Skip to main content

சமையல் கலையில் வெற்றி பெற்றாரா? - ‘அன்னபூரணி’ விமர்சனம்!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Annapoorani Movie review

 

லாக் டவுனுக்கு பிறகு இன்டர்நெட் பயன்பாடு அதிகமான காலகட்டத்தில் சமையல் குறித்த ஆன்லைன் சேனல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சிகளிலும் சமையல் குறித்த நிகழ்ச்சிகள் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ஹிட் அடித்தன. இப்படி குக்கிங் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் சமீப காலங்களாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சினிமாவிலும் சமையல் கலை குறித்த பொழுதுபோக்கு அம்சத்தை அன்னபூரணி படம் கொண்டு வந்துள்ளது. சமையல் கலை குறித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பெற்ற அதே வரவேற்பை தற்போது ரிலீசாகி இருக்கும் அன்னபூரணி படமும் பெற்றுள்ளதா, இல்லையா? என்பதை பார்ப்போம்.

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாதம் சமைக்கும் பிராமண சமையல்காரரான அச்யுத்குமாரின் மகள் நயன்தாராவுக்கு சிறுவயது முதலே மற்றவர்களை காட்டிலும் நாவில் ருசி அறியும் தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் அவர் வளர்ந்த பின் தான் இந்தியாவின் மிகப்பெரிய செப் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வளர்கிறார். நம் நாட்டின் மிகப்பெரிய சமையல் நிபுணராக மாற வேண்டும் என்றால் அசைவம் சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிராமண பெண்மணியான நயன்தாராவிற்கு ஏற்படும் என்ற ஐயத்தில் நயன்தாராவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் அவரது தந்தை அச்யுத் குமார். இதையடுத்து தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தந்தைக்குத் தெரியாமல் கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து சமையல் கலை மாணவராக கல்வி பயில்கிறார். இதைத்தொடர்ந்து தன் லட்சியத்தில் நயன்தாரா வெற்றி பெற்று மிகப்பெரிய செப் ஆனாரா, இல்லையா? அவர் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா, இல்லையா? என்பதே அன்னபூரணி படத்தின் மீதி கதை.

 

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடமிருந்து வெளியே வந்திருக்கும் அடுத்த உதவியாளர் நிலேஷ் கிருஷ்ணா சங்கரின் முன்னாள் சிஷ்யர்களை போல் முதல் பாலிலேயே சிக்சர் அடித்திருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது ஒரு சிம்பிளான கதையாக இருந்தாலும், இதுவரை நாம் சினிமாவில் பார்த்திடாத மக்களுக்கும் அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு சமையல் கலை குறித்த கதையை இன்றைய டிரெண்டிற்கு ஏற்றவாறு ரசிக்கும்படி கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் திருப்பங்கள் இல்லாமல் ஒரே சீராக நாம் புத்தகத்தில் ஒரு கதையை ஒவ்வொரு பக்கமாக பிரித்து படிக்கும் பொழுது என்ன உணர்வு ஏற்படுமோ, அதுபோல் திரைக்கதை அமைத்து மொத்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா. 

 

ஒரு கதையாக நாம் கேட்கும் பொழுது எந்த அளவு நமக்கு சுவாரசியம் கிடைக்குமோ அதே அளவு சுவாரஸ்யம், திருப்பங்கள் இல்லாத இந்த திரைக்கதையிலும் கிடைத்திருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்தின் மேக்கிங் சங்கரின் இன்றைய கால உதவியாளர்களிடம் எந்த அளவு உயர்தரமான ஹாலிவுட் தர மேக்கிங் இருக்குமோ அதே அளவான தரமான மேக்கிங் இந்தப் படத்திற்கும் கொடுத்து இந்த படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார் நிலேஷ். அதுவே இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. பொதுவாக திருப்புமுனை இல்லாத திரைக்கதைகள் பெரும்பாலும் ரசிக்க முடியாதபடி இருக்கும். ஆனால் மாறாக இந்த படத்தில் அப்படியான திரைக்கதை அமைந்தும், அவை ரசிக்கும்படி அமைந்தது இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

 

குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் படி கண்கலங்க வைக்கும் சென்டிமென்ட் காட்சி அமைப்புகள் இந்த படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதும் இந்த படத்திற்கு இன்னொரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும், ஆங்காங்கே சில இடங்களில் மிகைப்படுத்தும் படியான காட்சி அமைப்புகளும், சில கிளிஷேவான காட்சி அமைப்புகளும் பல இடங்களில் தென்பட்டாலும் படத்தில் சொல்ல வந்த கருத்து மக்களிடையே ஆழமாக போய் பதியும்படி சொல்லி இருப்பது படத்தை வெற்றி படமாக மாற்றி இருக்கிறது. 

