Skip to main content

தாத்தா, அப்பா, பேரன் காம்பினேஷனில் வெளியான 'ஓ மை டாக்' ரசிக்க வைத்ததா ..? - விமர்சனம்

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

arun vijays' oh my dog movie review

 

தெலுங்கில் எப்படி தாத்தா நகேஸ்வர் ராவ், அப்பா நாகார்ஜுனா, மகன் நாகசைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் 'மனம்' படத்தில் ஒன்றாகத் திரையில் தோன்றி ரசிக்க வைத்தார்களோ, அதேபோல் தற்போது தமிழிலும் முதல் முறையாக தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், மகன் ஆர்ணவ் விஜய் மூவரும் இணைந்து திரையில் தோன்றியுள்ள படம் 'ஓ மை டாக்'. அதுவும் குழந்தைகளை மையப்படுத்தி சூர்யா தயாரிப்பில் ஓடிடியில் ரிலீசாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கிறது..?

 

ஊட்டியில் அப்பா விஜயகுமாருடன் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அருண் விஜய். அதிக கடன் சுமையில் இருந்தாலும் இவரின் மகன் ஆர்ணவ் விஜய்யை இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்க வைக்கிறார். இதற்கிடையே மகன் ஆர்ணவ் விஜய் பார்வையற்ற ஒரு நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கிறார். சிம்பா எனப் பெயரிடப்பட்ட அந்த நாய் வளர்ந்து நாய் கண்காட்சி வரை செல்கிறது. நாய் கண்காட்சியில் தொடர்ந்து கோலோச்சி வரும் நடிகர் வினய்யின் நாயை விட சிம்பா நாய் சிறப்பாகச் செயல்பட, அதை ஜெயிக்க விடாமல் தடுக்கிறார் வில்லன் வினய். இந்தத் தடைகளை ஆர்ணவ் விஜய்யும், சிம்பா நாயும் எப்படித் தகர்த்தெறிந்தார்கள் என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் குழந்தைகளையும், விலங்கையும் மையப்படுத்தி ஒரு படம் வெளியாகியுள்ளது. அதுவும் குழந்தைகளுக்கும், செல்ல பிராணி பிரியர்களுக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அதனை அப்படியே மனதில் நிறுத்தி ஒரு ஃபீல் குட் படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சரோவ் சண்முகம். தடாலடியான திருப்பங்கள், அதிரடியான திரைக்கதை, ஆர்ப்பாட்டமான பஞ்ச் வசனங்கள் என எந்த விதமான கமர்சியல் அம்சங்களையும் படத்தில் உபயோகப்படுத்தாமல் குடும்பங்களுக்கும், சிறுவர்களுக்கும், பிடித்த வகையில் படத்தை ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குநர். குறிப்பாக சிறுவர்களையும், சிம்பா நாயையும் எந்தக் காட்சிக்கு எப்படிக் காண்பிக்க வேண்டுமோ அப்படி அழகாகக் காட்டி காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளார். படம் ஆரம்பத்தில் சற்று சீரியல் போல் நகர்ந்தாலும் போகப்போக வேகமெடுத்து சீராகச் சென்று கரை சேர்ந்துள்ளது. அதேபோல் தகுதியானவர்களாகப் பார்க்கப்படுபவர்கள் மட்டுமே இவ்வுலகில் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து தகுதியற்றவர்களாகப் பார்க்கப்படும் நபர்களும் இவ்வுலகத்தில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் இப்படம் விதைக்கிறது.

 

தான் ஒரு கலை வாரிசு என்பதைத் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய். பாசமான காட்சிகளிலும், விளையாட்டு மிகுந்த குறும்புத்தனமான காட்சிகளிலும், நாயுடன் கொஞ்சி குலாவும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இவருக்கு அப்பாவாக நடித்திருக்கும் அருண் விஜய் சற்று அடக்கி வாசித்தே நடித்துள்ளார். சரியான இடங்களில் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி தன் மகனுக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்துள்ளார். 

 

arun vijays' oh my dog movie review

 

தாத்தாவாக நடித்திருக்கும் விஜயகுமார், ஒரு நடுத்தர குடும்ப உறுப்பினராக தன் அனுபவ நடிப்பால் இயல்பாகத் தோன்றியுள்ளார். அருண் விஜய்யின் மனைவியாக வரும் மகிமா நம்பியார்க்கு அதிக வேலை இல்லை. இருந்தும் தனக்கு கிடைத்த ஸ்பேசில் போதுமான அளவு ஸ்கோர் செய்துள்ளார். பணக்கார வில்லனாக வரும் நடிகர் வினய் தமிழை தப்புத்தப்பாக பேசினாலும் அதிலும் வில்லத்தனம் காட்டுகிறார். இவரின் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அது கதையை நகர்த்திச் செல்ல உதவியுள்ளது. சிறிய கதாபாத்திரங்களில் வரும் சிறுவர்களும் நடிகர் சுவாமிநாதனும் அவர்களுக்குக் கொடுத்த வேலையை அழகாகச் செய்துள்ளனர்.

 

ஊட்டியையும் அதன் சுற்று வட்டாரத்தையும், அந்த பசுமை பாய்விரிப்பில் நாய்கள் கொஞ்சி விளையாடும் காட்சிகளையும் திறம்படக் கையாண்டு சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். நிவாஸ் கே பிரசன்னா இசையில் குழந்தைகளைக் கவரும்படியான பாடல்களும், நேர்த்தியான பின்னணி இசையும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.

 

இந்தக் கோடை விடுமுறையில் சிறுவர்களும், செல்லப்பிராணி பிரியர்களும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படமாக 'ஓ மை டாக்' அமைந்திருக்கிறது.

 

ஓ மை டாக் - சம்மர் ஸ்பெஷல்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!