Skip to main content

மீண்டும் ஒரு ‘வக்கீல்’ சூர்யா படமா; பாடமா? -எதற்கும் துணிந்தவன் விமர்சனம்

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Again a ‘lawyer’ Surya film; Lesson? - Etharkum thuninthavan

 

சூரரைப் போற்று, ஜெய் பீம், நவரசா என ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகு தியேட்டர் பக்கம் வந்திருக்கும் சூர்யா; நவீன காலத்து கிராமத்துக் கதைகளை கலர்புல்லாக தரும் இயக்குநர் பாண்டிராஜ்; சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பு என மூன்று துருவங்களின் கூட்டணியாக பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறது படம்; எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கியதா என்றால் பெரிய ஆச்சரியக்குறி வைத்து அருகே சிறிய கேள்விக்குறியை வைக்கலாம்.

 

பரபரப்பாய் சமூகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிற காவல்துறை அதிகாரி, பள்ளி ஆசிரியர் மற்றும் கல்வித் தந்தை இன்னும் சிலர் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அவர்களைக் கொல்கிறவர் ஊரில் நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்த வழக்கறிஞர், ஏன் கொல்கிறார் என்பதே ப்ளாஷ்பேக் கதையின் ஆரம்பமும் முடிவும்.

 

இதுவரை தமிழ்சினிமா சொல்லாத கதை ஒன்றுமில்லை; யாருக்கோ எதோ ஒரு வகையில் செத்தவர்களால் கஷ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஹீரோ கொலை செய்திருக்கிறார் என்பதும் யூகிக்கக் கூடிய திரைக்கதைதான். ஆனால், பழைய கஞ்சியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பொறுப்புடன் பரிமாற முயற்சி எடுக்கப்பட்டிருப்பதுதான் பாராட்ட வைக்கிறது.

 

பொள்ளாச்சியில் பெண்களுக்கு அதிகார வர்க்கத்திலிருக்கும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளால் நடந்த பாலியல் கொடுமைகளை, அதன் பின்னணியில் நடந்த கொலைகளை மிரட்டல்களை, வீடியோ வெளியீட்டின் உளவியல் பிரச்சனைகளைக் கதைக்களமாக கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். கதையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வாங்கித் தரும் முயற்சியில் நேரடியாக வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பம் பாதிக்கப்படுகிறது; காலங்காலமாக சட்டத்தால் தண்டிக்க முடியாதவர்களைத் தர்மத்தின்படி நானே தண்டிக்கிறேன் எனக் களமிறங்கும் கதாநாயகர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் வக்கீல் கோட்டை கழட்டிவிட்டு வேட்டியைக்  கட்டிக்கொண்டு குற்றவாளிகளைக் கதையின் நாயகனும் தனியாளாக தண்டிக்க கிளம்புகிறார்.

 

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்று முழங்கிய ஜெய்பீம் வக்கீலாக இல்லாமல், தடம்புரண்டு தானே நீதி வழங்க கிளம்பி அங்கேயும் குடும்ப சென்டிமெண்ட் க்ளீசேவ் எல்லாம் வேறு செய்ய வைக்கிறார்கள். இயக்குநர் பாண்டியராஜ் படங்களுக்கே உரித்தான கிராம பின்னணியுடனான அறிமுகத்திற்கும் அதன் பழக்கவழக்கம், கலாச்சார விவரத்திற்கு இப்படத்திலும் பஞ்சமில்லை. அதேபோல காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என்கிற கமர்சியல் தன்மைகளுக்கான மெனக்கிடலிலும் எந்தக் குறையுமில்லை வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட்டுக்குள் இருக்கிறார் வினய். சத்யராஜ், சரண்யா, தேவதர்ஷினி, இளவரசன், திவ்யா துரைசாமி மற்றும் காமெடி பட்டாளங்கள் அவரவர் பாத்திரப்பணியை சிறப்புறச் செய்திருக்கிறார்கள்.

 

காவலன் SOS அப்ளிகேசன் பிரச்சாரம்; அம்மா சரண்யா ஆண்பிள்ளையை நான் எப்படி வளர்த்திருக்கிறேன், பெண் குழந்தைகளை எப்படி பார்க்க வேண்டுமென சொல்லி வளர்த்திருக்கிறேன் போன்ற வசனங்கள், தன் உடலை தனக்கே தெரியாமல் வீடியோ எடுத்தால் அது தன் தவறல்ல; எடுத்தவனின் தவறு என்று வசனங்கள் வழியே சமூக பாடமெடுப்பெல்லாம் அருமை; ஆனால் சினிமா காட்சி ஊடகம் அன்றோ?

 

இமானின் இசையில் பாடல்களில் உள்ளம் உருகுதய்யா மட்டும் மனதில் நிற்கிறது.

 

அடுத்த நிமிடம் பெண்களுக்கு எதோ ஒரு வகையில் சிக்கல் நெருக்கடி வரப்போகிறது என்று தெரிந்தும் சாகவாசமாக இருக்கிற நாயகனின் அலட்டல் இல்லாத தன்மை லாஜிக் ஓட்டை; பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திய கூட்டத்தினர் தண்டிக்கப்படுகிற கிளைமேக்ஸ் தான் நம்ப மறுக்கிற விசயமாய் இருக்கிறது. கமர்சியல் சினிமாவிற்குள் யதார்த்தமான சில விசயங்களையும் சமூக பொறுப்புடன் கொண்டுவர மெனக்கிடல் நடந்திருக்கிறது என புரிந்துகொள்ள முடிகிறது; நம்மால் முடியாத ஒன்றை நமது ஹீரோ செய்கிறானே என்று பார்வையாளர்களைக் கவர இறுதியில் ஹீரோயிசம் ஜெயிக்கிறது.

 

எதற்கும் துணிந்தவன் ஒரு வகையில் பாடம் தான்; கவனிக்கலாம், கவனத்தில் கொள்ளலாம்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.