 

நாயகன், நாயகி என இரண்டு கதாபாத்திரங்களையும் ஒரே ஒரு ஆளாக தன் தோள்மேல் சுமந்திருக்கும் நயன்தாரா, தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்தில் சிறப்பாக செய்து மீண்டும் ஒருமுறை கைதட்டல் பெற்றிருக்கிறார். படத்தில் நயன்தாராவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக கமர்சியல் படங்களில் நாயகிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் இந்த படத்தில் ஜெய்க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் படம் முழுவதும் ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் வந்து நாயகிக்கு சப்போர்ட் மட்டும் செய்துவிட்டு சென்று விடுகிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. 

 

ஆனால் நாயகி நயன்தாராவோ படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மொத்த படத்தையும் ஒருவரே தன் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார். அவரது கேரியரில் இது ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. நயன்தாராவின் அப்பாவாக வரும் அச்யுத்குமார் அக்மார்க் பிராமண அப்பாவாகவே மாறி இருக்கிறார். இன்னமும் மாறாமல் பழைய பஞ்சாங்கம் பேசிக் கொண்டிருக்கும் பழைய பெருசுகளின் முகத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். நயன்தாராவின் பாட்டியாக நடித்திருக்கும் சச்சு சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். ரெடின் கிங்ஸ்லியும் சில காட்சிகளில் வந்து சிரிக்க வைத்து சென்று இருக்கிறார். நயன்தாராவின் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தை மிகச் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். அவர் காட்டும் சின்ன சின்ன முகபாவனைகள் வசன உச்சரிப்புகள் கூட சிறப்பாக அமைந்திருக்கிறது. நயன்தாராவின் தோழியாக நடித்திருக்கும் பிக் பாஸ் பூர்ணிமா சில காட்சிகளே வந்தாலும் அவருக்கான வேலையை செய்துவிட்டு சென்று இருக்கிறார். 

 

இந்தியாவின் சிறந்த செப்பாக நடித்திருக்கும் சத்யராஜ், நாயகி நயன்தாராவிற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கும் நயன்தாராவுக்குமான கெமிஸ்ட்ரி ராஜா ராணி படத்தை நினைவு படுத்துகிறது. சிறிய வேடத்திலேயே வந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் மனதில் பதியும் படி நடித்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர். 

 

தமன் இசையில் கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட பாடல்கள் மனதை வருடி இருக்கின்றன. ஆனால் அவை மனதில் பதியும் படி இல்லை. ஆனாலும் பின்னணி இசையில் விட்டதை பிடித்திருக்கிறார். முக்கியமான சென்டிமென்ட் காட்சிகளிலும், சமையலில் மாஸ் காட்டும் காட்சிகளிலும் சிறப்பான பின்னணி இசை கொடுத்து கூஸ்பம்ப் மொமண்ட்ஸ் ஏற்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரம். இந்தப் படத்தின் மிகப்பெரிய இன்னொரு பிளஸ் எதுவென்றால் இவரது ஒளிப்பதிவு என்று கூறலாம். அந்த அளவு சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக சமையல் மேக்கிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஒரு புதிதான சிம்பிள் கதையை வைத்துக்கொண்டு நாம் ஏற்கனவே பார்த்து பழகிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதையாக இந்த படம் உருவாகி இருந்தாலும், அவை ரசிக்கும்படி அமைந்து கூடவே படத்தின் மேக்கிங் மிகவும் உலகத்தரமாக அமைந்து இருக்கிறது. அதற்கு முத்தாய்ப்பாக நயன்தாராவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படம் முழுவதும் சிறப்பாக அமைந்திருப்பது இந்த படத்தை நெகிழ்ச்சியான ஒரு திரைப்படமாக மாற்றி வெற்றி பெற்று இருக்கிறது.


அன்னபூரணி - சமையல் ராணி!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.