‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிசாசு 2’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதையடுத்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், "பல நேர்காணல்களில் குரோசோவாவுடன் பத்து வருடம் டிராவல் பண்ணினேன் என்று மிஷ்கின் சொல்லியிருப்பார். இவர் குரோசோவா படம்தானே பார்த்திருப்பார். எப்படி டிராவல் பண்ண முடியும் என்று யோசிப்பேன். திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு அவர் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் குரோசோவோ - மிஷ்கின் இடையேயானது. ‘சைக்கோ’ படம் பார்த்த பிறகு அவரை சந்தித்தேன். அந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் குரோசோவாவுடன் எவ்வாறு பயணப்பட்டிருப்பார் என்பதை நான் உணர்ந்தேன்.
உண்மையிலே 'சைக்கோ’ படம் பார்த்து பிரம்மித்து போனேன். படம் மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஷாட்டும் கதை சொன்னது. படம் பார்த்துவிட்டு இயக்குநர் மிஷ்கினை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தேன். அப்போது சந்திக்கலாமா என்றதும், 'வா கண்ணம்மா' என்று அழைத்தார். அந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. அப்போது 'பிசாசு 2' கதையை சுருக்கமாகச் சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதைச் சொல்லும்போது சினிமா கலைஞனாக பெருமிதம் அடைந்தேன். நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம் என்றேன். எனவே ‘பிசாசு 2’ படத்தில் பிரத்யேகமாக ஒரு சிறிய கதாபாத்திரத்தை எனக்காக உருவாக்கியுள்ளார்" எனக் கூறினார்.