கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு 400 சதவீதம் அளவிற்கு வணிகத்துறை அபராதம் விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விஜய், ஏற்கனவே நுழைவு வரி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால்தான் இந்த தாமதம் ஏற்பட்டதாதாகவும் , நுழைவு வரி செலுத்திய நிலையில் அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்த உள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அபராதம் விதிப்பது தொடர்பாக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்ததுடன், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறையான கருத்துக்களை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.