Skip to main content

இன்னும் எத்தனை நாள் தமிழ் சினிமா போலீஸ் இப்படியே இருக்கும்?  100 - விமர்சனம்  

Published on 15/05/2019 | Edited on 15/05/2019
100

 

தமிழகத்தில் ஏதேனும் பரபரப்பான சென்சேஷனல் விஷயங்கள் நடக்கும்போது எப்படி அது பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை சில நாட்கள் பிடித்துக் கொள்ளுமோ அதேபோல் சினிமா டிஸ்கஷன் அறைகளையும் பிடித்துக்கொள்ளும். தொடர்ந்து அந்த கருவைச் சார்ந்த படங்கள் வெளிவருவதை பார்க்கலாம். அந்த வரிசையில் தற்போதைய தமிழ் சினிமாக்களின் கருப்பொருளாக இருப்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகள். எப்போதுமே பெண்களுக்கு எதிரான வன்முறை நிரம்பியிருக்கும் நம் சமூகத்தில், பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது அது எப்போதையும் விட அதிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அதன் வெளிப்பாடே சினிமா உட்பட அத்தனை ஊடகங்களிலும் அது பிரதிபலிப்பது. அப்படி இளம்பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக பயன்படுத்தும் ஒரு கும்பலை, தனியாளாய் ஒரு போலீஸ்காரன் பிடிக்கும் படம்தான் '100’. 

 

எஸ்.ஐ தேர்வெழுதிவிட்டு போஸ்டிங்கிற்காகக் காத்திருக்கும் இளைஞனாக அதர்வா. முறுக்கேறிய உடம்பும் நேர்கொண்ட பார்வையும் பக்கா. ஆனால் உடலில் இருக்கும் கச்சிதம் உடல்மொழியிலும் நடிப்பிலும் கொஞ்சம் குறைவுதான். இதற்கு முன்பு அதர்வா செய்த பல பாத்திரங்களின் சாயலிலேயேதான் சத்யா எனும் இந்த போலீஸ் கதாப்பாத்திரத்தையும் செய்துள்ளார். இதில் வேறுபாடு காட்டத்  துவங்குகையில்தான் அதர்வாவின் அத்தியாயம் தமிழ் சினிமாவில் துவங்கும். 

 

பொதுவாக ஒரு படத்தின் முதல் இருபது நிமிடங்கள்தான் பார்வையாளர்களை படத்திற்கு உள்ளே கொண்டுவர வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அப்படியே நேர்மாறாக, முதல் இருபது நிமிடங்கள்தான் பார்வையாளர்களை படத்தில் இருந்து அந்நியப்படுத்துகிறது. அதர்வாவின் இன்ட்ரோ, அதர்வா ஹன்சிகா காதல் உள்ளிட்ட காட்சிகள் எழுதப்பட்ட விதத்திலும் எடுக்கப்பட்ட விதத்திலும் எந்தவித மெனக்கிடலும் இல்லை. கதாப்பாத்திரங்களின் அறிமுகங்களைத் தவிர்த்து அந்தக் காட்சிகள் படத்திற்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை. அந்த சில காட்சிகளிலும் அதர்வாவின் நடிப்பிலும் அத்தனை செயற்கைத்தனம். அதிலும் படம்  முடிந்தவுடன் ‘இதுக்கு எதுக்கு ஹன்சிகா’ என ரசிகர்களே பேசி செல்கின்றனர். ஆனால் அதர்வா போலீஸ் ஆகும் காட்சியில் இருந்து படம் சூடுபிடிக்கத் துவங்குகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வேலைக்குச் செல்லும் அதர்வாவிற்குக் கொடுக்கப்படும் வேலையும், அந்த சூழலில் நடைபெறும் நகைச்சுவைகளும் சுவாரசியத்தை கூட்டுகின்றன. அந்த வேலையை வைத்தே அதன்பிறகான திரைக்கதையை கட்டமைத்திருப்பதும் நல்ல திரைக்கதை உத்திதான். ஒரு ஃபோன்கால் மூலம் தெரியவரும் ஆபத்தை நாயகன் எதிர்கொண்டு அதை தீர்ப்பது எனும் கதையை சில ஆங்கிலப் படங்களிலும் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களிலும் பார்த்திருந்தாலும், 100 சுவாரசியம் குறையாமலேயே எடுக்கப்பட்டுள்ளது. 

