Skip to main content

‘காட்மேன்’ தொடர் சர்ச்சை... பிரபல ஓ.டி.டி. நிறுவனம் விளக்கம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

godman


'காட்மேன்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இணையத் தொடர், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த இணையத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்க, இளங்கோ தயாரித்துள்ளார். வருகின்ற 12ஆம் தேதி ஜீ நிறுவனத்தின் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
 

 
இந்தத் தொடரில் டேனியல் பாலாஜி உள்ளிட்ட சில பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். அண்மையில் இத்தொடரின் ட்ரைலர் வெளியானது. அதில் குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும், இயக்குனர், தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகாரளித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்டமாக ‘காட்மேன்’ தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது கலவரத்தை ஏற்படுத்துதல், பகையை ஊக்குவித்தல், வதந்தியைப் பரப்புதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
 


இதனிடையே இந்தத் தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் களத்தில் பொறுப்புள்ள முன்னணி தளமாக ஜீ குழுமம் செயல்படுகிறது. உள்ளடக்கங்களின் சுய தணிக்கைகளில் கடுமையான வழிகாட்டு முறைகளை இந்தத் தளம் பின்பற்றி வருகிறது. இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாகப் பல அம்சங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தி வருகிறது. முற்றிலுமாகத் தன் பார்வையாளர்களின் நலனுக்காக, ஆன்லைன் உள்ளடக்கங்களின் சுய தணிக்கை சட்டத்தில் முதலில் கையெழுத்திட்டவர்களில் ஜீ குழுமமும் ஒன்று.

எங்கள் சமீபத்திய தமிழ் தொடராக 'காட்மேன்' தொடர்பாக வந்த கருத்துகள் அடிப்படையில் அந்தத் தொடரின் வெளியீட்டை இந்தத் தருணத்தில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தத் தொடருக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ, ஜீ குழுமத்துக்கோ எந்த ஒரு மதத்தின் நம்பிக்கையையோ, சமூகத்தையே, தனி நபரின் நம்பிக்கையையோ காயப்படுத்தும் எண்ணமில்லை. தன் பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்காகப் பல மொழிகளில் சமூகத்தின் சிறப்பான அம்சங்களைப் பிரதிபலிக்கும் 100க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை ஜீ குழுமம் வழங்கி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் ஏமாற்றி 11 சவரன் நகையை கொள்ளையடித்த போலி மந்திரவாதி!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021
The magician who cheated in an innovative way and robbed the 11 pound necklace

 

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள காந்திரோடு பகுதியில் வசித்து வருபவர் சீதாபதி. இவரது மனைவி ராஜலட்சுமி(63). இவருக்கு உடல் வலி, கை-கால் வலி இருந்து வந்துள்ளது. இதற்காக இவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்படி இருந்தும் அவருக்கு கை-கால் வலி குறையவில்லை இதை அக்கம்பக்கத்தினரிடம் அவ்வப்போது கூறி புலம்பிக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மந்திரவாதி நபர் ஒருவர் வந்துள்ளார்.

 

அவர் ராஜலட்சுமியிடம் உங்களுக்கு தீராத கை-கால் வலி இருப்பதாகவும் அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியதோடு உங்கள் கணவர் தான் என்னை அனுப்பி வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி அந்த மந்திரவாதியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டின் பூஜை அறை முன்பு மந்திரவாதியை அமரவைத்துள்ளார். அப்போது மந்திரவாதி பூஜைக்கு தேவையான சாமான்களை சேகரித்து எடுத்துக்கொண்டு வருமாறு கூறியுள்ளார். பூஜை செய்யும்போது அதில் தங்க நகை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே ராஜலட்சுமி தன் கழுத்தில் இருந்த மூன்று தங்கச் செயின்களை கழற்றி கொடுத்துள்ளார்.

 

11 சவரன் தங்கச் செயின்களை வாங்கிய மந்திரவாதி பூஜை செய்ய வைத்திருந்த தண்ணீர் சொம்புக்குள் போட்டு விட்டு ஓம்,க்ரீம்,க்ரீம் என்று ராஜலட்சுமிக்கு புரியாத பாஷையில் ஏதேதோ மந்திரங்களை சொல்லி பூஜை செய்துள்ளார். ராஜலட்சுமி மிகவும் பவ்யமாக அமர்ந்து கொண்டார். பூஜை முடிந்ததும் விபூதி பிரசாதம் வாங்குவதற்காக ராஜலட்சுமியை குளியலறைக்கு சென்று கை கால்களை கழுவி சுத்தம் செய்துகொண்டு வருமாறு கூறியுள்ளார். ராஜலட்சுமியும் அந்த மந்திரவாதி கூறியபடி கை, கால்களை கழுவி கொண்டிருக்கும் போதே அந்த மந்திரவாதி ராஜலட்சுமியை உள்ளே வைத்து குளியலறை கதவை வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு ராஜலட்சுமி கழற்றி கொடுத்த நகையை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவாகிவிட்டார்.

 

கைகால்களை சுத்தம் செய்துகொண்டு குளியலறை கதவை திறக்க ராஜலட்சுமி முயற்சி செய்யும்போது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குளியலறையிலிருந்து கத்தி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து பாத்ரூம் கதவை திறக்க செய்துள்ளார். அதன் பிறகே தனது நகையை அந்த போலி மந்திரவாதி பறித்துச் சென்றது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ராஜலட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கை-கால் வலிக்கு மந்திரம் போடுவதாக கூறி நகை பரித்து சென்ற போலி மந்திரவாதியை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த நூதன கொள்ளை சம்பவம் கள்ளக்குறிச்சி நகர மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Next Story

‘காட்மேன்’ இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

godman tv series direstor and producer chennai court order


'காட்மேன்' இணையத்தள தொடரை இயக்கிய பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


ஜீ 5 என்ற யூ டியூப் சேனலில், காட்மேன் என்ற இணையத்தள தொடரின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது, பிராமணர்களின் மத ரீதியிலான உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காட்மேன் தொடர் தயாரிப்பு நிறுவன பிரதிநிதி இளங்கோ, இயக்குனர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
 

 


இந்த மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியுமான செந்தில் குமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தக் குறிப்பிட்ட சமுதாயத்தினரையும், நம்பிக்கையையும் குலைக்கும் வகையில் இந்தத் தொடர் எடுக்கப்படவில்லை எனவும், சமுதாயத்தில் சாமியார் எனக் கூறிக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றியே இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். 

மேலும், குறிப்பிட்ட அந்த டீஸர் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுத் தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இந்த வழக்கில் டீஸரின் வீடியோ பதிவு ஏற்கனவே காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் இருந்து டீஸர் நீக்கப்பட்டுள்ளது என்பதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

http://onelink.to/nknapp


மேலும், எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில், 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்குத் தேவைப்படும் பட்சத்தில் புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கக் கூடாது எனவும், தலைமறைவாகக் கூடாது எனவும் நிபந்தனை விதித்தார்.

கருத்துகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது என நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.