Skip to main content

ஒரு இரவில் இத்தனை நடக்குமா? கைதி - விமர்சனம்

Published on 27/10/2019 | Edited on 27/10/2019

மிகச் சாதாரணமாக ஒருவர் படுத்துத் தூங்கி மறுநாள் விழித்தெழும் அந்த இரவு நேரம் வேறு சிலருக்கு எப்படியெல்லாம் இருக்க முடியும்?காவல்துறையினருக்கு, குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு, போதை மருந்து கடத்துபவர்களுக்கு, இன்னும் நமக்கு அதிகம் தெரியாத வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு, ஒரு இரவு எப்படியெல்லாம் இருக்க முடியும்? 'மாநகரம்' படத்தில் சென்னை நகரின் ஒரு இரவில் நடக்கும் கதையை விறு விறுவென சொல்லி ரசிகர்களை கவர்ந்து ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திருச்சியின் ஒரு அசாதாரண இரவில் நடக்கும் கதையை தனது 'கைதி'யில் சொல்லியிருக்கிறார். அதே விறுவிறுப்பு, அதே வெற்றி கிடைத்திருக்கிறதா?

 

kaithi karthi



சுமார் 840 கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதை மருந்தை கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றுகிறது ஸ்பெஷல் டாஸ்க் ஆஃபிசர் நரேன் தலைமையிலான போலீஸ் டீம். அதை இழந்த க்ரைம் கடத்தல் கும்பல் போதை மருந்தை மீட்கவும் கைப்பற்றிய போலீஸ்காரர்களை கொலை செய்யவும் வெறியுடன் கிளம்புகிறது. இன்னொரு பக்கம் நகரின் முக்கிய காவல் அதிகாரிகள் அனைவரும் ஒரு இக்கட்டான சூழலில் சிக்க, அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் சிக்குகிறார் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் ஆயுள் தண்டனை கைதியான கார்த்தி. கார்த்தி, வாழ்நாளில் அதுவரை பார்த்திராத தனது மகளை மறுநாள் பார்க்கச் செல்ல வேண்டும்... நரேன், அவ்வளவு மோசமான போதைப் பொருள் மீண்டும் கிரிமினல்களிடம் சிக்கி சமூகத்தை சீரழிப்பதைத் தடுக்க வேண்டும்... போலீஸ்காரர்கள் காப்பாற்றப்பட வேண்டும்... எதிரில் மிகப்பெரிய க்ரைம் கூட்டம். என்ன ஆனது அந்த இரவில் என்பதுதான் 'கைதி'.


கார்த்தி, கதை தேர்வில் தான் என்றும் வேற லெவல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நான் மகான் அல்ல, தீரன் வரிசையில் கைதி, ஒரு தரமான க்ரைம் த்ரில்லர் ஆக்ஷன் திரைப்படம். அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்கள் 'ட்ரீம் வாரியர்' தயாரிப்பு நிறுவனத்தார். தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏதோ ஒரு வகையில் திரைப்பட ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும் வகையில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கதைக்கான அத்தனை அடிப்படைகளையும் அமைத்து, முதல் நொடியிலிருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறார் இயக்குனர் லோகேஷ். ஒரு இரவு... இரண்டு தளங்களில் நடக்கும் காட்சிகள்... முற்றிலும் புதிதான கதை... விறு விறு பயணம் என தொடக்கத்தில் நம்மை முழுமையாக ஈர்க்கிறது படம். கார்த்தி நடித்திருப்பதால் அவருக்கென சில சண்டைக்காட்சிகளில் சற்று அதீதம் காட்டியிருக்கிறார்கள். அதைத் தவிர்த்து இது ஒரு ஹீரோ படமாக இல்லாமல் பிறருக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இருப்பது பெரும் பலம்.

