Skip to main content

நீட் தேர்வு பாதிப்பின் தாக்கத்தினை உண்டாக்கியதா? - ‘அஞ்சாமை’ விமர்சனம்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Anjaamai movie review

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் பல்வேறு தற்கொலைகள் இப்பொழுதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மாநில ஆளுங்கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்தும், மத்தியில் நீட் தேர்வை ஆதரித்தும் தேர்வுகள் நடைபெற்று வரும் இந்த சூழலை மையமாக வைத்து இதனால் ஏழை எளிய மாணவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு அவசியமா? அதனால் நடக்கும் குளறுபடிகளால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்ற மையக்கருத்தை வைத்து உருவாகி இருக்கும் அஞ்சாமை திரைப்படம் எந்த அளவு பார்ப்பவருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் விதார்த், வாணி போஜன் தம்பதியினர் அவர்களுடைய மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர். நாடக நடிகராக இருக்கும் விதார்த் தன்னைப் போலவே தன் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தன் சொத்து சுகத்தை எல்லாம் விற்று மகனை படிக்க வைக்கிறார். மகன் கார்த்திக் மோகன் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதன் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவருக்கு தான் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு படிக்கிறார். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு அவசியம் என்ற விஷயம் அவர்களுக்கு தெரிய வர மகன் கார்த்திக் மோகனை மிகப் பெரிய இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து நீட் கோச்சிங்கில் படிக்க வைக்க கையில் இருக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்து டியூஷன் படிக்க வைக்கிறார் விதார்த். இதற்கிடையே மகனும் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்ய அவர் நீட் தேர்வுக்காக அந்த இன்ஸ்டிடியூட் மூலம் விண்ணப்பிக்கிறார்.

இவருக்கு தேர்வு மையம் ஜெய்பூரில் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு பசி, தூக்கம் என்று பாராமல் கையில் சிறிது பணத்துடன் தந்தை விதார்த்தும், மகன் கார்த்திக் மோகனும் ரயிலில் ஜெய்ப்பூருக்கு விரைகின்றனர். அங்கே பல்வேறு சிக்கல்களும், கொடுந்துயரங்களும் நடந்தேறுகிறது. அதனால் வெகுண்டு எழும் மாணவன் கார்த்திக் மோகன் நீட் தேர்வு அதிகாரிகளின் குளறுபடிகள் தான் காரணம் என எண்ணி போலீஸ் அதிகாரி ரகுமான் உதவியுடன் தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இந்த வழக்கில் யார் வெற்றி பெற்றார்கள்? மாணவன் கார்த்திக் மோகனுக்கு நியாயம் கிடைத்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

மருத்துவப் படிப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் அவசியமா என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டு இன்றைய சூழலில் சமூகத்திற்கு மிக அவசியமான ஒரு படத்தைக் கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி சுப்பராமன். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கால் நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை மையமாக வைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகள் எந்த அளவு துயரங்களை சந்திக்கின்றனர் என்ற கதைக் கருவை விதார்த் குடும்பத்துடன் இணைத்து மிக சுவாரசியமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன். 

ஒரு பின் தங்கிய கிராமத்திலிருந்து நன்றாக படிக்கும் மாணவன் அவன் குடும்பம் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனை படிக்க வைக்கின்றனர். அதற்காக அவர்கள் படும் அள்ளல்கள், துன்பங்கள் என வெறும் துயரங்களை மட்டும் காட்டி சீரியல் போல் படத்தை கொடுக்காமல் மனதுக்கு நெருக்கமாக எதார்த்தமான சினிமாவாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக முதல் பாதி மிகவும் யதார்த்தமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக நகர்ந்து இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவில் பயணம் செய்து இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிவடைந்து இருக்கிறது. 

தமிழக மக்கள் நீட் தேர்வை ஏன் எதிர்க்கின்றனர் என்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் அதற்குரிய நியாயத்தையும் செய்திருக்கிறது. ஒரு நுழைவுத் தேர்வால் எந்த அளவு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது திரைப்படம். அதே சமயம் நீட் தேர்வு அவசியமா இல்லையா என்ற விஷயத்தைத் தாண்டி அப்படி நுழைவுத் தேர்வு வைக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் எந்த அளவு மிகவும் தெளிவாகவும் அனைத்து மாணவர்களும் உபயோகப்படும்படியும் இருக்க வேண்டும் என்ற மையக்கருத்தை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் கொடுத்து அதையும் ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்தை கரை சேர்த்திருக்கிறது. 

