Skip to main content

அசுரன்... ஒருத்தன் இல்ல, ரெண்டு பேர்! அசுரன் - விமர்சனம்

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

"உனக்கு அவன் செய்யுறதெல்லாம், நீ அவனுக்குக் கீழ இருக்கனு அவன் நம்புற வரைக்கும்தான்..." என்ற இடத்தில் தொடங்கி "நம்ம கிட்ட காசிருந்தா புடுங்கிக்குவானுவ, நிலமிருந்தா எடுத்துக்குவானுவ, படிப்ப மட்டும் ஒன்னும் செய்ய முடியாது, படிச்சு அதிகாரத்துக்கு வா, அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க" என்னும் இடத்துக்கு வருகிற ஒரு மனிதனின் கதை. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான சிவசாமியின் வாழ்க்கை 'அசுரன்'.

 

asuran family



திருநெல்வேலி அருகே உள்ள கிராமங்களில் 80களில் நடக்கும் கதை. எந்த இடத்திலும் ஊர் பெயரையோ காலகட்டத்தையோ வெளிப்படையாக சொல்லாமல் காட்சிகளால் அதை உணரவைத்தது படத்தின் ஒரு சோறு. சிவசாமியின் பதினாறு வயது மகன் சிதம்பரம் ஒரு கொலையை செய்துவிட, குடும்பத்துடன் ஊரை விட்டு தப்பிக்கிறார்கள். மனைவி, மகள் ஒரு பக்கம் போக கொலை செய்த மகனுக்கு ஆபத்தில்லாமல் எப்படியாவது சரணடைய வேண்டுமென்று இன்னொரு பக்கம் செல்கிறார் சிவசாமி. அந்தக் கொலைக்குக் காரணம் என்ன, 'சண்டை வேண்டாம் வேண்டாம்' என தவிர்க்கும் சிவசாமியின் பின்னணி என்ன என்பதை உண்மையாகவே ரத்தமும் சதையும் வெக்கையும் புழுதியுமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.


எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை படமாக்கத் தேர்ந்தெடுத்த முதல் அடியிலிருந்து வன்மத்தைத் தூண்டாத தீர்வை பாடமாகச் சொன்ன க்ளைமாக்ஸ் வரை ஒவ்வொரு அடிக்கும் வெற்றிமாறனை பாராட்டலாம். பனிரெண்டு ஆண்டுகளில் ஐந்து படங்கள் இயக்கியிருப்பது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் பெருமிதம் கொள்ளக்கூடிய படங்கள். அதில் நான்கு படங்களில் வெற்றிமாறனுடன் தனுஷ் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் கலை புரிதலும் நட்பும் படங்களாக வெளிவருகின்றன என்று சொல்லலாம். அந்த வரிசையில் 'அசுரன்', தனுஷ் - வெற்றிமாறன் இருவரின் அடுத்த பெரிய உயரமாக இருக்கிறது. நாற்பது வயதுக்கு மேலான, வெளியே பொறுப்பும் உள்ளே நெருப்பும் கொண்ட பக்குவமான தந்தையாகவும் வீரம், வேகம் நிறைந்த இளைஞனாகவும் இரண்டு பருவங்களிலும் சிவசாமியாக நம் மனதில் அழுத்தமாகப் பதிகிறார் நடிப்பு அசுரன் தனுஷ். நாவலின் சாரம் குறையாமல் அதே நேரம் சுவாரசியத்துக்காகக் காரம் சேர்த்து கதை நடக்கும் நிலத்தின் தன்மை, வெப்பம், புழுதி, வாழ்க்கை ஆகியவற்றை நாம் உணரும்படி உண்மைக்கு நெருக்கமாகப் படமாக்கி ஒரு தரமான திரைப்படத்தைத் தந்திருக்கும் வெற்றிமாறன் இன்னொரு அசுரன். சரியான வட்டார மொழி, பன்றி வேட்டை, ஒளிந்து கொள்ளச் செல்லும் காடு என கதை நடக்கும் களத்தை உண்மைக்கு நெருக்கமாக்க வெற்றிமாறன் எடுக்கும் முயற்சிகள் படத்தை நமக்கு இன்னும் நெருக்கமாக்குகின்றன. கலைப்புலி தாணுவின் தயாரிப்பு வரிசையில் இன்னொரு பெருமையாக இணைந்திருக்கிறது 'அசுரன்'.

