிர்சாதா, ஆரம்பத்தில் வழக்கமான லூசுப்பெண் போலவே வருகிறார், பிறகு நாயகனின் நோக்கத்தில் துணை நிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், நடிப்பில் ஓகே என்ற அளவில்தான் இருக்கிறார். வில்லன் நவீன் சந்திராவின் நடிப்பில் வீரியம் சற்று குறைவே. விவேக் - மெர்வின் இசையில் 'சில் ப்ரோ' குதூகலத்தையும் 'அடிமுறை' பின்னணி இசை அவ்வப்போது பரவசத்தையும் தருகின்றன. 'சிவ தாண்டவ ஸ்தோத்திர'த்தின் மெட்டை பயன்படுத்தி காட்சிக்கு பலம் கூட்டி பின்னணி இசைக்கு கைதட்டல் பெற்றிருக்கிறார்கள். ஓம் ப்ரகாஷின் ஒளிப்பதிவு முதல் பாதியில் வண்ணங்களின் விளையாட்டாகவும் ஃப்ளாஷ்பேக்கில் கதையின் வெம்மை சொல்லும் செம்மை நிறத்திலும் சிறப்பாக இருக்கிறது. வழக்கமான கதையை வழக்கமான வரிசையில் தொகுத்திருக்கிறார் பிரகாஷ் மப்பு.

இயக்குனர் துரை செந்தில்குமார், பீரியட் பகுதிகளிலும் கூட ரொம்ப சீரியஸான பெரிய ஒழுக்கத்தையெல்லாம் வைத்து அழுத்திக்கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார். தனுஷ், சினேகா நடிப்பும் தமிழர்களைக் காத்த 'அடிமுறை' கலையும் படத்தை காத்திருக்கின்றன. படத்தில் அடுத்தடுத்து என்ன நடக்குமென்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதில் ஏதேனும் ஆச்சரியங்களை வைத்திருந்தால் இன்னும் அதிகமாக அதிரடியாக வெடித்திருக்கும்  இந்தப் 'பட்டாஸ்'. ஆனாலும் நமுத்துப் போகவில்லை.                               

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.