Skip to main content

நிமிர்ந்துவிட்டோம், இனி குனிய மாட்டோம்: 'கர்ணன்' விமர்சனம்

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

fdd

 

1996 - 2001 தமிழகத்தில் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. அப்போது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயரை வைக்கக்கூடாது என கலவரங்கள் நடந்தன. இந்தப் பின்னணியில் பொடியன்குளம் கிராமத்தைப் பற்றின கதையாக 'கர்ண'னை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.

 

இரண்டு கிராமங்களுக்கிடையேயான பிரச்சனையில் பொடியன்குளம் கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படாமலும், பேருந்து நிறுத்தம் அமைக்கப்படாமலும் இருக்கிறது. அதனால் அந்தப்பக்கம் செல்லும் லாரி போன்ற பிற வாகனங்களைத்தான் பொடியன்குளம் மக்கள் பயன்படுத்தும் சூழல். இந்தத் தகராறில், எதிர்பாராத சூழலில் பேருந்து தாக்கப்படுகிறது. அந்தப் பிரச்சனையைக் கிராம மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பதே மீதிக்கதை.

 

rsg

 

தனுஷ், லால், லட்சுமி பிரியா, யோகி பாபு இவர்களெல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள் அல்லது பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் கிளிஷே ஆகிவிட்டது. அவ்வளவு சிறந்த நடிப்பு. தலைப்பு உட்பட மொத்த படமுமே தனுஷ் தோளில்... அசால்ட்டாக செய்திருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின்போது அவரது உடல்மொழியும் முகமும் அபாரம். மற்றபடி நட்ராஜ் (நட்டி), ரஜிஷா விஜயன், அழகம்பெருமாள் என அனைவருமே அந்தந்த பாத்திரமாகவே தெரிகிறார்கள். அதுவே சிறப்பும் கூட. ஊர்மக்களையும் நடிக்க வைத்திருப்பது, கதையோடு நம்மை ஒன்றிவிடச் செய்கிறது. அவர்களும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.

 

தலையில்லா புத்தர், தலை வரையப்படாத ஓவியம், மனித தலைக்குப் பதிலாகக் களிமண் சிற்ப முகத்துடன் வரும் சிறுமி, கழுதை - யானை - குதிரை எனக் குறியீடுகளால் புது அழகியலைப் படைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அவை அடிக்கடி வருவது நெருடல். இப்போதெல்லாம் சில காட்சிகளிலேயே நம் மக்கள் புரிந்துகொள்கின்றனர். அதுபோல இறுதியில் வரும் கலவர காட்சியும் அவ்வளவு நீளமாக இருந்திருக்க வேண்டாமோ எனத் தோன்றுகிறது.

 

"எப்படியாவது பொழச்சுக்கணும்னு நாம நினைக்கறதாலதான், அவன் ஏறி மிதிக்கறான்", "அவன் பஸ்ச அடிச்சதுக்காக அடிக்கல, நிமிந்து பாத்ததுக்காக அடிச்சான்", "நாம அழுதது போதும், வா ஆடலாம்" என வசனங்களில் அடித்தள மக்களின் கோபத்தைப் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர்.

 

dsf

 

கதைக்களத்தின் வெப்பத்தையும் குளுமையையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியதில் வெற்றி பெறுகிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. சந்தோஷ் நாராயணின் இசையைத் தவிர்த்துவிட்டு கர்ணனைப் பார்க்க முடியாது. சில மாஸான காட்சிகளில் சிறிய இசைத் துணுக்குகளை ஒலிக்கவிடுகிறார். ஆனால் அது உங்களுக்குச் சிலிர்ப்பைத் தராமல் போகாது. முதல் பாதியில் கிராமிய இசையில் பாடல்களைத் தந்துவிட்டு, இரண்டாம் பாதியில் மக்களின் போராட்டத்திற்கு நவீன இசையில் பாடல் அமைத்திருப்பது சந்தோஷ் நாராயணின் இசை அரசியல். சமகால இளைஞர்களுக்குத் தெரியாத களம், பொது பார்வையாளர்களுக்கு நெருடலான கதை, இரண்டையும் மறக்கடித்து படைப்பை ரசிக்க வைத்திருக்கிறது செல்வாவின் படத்தொகுப்பு. சில காட்சிகளில் லிப் சிங்க் தவறுவதையும், முதல் பாதியின் நீளத்தையும் கவனித்திருக்கலாம்.

 

1990களில் நடந்த சமூக பிரச்சனைகளை வைத்தே இரண்டாவது படத்தையும் இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். 'பரியேறும் பெருமாள்' படத்திற்கு வந்த சில ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது புரிகிறது. இதிலும் சில சமரசங்கள் செய்திருந்தாலும், சற்று உரக்க ஒலித்திருக்கிறது இயக்குநரின் குரல்.

 

காட்டுப்பேச்சிகளின் வலிகளையும், கர்ணன்களின் போராட்டங்களையும், பெயர்களில் வரலாற்றைச் சுமக்கும் துரியோதனன்களின் தன்மானத்தையும் புரிந்துகொள்ளத் தைரியமாகச் செல்லலாம் பொடியன்குளத்திற்கு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் படத்திற்கு எழுந்த சிக்கல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
dhanush kubera title issue

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51ஆவது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டமாக திருப்பதியில் படப்பிடிப்பு நடந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் பரபரப்பானது. மேலும் அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக் கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு இடத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. 

இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கடந்த மாதம் வெளியானது. குபேரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படக்குழு, டைட்டில் லுக் வீடியோவையும் வெளியிட்டது. போஸ்டரில் தனுஷ் முடி கலைந்து, தாடியுடன் அழுக்கான வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே குபேரா என்ற தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் தலைப்பை பதிவு செய்த போதிலும் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தனது படத்தின் பெயரை சேகர் கம்முலா பயன்படுத்தியதாகவும், இது குறித்து தெலுங்கானா பிலிம் சேம்பரிடம் பேச முயற்சித்தும் சரியாக பதில் வரவில்லை என்றும் குற்றம் சாட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் சட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினையை தீர்க்க முயல்வதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.  

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.