 

100

 

ஆனால் அதர்வா கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் காட்சியிலும் அதைத் தொடர்ந்து அவர் புலனாய்வு செய்யும் காட்சிகளிலும் எந்தவித புதுமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த காட்சி ஆரம்பித்தவுடன் பார்வையாளர்களே அதற்கான விடையை கண்டுபிடித்துவிட, அதர்வா அதை புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பதாக பெரும் பில்டப்புடன் காட்டுவது எந்தவித இம்பாக்ட்டையும் ஏற்படுத்தவில்லை. இயக்குனர் சாம் ஆன்டன் படத்தில் திருப்பங்களுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை, அதற்கு பின் இருக்கவேண்டிய லாஜிக்கிற்கு கொடுக்கவில்லை. ராதாரவி, ஹன்சிகாவின் தம்பியாக வரும் இளைஞன் இருவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளனர். யோகி பாபு சமீபத்திய தமிழ்ப்படங்களின் கட்டாய இணைப்பாகவே ஆகிவிட்டார். ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கவும் தவறவில்லை. சாம் சி.எஸ் இசையும், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும் படத்தின் மூடை செட் செய்யவும், அந்த பரபரப்பை தக்கவைக்கவும் உதவுகின்றன. படத்தொகுப்பாளர் ரூபன் கண்ணை மூடிக்கொண்டு முதல் இருபது நிமிடங்களில் கத்திரி போட்டிருக்கலாம்.  

 

பெண்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுவதும், குற்றவாளிகள் சரணடைவதும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, எதிர்பாராத வகையில் வரும் அந்த  இன்டர்வெல் ட்விஸ்ட்டும் படத்தின் மையக்கருவோடு அது இணைக்கப்பட்ட விதமும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்தக் கடத்தல் நெட்வொர்க்கின் மூளையாக செயல்படுபவர் யார் என்ற கேள்வியை நோக்கி நகரும் இரண்டாம் பாதியில், அந்த முடிச்சு அவிழும் விதமும் அதில் புகுத்தப்பட்டுள்ள ட்விஸ்ட்டும் அட்டகாசம். இவர்தான் குற்றவாளி என்று பார்வையாளர்கள் கண்டுபிடிக்கும்படி பல க்ளூக்களை கொடுத்து, அதற்கேற்ற வண்ணம் கதையை நகர்த்தி, பார்வையாளர்கள் இவன்தான் இவன்தான் என்று கைகாட்டும்போது அதில் ஒரு திருப்பம் வைப்பது மிக சுவாரசியமான திரைக்கதை உத்தி. அது இந்தப்  படத்தில் மிகச்சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

100

 

இருந்தாலும் அந்த பெண்கள் எத்தனை காலம் எங்கே வைக்கப்பட்டு இருந்தார்கள், யார் வைத்திருந்தார்கள், எப்படி யார் கண்ணிற்கும் படாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும், திடீர் திடீரென தோன்றும் அதர்வாவின் குடும்பம், பெரும்பாலான நேரங்களில் காணாமல் போகும் ஹன்சிகா, க்ளைமேக்ஸில் தொடர்ந்து இடம்பெறும் பேப்பர் கட்டிங்குகள் என ஒரு நிலையான சினிமா அனுபவம் கிடைக்காமல் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதியில் குற்றவாளியை சுட்டுக் கொல்லும் காட்சிக்கு ராதாரவியின் கதாப்பாத்திரத்தின் மூலம் ஒரு எமோஷனல் டச் கொடுத்திருந்தாலும், இன்னும் எத்தனை தமிழ் படங்கள் என்கவுண்டருக்கு ஆதரவாக வருமோ என்ற கேள்வியும் பயமும் எழுகிறது. என்கவுண்டர் என்பதற்கு ஒரு நாயகத்தன்மை கொடுப்பதையும், இவனுக்குலாம் இது வேணும் போன்ற எண்ணங்களை வளர்ப்பதையும் தவிர்த்து, என்கவுண்டர்களின் பின்னால் உள்ள அரசியல், மனித உரிமை பிரச்சினைகள் போன்ற சமூக அரசியலையும் தமிழ் சினிமாக்கள், முக்கியமாக தமிழ் போலீஸ் சினிமாக்கள் எப்போது பேசும் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து எழுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!