Skip to main content

மத ஒற்றுமை பேசுகிறதா? - 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' விமர்சனம் !

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 kathar basha endra muthuramalingam review

 

விருமன் படத்தின் வெற்றிக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். பொதுவாக ஜாதி பெருமை பேசும் முத்தையா இப்படத்தின் மூலம் மத ஒற்றுமையையும் சேர்த்துப் பேசி இருப்பது ரசிகர்களை எந்த அளவு ஈர்த்திருக்கிறது??

 

தாய் தந்தை இல்லாமல் தனியாக வாழும் நாயகி சித்தி இட்னானியை அவரிடம் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்ய முரட்டு முறை மாமன்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் சித்தி இட்னானி அவர்களை அறவே வெறுக்கிறார். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் காதர் பாட்சா ஆர்யாவை பார்க்க நாயகி செல்கிறார். ஆனால் போன இடத்தில் மனம் மாறி திரும்பி வந்து விடுகிறார். இதை அறிந்து கொண்ட ஆர்யா, ஜாமினில் வெளியே வந்து சித்தி இட்னானியை தேடி அவர் ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் நாயகியின் முறை மாமன்களோடு ஏற்படும் தகராறில் அவர்கள் குடும்பத்தில் இருக்கும் மூன்று தலைக்கட்டுகளை போட்டு அடித்து வெளுத்து விடுகிறார். இதையடுத்து நாயகியின் பிரச்சனையை அறிந்து கொண்ட ஆர்யா நாயகிக்கு அரணாக அங்கேயே தங்கி விடுகிறார். 

 

இதற்கிடையே ஆர்யாவின் ஃப்ளாஷ் பேக்கில் அவரின் வளர்ப்பு அப்பா பிரபுவுக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக அவரின் எதிரிகளை தன் சொந்த ஊரில் பந்தாடி விட்டு ஜெயிலுக்கு சென்று விடுகிறார். இப்படி ஆர்யாவின் எதிரிகளும் சித்தி இட்னானி எதிரிகளும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஒன்று கூடி ஆர்யாவையும், நாயகி சித்தி இட்னானியையும் பழிவாங்க படையெடுக்கின்றனர். இதைத் தொடர்ந்து அந்த கும்பலிடம் இருந்து ஆர்யா சித்தி இட்னானியை காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் மீதி கதை. ஒரு கதையாக பார்க்கும் பொழுது இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. எப்போதும் போல் ஒரு பழிவாங்கல் கதையை தன் பாணியிலேயே கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

 

பொதுவாக முத்தையா படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அதுவே படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இதை யாரோ போய் முத்தையாவின் காதில் பலமாக கூறி இருப்பார்கள் போல் இருக்கிறது. இதனாலேயே இப்படம் ஆரம்பித்து முடியும் வரை வெறும் சண்டைக் காட்சிகளை வைத்தே முழுப் படத்தையும் முடித்திருக்கிறார். முதல் பாதையில் மட்டுமே ஐந்து முதல் ஆறு ஃபைட் சீன்கள் வந்து தெறிக்க விட்டிருக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியிலும் மூன்று நான்கு ஃபைட் சீன்கள் வந்து வெட்டுக் குத்து, ரத்தம், வெடிகுண்டு என தியேட்டர் ஸ்கிரீனை தெறிக்க விட்டு படம் முடிகிறது. இதற்கு நடுவே ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகளும், குடும்ப காட்சிகளும், காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் செருகி படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. 

 

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முத்தையா படங்களின் முரட்டு நாயகனாக பிரதிபலித்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். போன இடம் வந்த இடம் என எல்லா இடங்களிலும் அடித்து துவைத்து துப்பி தூரப் போட்டு சென்று கொண்டிருக்கிறார். வெறும் ஆக்‌ஷன் காட்சியிலேயே படம் முழுவதும் தென்படுவதால் முரட்டு உடம்பான ஆர்யா அடித்து துவம்சம் செய்கிறாரே தவிர நடிப்பில் பெரிதாக ஒன்றும் இல்லை. குறிப்பாக அவரது வேலையை செவ்வனே செய்து விட்டு சென்றிருக்கிறார். நாயகி சித்தி இட்னானி வழக்கமான முத்தையா படங்களின் நாயகியாக வந்து சென்று இருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் அவரது வாய்ஸ் சிங்க் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம். 

 

மற்றபடி படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் முக்கிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் சில நிமிடங்களே ஆங்காங்கு வந்து வந்து செல்கின்றனர். தற்போது உள்ள தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் முரட்டு மீசை, முரட்டு உடம்பு, முரட்டு பார்வை இருக்கிறதோ அவர்கள் அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் வில்லன்களாக நடித்து அடி உதை வாங்கி மடிந்திருக்கின்றனர். குறிப்பிட்டு இவர் நடித்திருக்கிறார், அவர் நடித்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் படத்தின் அவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறது. அவ்வளவு பேரும் ஆர்யாவிடம் அடி வாங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்லும் பட்சத்தில் பாக்யராஜ், பிரபு, ஆடுகளம் நரேன் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர்.

 

ஜி.வி. பிரகாஷ் இசையில் பின்னணி இசை தெறிக்கவிட்டு இருக்கிறது. வெறும் ஆக்‌ஷன் காட்சிகளே படம் முழுவதும் படர்ந்து இருப்பதால் பின்னணி இசையை பயங்கர சத்தமாக கொடுத்து கூஸ்பம்ப் ஏற்படுத்த முயற்சி செய்து இருக்கிறார். இவரது இசையில் 'கறிக் குழம்பு வாசம்' பாடல் மட்டும் கேட்கும் ரகம். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மிக உதவி கரமாக அனல் அரசின் ஸ்டண்ட்  கொரியோகிராபி தரமாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. 

 

வந்தா சுட்டான் ரிப்பீட்டு... வந்தான் சுட்டான் ரிப்பீட்டு... என்பது போல் ஆர்யா வந்தான் அடித்து துவைத்தான் ரிப்பீட்டு... வந்தான் அடித்து துவைத்தான் ரிப்பீட்டு... என்று படம் முழுவதும் குழப்பக் கதைகளுக்கு இடையே வெறும் ஆக்‌ஷன் காட்சிகளே பெருமளவு படத்தை ஆர்ப்பரித்திருப்பதால் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கான படமாக இப்படம் மாறி இருக்கிறது.

 

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் - மினி கே ஜி எஃப்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழாவில் ஆர்யா

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
arya attend studio opening ceremony

ஓ.எம்.ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

மேலும் ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும் சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ்,  'சீயான்' விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.