 

 

narain



லாரி பயணத்தில் கார்த்தி அண்ட் கோ., எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் டெரர் சவால்கள். பார்ப்பவர்களுக்கும் அந்தப் பதற்றத்தை பற்ற வைத்திருக்கிறது இயக்குனர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், இசையமைப்பாளர் சாம் கூட்டணி. சண்டைக் காட்சிகளில் தங்கள் முழு திறமையை காட்டியிருக்கிறார்கள் 'நேஷனல் அவார்டு' மாஸ்டர்ஸான அன்பறிவ். ஆனால், ஒரு கட்டத்தில் கல்லால் தாக்கப்பட்ட பிறகும் கத்தியால் குத்தப்பட்ட பிறகும் கார்த்தி தொடர்ந்து அடித்து நொறுக்கும்போது, 'ஒரு மண்டை ஓட்டால் எத்தனை கல்லடி தாங்க முடியும்?', 'ஒரு மனித உடலால் எத்தனை கத்திக் குத்தை ஏற்க முடியும்?' என்ற கேள்விகள் இயல்பாக மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், 'சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கடந்து போகும் அளவில் அது இருப்பதால் பிரச்னை இல்லை. நாயகனுக்கு உணர்வுப்பூர்வமான ஒரு கடமையை, அவசியத்தை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் அவனது நோக்கம், பயணத்துடன் படம் பார்ப்பவர்களை  ஒருங்கிணைத்துள்ளார் இயக்குனர். இன்னொரு பக்கம் கமிஷனர் ஆஃபீஸில் மாட்டிக்கொள்ளும் ஜார்ஜ் மரியான் மற்றும் சில கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தும் அதை முறியடிக்கும் விதமும் சில இடங்களில் 'ஆஸம்' சொல்ல வைக்கிறது.

இப்படி பரபரவென தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் பயணத்துக்குத் தடையாக வரும் வில்லன் கூட்டம், அவர்களை அடித்து நொறுக்கும் கார்த்தி என தொடர்வது சற்றே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. எத்தனை பேர் வந்தாலும் கார்த்தி அடித்து நொறுக்கிவிடுவார் என்ற நம்பிக்கை நமக்கு வந்த பின், படத்திலிருந்து நாம் மெல்ல விலகுகிறோம். இருந்தாலும் அந்த கிளைமாக்ஸ் சண்டை ஐடியா தீபாவளி மூடை நமக்குள் செட் செய்கிறது.

 

kaithi child



கார்த்தி, பார்வையிலும் அசைவிலும் நடிக்கிறார். தோற்றத்தில் பருத்தி வீரனை பார்த்த பரவசத்தை நமக்குத் தருகிறார். பிள்ளைப் பாசத்தில் நம்மை உருக வைக்கிறார். நரேன், பெர்ஃபெக்ட் போலீஸ் ஆஃபிசராக இருக்கிறார். கடமைக்கும் கார்த்தி மீதான கருணைக்கும் இடையில் குழம்பும் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பல சின்ன வேடங்களில் நம்மை கவர்ந்த ஜார்ஜ் மரியான், 'கைதி'யில் சர்ப்ரைஸ் தருகிறார். ஹரிஷ் உத்தமன், ரமணா, அர்ஜுன் தாஸ்... சமீப காலத்தில் அதிகம் பயமுறுத்திய வில்லன்கள் இவர்கள்தான். குரலும், உடலும் மிரட்டுகின்றன. இறுக்கமாக நகரும் படத்தில் நமக்கு நெருக்கமாகப் பேசி சிரிக்க வைக்கிறார் தீனா. கார்த்தியின் மகளாக நடித்துள்ள சிறுமி, தனது பேச்சாலும் ஏக்கம் நிறைந்த பார்வையாலும் நெஞ்சை கனக்க வைக்கிறார். கல்லூரி மாணவர்கள் டீமில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு, முழு படமும் இரவில் நடக்கும்போது கூட சலிப்பு ஏற்படவிடாமல் ரசிக்கவைக்கிறது. சாம்.சி.எஸ். ஒரு பக்கம் பதற்றத்தைக் கூட்டும் இசையை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் கிடைத்த சின்ன வாய்ப்பையும் விட்டுவிடாமல் எமோஷனல் இசையில் நம்மை கரைக்கிறார். பரபரவென படத்தை நகர்த்தும் பிலோமின் ராஜின் படத்தொகுப்பு நீளும் சண்டைக் காட்சிகளுக்கு சற்று ரிலாக்ஷேஷன் கொடுத்துவிட்டது.

இத்தனை பெரிய ஆபத்து இருக்கும்போதும் வேறு போலீஸ் அதிகாரிகளை அழைக்கக்கூடாதா, அழைக்காதது ஏன் போன்ற கேள்விகள் ரொம்ப யோசித்தால் எழலாம். யோசிக்காமல் விட்டுவிட்டு படத்தை ரசிக்கலாம். அத்தனை சுவாரசியம் நிறைந்தது அந்த இரவு.
                                                    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.