Skip to main content

'சமூக இடைவெளி என்பது மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது' - விஜய் மில்டன் 

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ள நிலையில் இந்தியாவில் இதன் காரணமாக 21 நாட்கள் 144 தடை உத்தரவு தற்போது அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் விஜய் மில்டன் சமூக விலகல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

bbkb

 

 

''சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும், சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதானென்று நினைக்க ஆரம்பித்து விட்டோம் ஏற்கனவே கயிறு கட்டியவன் கட்டாதவன் ம..பிடுங்கியவன் பிடுங்காதவன் என வட்டம் போட்டுக்கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம். சகமனிதர்களை ஏன் நண்பர்களைக் கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அச்சமாக இருக்கிறது. இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச் செல்வதுதான் social responsibility என அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஸ் கெட்டப் - விஜய் மில்டன் இயக்கத்தில் ஷாம்

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

vijay miton new movie with shaam

 

தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், பரத் நடிப்பில் வெளியான 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இதையடுத்து 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலி சோடா 2' உள்ளிட்ட படங்களை இயக்கினார். 

 

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

 

இந்த நிலையில், விஜய் மில்டன் இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஷாம் ஹீரோவாக நடிப்பதாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஷாம் மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான ஷாம் லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்திருந்தார்.

 

 

Next Story

விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

The film crew has released the new update of Vijay Antony movie

 

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிற படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். 'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது. 

 

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், கடந்த 2014ஆம் ஆண்டு நிர்மல் குமார் - விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'சலீம்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.