Skip to main content

“இந்த நோய் ஏற்படுத்தும் வலியை நான் அறிவேன்” -யுவராஜ் சிங்! 

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
yuvraj singh

 

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 9ஆம் தேதி கடும் மூச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

 

அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ காரணங்களுக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக நேற்று தன் சமூக வலைதள பக்கங்களில் சஞ்சய் தத் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சஞ்சய் தத் நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அதனை தொடர்ந்து பலரும் சஞ்சய் தத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் போராடி குணமடைந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இதுகுறித்து தெரிவிக்கையில், “நீங்கள் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்துள்ளீர்கள் சஞ்சய் தத், இனியும் அப்படியே இருப்பீர்கள். இந்த நோய் ஏற்படுத்தும் வலியை நான் அறிவேன். ஆனால், நீங்கள் வலிமையானவர் என்பதையும் நான் அறிவேன். இந்த கடினமான கட்டத்தை நீங்கள் கடப்பீர்கள். நீங்கள் விரைவில் குணமடைய என்னுடைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

இம்மாத இறுதியில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஒரே அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

VIRU YUVI

 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல்  சீசன், வரும் 20 ஆம் தேதி ஓமன் நாட்டில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் சீசனில் இந்தியா சார்பாக ஒரு அணியும், ஆசியா சார்பாக ஒரு அணியும், பிற நாடுகளை சேர்ந்த வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியும் பங்கேற்கவுள்ளன.

 

இந்த முதல் சீசனில், இந்திய சார்பாக பங்கேற்கும் அணிக்கு இந்திய மகாராஜா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணிக்காக இந்திய ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களைத் தவிர இந்திய மகாராஜா அணியில், இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, மன்பிரீத் கோனி, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், முனாஃப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா மற்றும் அமித் பண்டாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அதேபோல் ஆசியா சார்பாக களமிறங்கவுள்ள அணிக்கு ஆசியா லயன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் சோயிப் அக்தர், ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதரனா, திலகரத்ன தில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா உல்- முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப் மற்றும் உமர் குல் ஆகிய இலங்கை பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். பிற நாடுகளை சேர்ந்த ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் பெயரும், அதில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.