Skip to main content

2K கிட்ஸின் காதல் இப்படியா இருக்கும்? இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - விமர்சனம்

Published on 16/03/2019 | Edited on 17/03/2019

பசி, காமம் போல உலகின் ஆதி உணர்வுகளில் ஒன்று காதல். அன்று முதல் இன்றுவரை காதல் பற்றி எவ்வளவோ சொல்லப்பட்டும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தாலும் காதல் இன்னும் புதிதாகவே இருக்கும் மர்மம் என்ன? ஒன்றே ஒன்றுதான். காதலில் எத்தனை பொதுமைகள் இருந்தாலும் ஒரு காதல் இன்னொரு காதலைப் போன்றது அல்ல. கைரேகை, கருவிழியைப் போல ஒவ்வொரு காதலும் தனித்துவமானது. அப்படி ஒரு பொதுமையான காதலையும் தனித்துவமான காதலர்களையும் பற்றிய படம்தான் ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’.
 

ispade rajavum idhaya raniyum harish



பின்விளைவுகளை யோசிக்காமல் சட்டென்று கோபப்பட்டு விடும் ஆண். கோபத்தில் கூட அத்தனை மிருதுவாகப் பேசும் பெண். பல சந்தர்ப்பங்களில் முட்டிக்கொள்ளும் இந்த இரண்டு முரண்களும் ஒரு கட்டத்திற்கு மேல் முத்தமிட்டுக் கொள்கின்றன. ஆரம்பத்தில் காதலை இணைக்கும் அழகான இந்த முரண்கள் போகப்போக ஆபத்தாண முரண்களாகி காதலையே விலை கேட்கின்றன. இதையெல்லாம் கடக்கும் ஆழம் இஸ்பேடு ராஜா இதய ராணியின் காதலுக்கு இருக்கிறதா என்பதே படம்.

காதலிக்கும் முன் ஆணுக்கு இருக்கும் இன்க்ளூசிவ் மனப்பான்மை காதலிக்க ஆரம்பித்த பின்னும், ஏன் திருமணத்திற்கு பின்னும் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறவேண்டும். எளிமையாக சொல்வதென்றால், காதலிக்கத் துவங்குவதற்கு முன் ஒரு பெண் ஆண் நண்பர்களுடன் இயல்பாகப் பழகுவதையோ பேசுவதையோ குற்றம் காணாத ஆணின் மனம், அதே பெண்ணை காதலிக்கத் துவங்கியபின் அதை இயல்பாக ஏற்பதில்லை. ‘அவன் கூட இந்நேரத்துக்கு என்ன பேச்சு?’ ‘பசங்க கூட தனியா ஏன் வெளிய போற?’ ‘இப்படி ஏன் பண்ற.. அங்க ஏன் போற?’ போன்ற அத்தனை கேள்விகளும் காதலுக்குப் பின் வருவதற்கான காரணம் ஆண்களிடைய இருக்கும் ஒரு ஓனர்ஷிப் மென்டாலிட்டிதான். காதலிக்க ஆரம்பித்தபின் அல்லது திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தனக்கே சொந்தம் என்று அவளை ஒரு பண்டமாக அணுகும் மனநிலையே இதற்கெல்லாம் அடிப்படை. ஆனால் இது அத்தனையும் அன்பின் பெயராலேயே நிகழ்த்தப்படுகின்றன.

‘என் மேல அவ்ளோதான் லவ்வா.. என் மேல நம்பிக்கை இல்லையா?’ என்று அன்பின் பெயரால் நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகள் குறித்த ஆழமான பார்வையையும் முன்வைக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு எந்த புள்ளியும் வெறுப்பாக வெறியாக மாறுகிறது? அப்படி மாறினால் நாம் வைத்திருந்தது நிஜமான அன்புதானா என்பதுதான் படத்தின் மையக்கேள்வி. ஆனால் நுணுக்கமான இந்த சிக்கல் திரைக்கதையாய் மாறியிருப்பதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ispade rajavum idhaya raniyum shilpa



