Skip to main content

இந்தப் படம் பார்த்தால் சுகர் வருமா? சில்லுக்கருப்பட்டி - விமர்சனம் 

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

சினிமாவின் பல்வேறு வடிவங்களும், கிட்டத்தட்ட அனைத்துமே, தமிழ் சினிமாவில் முயன்று பார்க்கப்பட்டுள்ளன. 'ஆந்த்தாலஜி' என்பது சினிமாவின் ஒரு வடிவம். ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள், ஒன்றோடொன்று தொடர்புடையதாகவோ இல்லாமலோ ஒரு திரைப்படமாக உருவாக்கப்படுவது 'ஆந்த்தாலஜி' (பொதுவாகவும் அந்த வார்த்தையின் அர்த்தம் அதுதான்). அந்த வகையில் தமிழில் சில முயற்சிகள் நடந்திருந்தாலும், பெரிய வெற்றியாக அது அமைந்ததில்லை. 'சில்லுக்கருப்பட்டி' அந்த வகை முயற்சி. இது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை படம் அளித்திருக்கிறது.
 

samuthirakani sunaina



ஒரு திரைப்படம், ஒரு மைய இலக்கை கொண்டிருக்க வேண்டும், அதை நோக்கி பாத்திரங்கள் பயணிக்க வேண்டும், அதில் தடைகள் வேண்டும், பாத்திரங்களுக்கிடையே பிரச்னைகள் வேண்டும், திருப்பங்கள் வேண்டும்... இதெல்லாம் சிறப்பாக அமைந்தால்தான் அது திரைப்படமா? ஒரு நல்ல திரைப்படத்துக்கு இவையெல்லாம் கண்டிப்பாக வேண்டுமா என்று கேட்டு, தேவையில்லை என்று இனிமையாக, அழகாக, அமைதியாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். 'பூவரசம் பீப்பீ' மூலம் பால்ய வயதின் வெப்பம், சோகம், மகிழ்ச்சி, குழப்பம், அனைத்தையும் கூறி கவனம் ஈர்த்தவர் 'சில்லுக்கருப்பட்டி'யுடன் வந்திருக்கிறார்.

'பிங்க் பேக்', 'காக்கா கடி', 'டர்ட்டுல்ஸ்', 'ஹே அம்மு' என நான்கு கதைகள். நான்குக்குமான தொடர்பு காதல். வெவ்வேறு வயதில், தளத்தில் நிகழும் காதலை மிகைகள் இல்லாமல் (வெகு சில இடங்கள் தவிர்த்து) இயல்பாக, இனிமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். மாநகரின் பணக்காரர்கள் குப்பையாகக் கருதித் தூக்கியெறியும் பொருள்களிலிருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வாழும் சிறுவன் மாஞ்சா, அந்த குப்பைக்குள் தன் காதலை கண்டெடுக்கிறான். தினமும் அவன் காணும் ஒரு பிங்க் பைக்குள் இருக்கும் பொருள்களை வைத்தே மிட்டி ('தெய்வத்திருமகள்' சாரா) மீது காதல் வருகிறது. அவளை தேடிப் போகிறான். அதன் பிறகு, நாம் பயப்படுவது போல காதல், பிரச்னை என்றெல்லாம் போகாமல் கவிதையாக முடிகிறது 'பிங்க் பேக்'.

 

manikandan nivethitha



ஐடி ஊழியராகவும் மீம் கிரியேட்டராகவும் இருக்கும் மணிகண்டனுக்கும் ஃபேஷன் டிசைனர் நிவேதிதாவுக்கும் ஏற்படும் காதல் 'காக்கா கடி'. காதலை சமகால விஷயங்களுடன் மிக யதார்த்தமாகப் பேசுகிறது. திடீரென கேன்சரால் பாதிக்கப்படும் மணிகண்டனை துணைநின்று மீட்கும் நிவேதிதா, படம் பார்ப்பவர்களின் 'ரிலேஷன்ஷிப் கோல்' ஆக வாய்ப்புகள் அதிகம். கேன்சர் என்றவுடன் இருமல், ரத்தம், சோகமெல்லாம் இல்லை. இந்தக் கதையும் மிக அழகாக நகர்ந்து இனிமையாக முடிகிறது. 'பூவரசம் பீப்பீ'யில் சிறுவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்வுகளைக் கூட தைரியமாகக் காட்சிப்படுத்தியவர் ஹலிதா. இந்தப் படத்திலும் பேசாத பொருள்கள் சிலவற்றை போறபோக்கில் பேசுகிறார். சரி, படத்தின் கதையை அப்படியே சொல்லிவிட்டீர்களே என்று தோன்றினால், இந்தப் படத்தின் கதையை தாராளமாக சொல்லலாம். ஏனெனில் அந்தக் கதைகளல்ல, கதைகள் தரும் இனிமையான அனுபவம்தான் 'சில்லுக்கருப்பட்டி'.