 

 

ken karunas teejay



வர்க்கம், சாதி இரண்டின் அடிப்படையிலான ஏற்ற தாழ்வு, நில அரசியல், பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்ட சூழல் என மிக தீவிரமான ஒரு பிரச்சனையை தீவிரம் குறையாத சுவாரசியமான ரிவென்ஜ் கதையில் சினிமாவாக்கி இருக்கிறார்கள். படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெரும் பலம். வெற்றிமாறனின் 'காஸ்டிங்' லிஸ்ட்டில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் பலரும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், எந்தப் பழைய படத்தையும் நினைவுபடுத்தாமல் இருப்பது அவர்களது சிறப்பு. லிஸ்ட்டில் இல்லாத புதியவர்களான கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் இருவரும் புதிது என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் புகுந்து விளையாடுகிறார்கள் (சிறு டப்பிங் குறைபாடுகள் தவிர்த்து). பிரகாஷ் ராஜ், பசுபதி, 'ஆடுகளம்' நரேன், பவன், சுப்ரமணியம் சிவா, அம்மு அபிராமி, ஏ.வெங்கடேஷ், நிதிஷ் வீரா என ஒவ்வொருவரும் பெரிதோ சிறிதோ, தங்கள் பாத்திரங்களை சரியாகப் பதியச் செய்திருக்கிறார்கள். அதிலும் பசுபதி, ஒரு கால இடைவெளிக்குப் பிறகு நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல், இங்கிலிஷ் பேசும் இடம், சர்ப்ரைஸ் நகைச்சுவை. சிவசாமியின் மனைவி பச்சையம்மாளாக நடிகை மஞ்சு வாரியர். இந்தக் கூட்டத்தில் இவர் மட்டும் சற்றே நெருடலாகத் தெரிந்தாலும் தனது சிறப்பான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார்.

 

dhanush



எல்லா வார்த்தையிலும் 'லே' சேர்த்துக்கொள்ளும் வழக்கமான தமிழ் சினிமாவின் திருநெல்வேலி வட்டார வழக்காக இல்லாமல் உண்மையான மொழியை நமக்குக் கொண்டு வந்த சுகா - வெற்றிமாறன் வசனங்களும் சுகா அளித்துள்ள வசனப்பயிற்சியும் படத்தின் நேர்மையை இன்னும் வலுப்படுத்தியுள்ளன. உடை, கலை இரண்டும் கதையின் காலகட்டத்தை மிக சிறப்பாக வடித்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் கதையின் களம் நம் முன் நிஜமாக விரிகிறது, சண்டைக் காட்சிகள் நம்மையும் பதற வைக்கின்றன. படம் நெடுக படர்ந்திருக்கும் அந்த இருட்டு நமக்கும் மெல்லிய பதற்றத்தை உண்டாக்குகிறது. கதையை சுவாரசியமாக சொல்ல ஒளிப்பதிவு மிக சிறப்பாகப் பயன்பட்டிருக்கிறது. இசை, ஜி.வி.பிரகாஷ். இடைவேளை சண்டைக் காட்சியில் ஒலிக்கும் இசை, வணிகப் படங்களுக்கேற்ற ஒரு சிறந்த ஹீரோயிச இசை. ரசிகர்களை குதூகலிக்கச் செய்கிறது. காட்சிகளின் விறுவிறுப்பிலும் பரபரப்பிலும் இசைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. பாடல்கள் புதிதாக இல்லையென்றாலும் ரசிக்கவைக்கும் ரகம். ராமரின் படத்தொகுப்பில் சண்டைக் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. பீட்டர் ஹேனின் 'ரா'வான சண்டை அமைப்பு தாக்குதலையும் தாக்கத்தையும்  அதிகப்படுத்தியிருக்கிறது.

படம் நெடுக தெறிக்கும் ரத்தத்துடன் நிகழும் வன்முறை காட்சிகளுக்கு கூடுதல் மனப்பக்குவம் தேவை. இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் பகுதி சற்றே நீளம். கொலை... மறுபக்கம் கொலை... பதில் கொலை... என செல்வது அதிர்ச்சி, சற்றே அயர்ச்சி. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி 'அசுரன்' பெரிய முயற்சி. வெற்றியும் பெற்றுவிட்டது. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியிடம் இன்னும் பெரிதாக எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.