படத்தின் நாயகன் விதார்த் ஏழை விவசாய குடும்பத்தின் அப்பாவாக அப்படியே கண்முன் வாழ்ந்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு பாடத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக தந்தைக்கும் மகனுக்குமான இவரது கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து கைதட்டல் பெற்று இருந்தாலும் அதை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என ஒற்றை கையில் தட்டி விடும்படியான ஒரு சிறப்பான நடிப்பை மிக நேர்த்தியாகவும் அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து தமிழின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் நடிகர் விதார்த். 

மகனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் வாணி போஜன் மிக மிகச் சிறப்பாக நடித்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்த்து இருக்கிறார். இவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. குறிப்பாக முதல் பாதியிலேயே இவரது கதாபாத்திரம் முடிந்து விடும்படி இருந்தாலும் தான் இருக்கும் வரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை மிக மிக சிறப்பாக செய்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் போலீஸ் ஆபீஸர் ரகுமான். முதல் பாதையில் போலீஸ் ஆகவும் இரண்டாம் பாதியில் வக்கீலாகவும் அவதாரம் எடுக்கும் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இவர் மாணவர்கள் மேல் காட்டும் கரிசனம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் ராமர் மனதில் பதிகிறார். அதேபோல் ரேகா நாயரும் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த முக்கிய கதாபாத்திரங்களும் அவரவர் வேலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் படத்திலேயே இவரது ஷார்ட் டிவிசன்ஸ் மற்றும் லைட்டிங் சிறப்பாக அமைந்திருக்கிறது. ராகவ் பிரசாத் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பட்த்தொகுப்பாளரும், கலை இயக்குநரும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் மற்றும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகவும், அதேசமயம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதில் இருக்கும் குளறுபடிகளால் எந்த அளவு இன்னல்கள் ஏற்படுகிறது என்ற உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது போன்ற நிதர்சனத்தை மிக யதார்த்தமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன். இதற்காகவே அஞ்சாமை படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். 

அஞ்சாமை - அவசியம்!

சார்ந்த செய்திகள்

Next Story

'சட்னி - சாம்பார்'  சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Chutney Sambar Series first look

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி + ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் 'மொழி' திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய  தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார்.  ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,  இந்த வெப் சீரிஸ் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதை மிகத்தெளிவாக சொல்லும்படி அமைந்துள்ளது.  போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில், அவரது அப்பாவி முகத்துடன்  அமர்ந்திருக்கிறார், அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப  மற்ற நடிகர்கள் அனைவரும் அருகில் இருக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.இந்தத் சீரிஸில் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். 'சட்னி-சாம்பார்' சீரிஸை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Next Story

மாபெரும் மதிப்பை பெறுகிறாரா? - ‘மகாராஜா’ விமர்சனம்!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Vijaysethupathi's maharaja movie review

சில ஆண்டுகளாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காத விஜய் சேதுபதி அதை மீட்டெடுக்க போராடி வருகிறார். படத்தில் விஜய் சேதுபதி இருந்தால் அந்தப் படம் வெற்றியும், அதுவே அது விஜய் சேதுபதி படம் என்றால் படம் தோல்வி அடைவதுமாய் ஒரு ட்ரெண்ட் வலம் வந்து கொண்டிருந்தது. இந்த வேளையில் சறுக்கல்களில் இருந்து மீண்டு எழுந்து மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்ப கோதாவில் மகாராஜாவாக குதித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த மஹாராஜா திரைப்படம் மகுடம் சூட்டியதா, இல்லையா?

காதில் அடிபட்டு கை கால்களில் வெட்டு காயங்களுடன் போலீஸ் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதி தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறார். போலீசோ லட்சுமி என்றால் யார் என்ன என்று கேட்க அதற்குப் பல விதங்களில் மழுப்பும் விஜய் சேதுபதி ஒரு வழியாக லட்சுமி யார் என்ற உண்மையை சொல்ல போலீஸோ இதற்கெல்லாம் கேஸ் கொடுக்க முடியாது எனத் தட்டிக் கழிக்கின்றனர். எப்படியாவது போலீசை இந்த வழக்கை விசாரிக்க செய்ய அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக விஜய் சேதுபதி சொல்ல போலீசும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கேசை கையில் எடுக்கிறது. யார் அந்த லட்சுமி..? விஜய் சேதுபதி ஏன் அந்த லட்சுமியை லஞ்சம் கொடுத்தாவது மீட்க வேண்டும் எனத் துடிக்கிறார்? உண்மையில் விஜய் சேதுபதிக்கு என்னவாயிற்று? அவரது காயங்களுக்கு யார் காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறார் இந்த மகாராஜா. 