'டர்ட்டுல்ஸ்'... காலம் கடந்த, ஆனால் கனிந்த காதல். பிற உறவுகள் தள்ளி நிற்கும் அல்லது நிற்பதுபோல இருக்கும் காலகட்டத்தில் நமக்கென ஒரு துணை, ஒரு ஸ்பரிசம் தேடும், தேவைப்படும் வயதில் யசோதாவுக்கும் (லீலா சாம்சன்) நவநீதனுக்கும் (ஸ்ரீராம்) நிகழும் காதல். "நமக்கு நெருக்கமானவங்க மரணத்தில் இருந்து மீள்வதே வாழ்க்கையாகிப் போச்சுல்ல" போன்ற பக்குவமான பேச்சுகளும் "இந்தாங்க இஞ்சி டீ வித் ஆடட் டிகினிட்டி" போன்ற சின்ன குறும்புப் பேச்சுகளும் நிறைந்த காதலாக கவர்கிறது 'டர்ட்டுல்ஸ்'.

 

 

sriram leela samson



வேலையிலும் மொபைல் போனிலும் மூழ்கி வேறெதையும் பெரிதாகக் கவனிக்க, கண்டுகொள்ள நேரமில்லாத நடுத்தர வயதை எட்டிக்கொண்டிருக்கும் ஆடிட்டர் தனபாலுக்கும் (சமுத்திரக்கனி) வீட்டை கவனிப்பதே வாழ்க்கையாகிப் போன அவரது மனைவி அமுதினிக்குமான (சுனைனா), இடைவெளி பெருகுவதும் இடையில் வேறு ஒரு பொருளால் இடைவெளி நிறைந்து இருவரும் நெருங்குவதும்தான் 'ஹே அம்மு'. குடும்பத்தில் செலவிடப்பட வேண்டிய நேரத்தை பணியும் ஃபோனும் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அருகிலேயே இருப்பவர்கள் மீது ஏற்படும் அலட்சியம், வருடங்களோடு சேர்ந்து மெல்ல வடியும் காதல் என உறவுப் பாடமாக அமைந்துள்ளது இந்தப் பகுதி. பாடமென்றால் சீரியசான பாடமில்லை, சிரிப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.

நான்கு கதைகளிலுமே சின்னச் சின்ன சுவாரசியங்களோடு நகைச்சுவையும் சேர்ந்த வசனங்கள் பெரும் ஈர்ப்பு. படத்தில் நான்கு கதைகளும் வைக்கப்பட்ட வரிசையில் தனது திரைக்கதை ஸ்மார்ட்னெஸ்ஸை நிறுவியிருக்கிறார் ஹலிதா. ஒவ்வொரு கதையிலும் இருக்கும் இனிமை, சில்லுக்கருப்பட்டி என்ற பெயருக்கு நியாயம் செய்கிறது. இத்தனை இனிமையான இந்தப் படத்தைப் பார்த்தால் திகட்டாதா, சுகர் வருமா என்றால் வராது. இது வெள்ளை ஜீனி அல்ல, கருப்பட்டி. அதிலும் 'இன்னும் கொஞ்சம் நீளுமோ' என்ற எண்ணம் இருக்கும்போதே முடிந்துவிடும் 'சில்லு சில்லான' கருப்பட்டி.

 

ragul



நடிப்பில் சமுத்திரக்கனி - சுனைனா, மணிகண்டன் - நிவேதிதா இணைகள் மற்றவர்களை விட இயல்பாக ஈர்க்கின்றன. மற்றவர்களும் பெரும் குறை வைத்துவிடவில்லை. பிரதீப்குமாரின் பின்னணி இசை படமெங்கும் சாரல் போல வீசிக்கொண்டே இருக்கிறது, சில இடங்களில் அதீதமாய். இப்படி ஒரு படத்தில் ஆங்காங்கே அமைதி இருந்திருக்கலாம். அபிநந்தன், மனோஜ் பரமஹம்ஸா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஆகியோரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதையையும் ஒரு அழகான கிரீட்டிங் கார்டாக மாற்றியுள்ளது. இயக்குனர் ஹலிதாவே படத்தை எடிட் செய்திருக்கிறார். தான் சொல்ல நினைத்ததை நினைத்த அளவில், வடிவத்தில் தந்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்குமான அந்த டைட்டில் டிசைனிங், அனிமேஷன் அழகு.


'ஓலா' பயணத்தில் இத்தனை முறை யதார்த்தமாக சந்திக்க முடியுமா, அலெக்ஸ்சாவை இப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமா போன்ற கேள்விகள் ஆங்காங்கே எழலாம். நான்காவது கதை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சம்பவங்களுடன் நீள்கிறதே என்ற எண்ணம் தோன்றலாம். இப்படி சில சின்னச் சின்ன சினிமா சுதந்திரங்களை எடுத்துக்கொண்டு ஒரு நல்ல படத்தை தந்திருக்கும் இயக்குனருக்காக அந்தக் கேள்விகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லலாம்.                                  
                    

 

                                

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.