Skip to main content

மிஷ்கின் படத்தில் நடித்தது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

vijaysethupathi

 

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிசாசு 2’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதையடுத்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், "பல நேர்காணல்களில் குரோசோவாவுடன் பத்து வருடம் டிராவல் பண்ணினேன் என்று மிஷ்கின் சொல்லியிருப்பார். இவர் குரோசோவா படம்தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ண முடியும் என்று யோசிப்பேன். திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு அவர் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் குரோசோவோ - மிஷ்கின் இடையேயானது. ‘சைக்கோ’ படம் பார்த்த பிறகு அவரை சந்தித்தேன். அந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் குரோசோவாவுடன் எவ்வாறு பயணப்பட்டிருப்பார் என்பதை நான் உணர்ந்தேன்.

 

உண்மையிலே 'சைக்கோ’ படம் பார்த்து பிரம்மித்து போனேன். படம் மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் கதை சொன்னது. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மிஷ்கினை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தேன். அப்போது சந்திக்கலாமா என்றதும், 'வா கண்ணம்மா' என்று அழைத்தார். அந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. அப்போது 'பிசாசு 2' கதையை சுருக்கமாகச் சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதைச் சொல்லும்போது சினிமா கலைஞனாக பெருமிதம் அடைந்தேன். நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம் என்றேன். எனவே ‘பிசாசு 2’ படத்தில் பிரத்யேகமாக ஒரு சிறிய கதாபாத்திரத்தை எனக்காக உருவாக்கியுள்ளார்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியுடன் மோத ஜெயராமை தேர்வு செய்த மிஷ்கின்?

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

jayaram to play villain in vijay sethupathi, mysskin movie

 

விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் கமிட்டாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதன் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.  

 

இப்படத்தை எஸ். தாணு தயாரிப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இப்படத்தின் வில்லனை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயராம் தற்போது விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் மோதவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

ஏற்கனவே ஆண்ட்ரியா நடிப்பில் மிஸ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மிஷ்கினின் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Vijay fans are angry with Mysskin speech about leo update

 

இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது மேடையில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் டைனோசர்ஸ் பட இசை வெளியீட்டு விழாவில், "10 மணி ஆச்சு... எல்லாரும் போய் தண்ணி அடிங்க., சிகரெட் அடிங்க, தூங்குங்க" என மேடையில் பேசியது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் விஜய் குறித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவர் பேசுகையில், "லியோ பட இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடக்குது. படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். நிச்சயம் படம் வெற்றியடையும்" என்றார். 

 

இதில் விஜய்யை அவன் இவன் என்று சொல்லியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மிஷ்கினை கிண்டல் செய்தும் பொது இடத்தில் மரியாதையாக பேச வேண்டியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் சிறிய வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.