சமீப காலங்களாக விஜய் சேதுபதிக்கு போதுமான வெற்றி கிடைக்காத இந்தச் சூழலில் தன்னுடைய பிளஸ் எதுவோ அதைப் பிரதானமாக வைத்துக் கொண்டு அதே சமயம் கதைக்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையான படத்தைக் கொடுத்து மீண்டும் கம்பேக் கொடுத்து வெற்றி அணையில் ஏறி இருக்கிறார் விஜய் சேதுபதி. நாம் ஏற்கெனவே பார்த்து பழகிய ஒரு சமூகத்துக்கு தேவையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதனைத் தனது சிறப்பான நான் லீனியர் திரைக்கதை மூலம் மிக சுவாரஸ்யமான படமாக கொடுத்து சூப்பர் ஹிட் படமாக இப்படத்தை கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். முதல் பாதி முழுவதும் மர்மமான முறையில் கதையை நகர்த்தி நக்கலும் நையாண்டியமாக சிரிக்க வைக்கும்படி பிளாக் காமெடி உடன் கதை நகர்ந்து இரண்டாம் பாதியில் நாம் எதற்கெல்லாம் சிரித்து ஏளனமாக இருந்தோமோ அதை எல்லாம் மிக சிறப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையோடு ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கும் பொழுது மிக மிக சீரியசான ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை இந்த மகாராஜா கொடுத்திருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதி நாம் எதிர்பாராத பல்வேறு ட்விஸ்டுகளை உள்ளடக்கி காட்சிக்கு காட்சி ஆச்சரியங்களையும் சுவாரசியத்தையும் கூட்டி முடிவில் நெகிழ்ச்சியான திரில்லர் படமாக படம் நிறைவடைந்து தியேட்டரில் கைத்தட்டல்களை பெற்றிருக்கிறது. விஜய் சேதுபதி கரியரிலேயே இது ஒரு சிறந்த படமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க கவனிக்க கூடிய ஒரு படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தில் ஆங்காங்கே பல்வேறு விதமான லாஜிக் மிஸ்டேக்குகள் பல இடங்களில் படர்ந்து காணப்பட்டாலும் அவை பெருமளவு அயற்சி ஏற்படாதவாறு இருப்பது படத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இருந்தும் அந்தச் சிறு சிறு குறைகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். 

Vijaysethupathi's maharaja movie review

விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பின் மூலம் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக கையாண்டு அதற்கு ஏற்றவாறு கதையும், திரைக்கதையும், அதற்கு உதவி செய்து படத்தையும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறது. இவருக்கும் போலீசுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்தது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாது உடன் நடித்த மற்ற நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்து படத்தை வெற்றி படமாக மாற்ற உதவி செய்துள்ளனர். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். ஆரம்பத்தில் பயமுறுத்தி இறுதிக் காட்சிகளில் நெகிழவும் செய்திருக்கிறார். போலீசாக நடித்திருக்கும் நட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நட்டி, அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அதைச் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு பக்கபலமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். 

Vijaysethupathi's maharaja movie review

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் தலை காட்டி இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் ஒரு நல்ல தேர்வு. சில காட்சிகளே வந்தாலும் கவனம் பெற்றுள்ளார். இதுவரை எந்தப் படத்திலும் ஏற்காத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சிங்கம் புலி, அதைச் சிறப்பாக செய்து இறுதி கட்ட காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு வெறுப்பை கொடுக்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகி மம்தா மோகன்தாஸ், அபிராமி மற்றும் திவ்யபாரதி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் பாரதிராஜா அனுபவ நடிப்பால் கவர்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவருமே அவரவர் வேலைகளை மிக மிக சிறப்பாக செய்து படத்தை கரை சேர்க்க பெருமளவு பங்களிப்பு கொடுத்துள்ளனர். 

படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், பின்னணி இசையைத் தனக்குக் கொடுத்த ஸ்பேஸை சிறப்பாக பயன்படுத்தி மிரட்டலாக கொடுத்திருக்கிறார் அஜனீஸ் லோகநாத். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு சத்தம் தேவையோ ஒரு திரில்லர் படத்துக்கான இசையை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் மற்றும் பொது ரசிகர்களுக்கும் திருப்திகரமான படமாக இந்த மகாராஜா மாறி இருக்கிறது. சமூகத்துக்கு தேவையான கதையைக் கையில் எடுத்து நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து ஹாலிவுட் படத்திற்கு நிகரான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதிலன் சாமிநாதன். மேலும், ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்து அனைத்து ரசிகர்களுக்கும் நிறைவான படமாக அமைந்திருக்கிறது. நாயகர்களை காட்டிலும் கன்டென்ட் தான் முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் நிரூபித்திருக்கிறது. 

 

மகாராஜா - மதிப்பு மிக்க ராஜா!