கௌதம், தாரா என இருவரது பாத்திரப்படைப்பும் அதை ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுதாத் இருவரும் கையாண்டிருக்கும் விதமும் கச்சிதம். குறிப்பாக ஷில்பா மஞ்சுநாத்தின் குரலும் டயலாக் மாடுலேஷனும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையை திடமாக்குகின்றன. இருவருக்குமான சின்ன சின்ன ஊடல்கள், அந்த சந்தர்ப்பங்களில் ஆணுக்கு எழும் சந்தேகங்கள், குழப்பங்கள், இருவருக்குமான பிரிவு போன்ற பல தருணங்கள் மிக இயல்பாக யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஆண் பெண் யாதொருவர் மீதும் தவறென நிலைகுத்தாமல், சூழ்நிலைகள், அதையொட்டிய உணர்வு ஊசலாட்டங்கள், அதிலிருந்து எழும் நொடிப்பொழுது முடிவுகளை வைத்தே கட்டமைத்திருப்பது அழகு. கதை முழுவதும் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நிறைந்திருப்பதால் பாலசரவணன், மா.கா.பா உள்பட வேறு யாரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  படத்தை தோளில் தூக்கிச் செல்லும் இன்னுமிருவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். படத்தின் மொத்த மூடையும் தீர்மானிப்பதில் இசைக்கும் ஒளிப்பதிவுக்கும் பெரும் பங்குண்டு. தொழில்நுட்பரீதியாக முழு நிறைவுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது படம்.

சிறிய சண்டைக்குப் பிறகும் கூட ‘கோபம்லாம் இல்லடா.. நீ எதையும் போட்டு குழப்பிக்காம தூங்கு’ என்பதில் துவங்கி ‘நான் உன்ன விட்டு பிரிஞ்சாலும் நான் திருப்பி உனக்காக வருவேன்னு நீ நம்பணும்’ என்பது வரை அந்த பாத்திரம் வலுவாய் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் பெரும்பாலும் குற்றவுணர்வில் தவிப்பதும் தாராதான். ‘நான் முன்னாடியே உன்ட்ட வந்துருக்கணும்’ ‘தப்பு பண்ணிட்டேன்’‘சாரி’ என கௌதம் செய்த தவறுகளுக்குக் கூட தாரா மன்னிப்பு கேட்பதும் குற்றவுணர்வும் உழல்வதும் பெறும் உறுத்தல். அதுவும் அன்பின் பெயரால் ஆண் பெண்ணை துன்புறுத்துவது குறித்த படத்தில். ஆனால் கௌதம் பெரும்பாலான இடங்களில் எந்த குற்றவுணர்விலும் சிக்கவில்லை. அதுகுறித்த வருத்தமும் வேதனையும் அவனிடம் இல்லை. கொஞ்சம் பொறுமை காத்தால் தாரா தனக்கே கிடைத்துவிடுவாள் என்கிற நிலைமையில் கூட பொறுமை காக்காமல் கோபத்தில் சூழைலை சிதைக்கும் ஒருவன் அதற்கும் தாரா மேல் கோபப்படுவதும், இறுதியில் தாராவே இதற்கும் மன்னிப்பும் கேட்பதுமே கூட ஒரு வன்முறைதானே?
 

ispade rajavum idhaya raniyum



காதலின் சோகத்தில் ஆண் போதைக்கும் அடிமையாவதும் அதன் தொடர்ச்சியாக ஒரு பாடலைப் பாடுவதும் காதல் படங்களின் க்ளிஷேவாக மட்டும் இல்லை... அந்த மொத்த காட்சிகளுமே படத்தின் நீளத்தைக் கூட்டியும் பார்வையாளர்களை படத்திலிருந்து அந்நியப்படுத்தவுமே செய்கின்றன. அதற்கு அடுத்தடுத்த காட்சிகள்தான் படத்தின் ஆன்மா. ஆனால் இந்த காட்சிகளில் அறுபட்ட தொடர்பினால் அந்த காட்சிகளின் தாக்கம் தடைபடுகிறது. அதிர்ச்சியான ஒரு முடிவை நோக்கி பயணிக்கிறது படம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு ஆழமான காரணம் அதில் புதைந்திருக்கிறது. அத்தகைய கனமான முடிவுடன் நிறைவுபெற்றிருந்தால் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கடுத்து இடம்பெறும் காட்சிகள் பாசிடிவ்வான ஒரு நிறைவை கொடுத்தாலும் ஒரு பாசிடிவ் முடிவிற்காக உருவாக்கப்பட்டது போன்ற செயற்கைத்தன்மையுடனே இருக்கின்றன. காதலர்களைத் தாண்டிய, தற்காலத்தைய பழக்கவழக்கங்களுக்கு சற்று தள்ளி இருப்பவர்களுக்கு படம் மிக அன்னியமாகத்தான் இருக்கும். ’எதுக்கு சண்ட போடுறாங்க, எதுக்கு திரும்ப சேருறாங்க’ என்ற குழப்பமே அவர்களுக்கு மிஞ்சும்.

இருந்தாலும் சமகால காதலின் மிகநுணுக்கமான ஒரு பரிமாணத்தை பதிவு செய்ததில் தனித்துவம் பெறுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!