Skip to main content

பிரபல நடிகையைக் கொடூரமாகக் கொன்று ஆற்றில் வீசிய மகன் - வெளிவந்த பரபரப்பு சம்பவம்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Veteran TV actress Veena Kapoor passed away case

 

இந்தியில் பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தவர் நடிகை வீணா கபூர். மேலும், சில திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 6 ஆம் தேதி இறந்துள்ளார். வீணா கபூருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். மற்றொரு மகன் சச்சின் என்பவர் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீணா கபூரின் இரண்டாவது மகன் சச்சின் தனது தாயுடன் மும்பை ஜூஹூ பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

 

கடந்த 6 ஆம் தேதி அமெரிக்காவில் வசிக்கும் மூத்த மகன் வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார். போனை யாருமே எடுக்கவில்லை. அதனால் உறவினருக்குச் சொல்லி, உடனே வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி கோரியுள்ளார். உறவினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இது குறித்து போலீசில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வீணா கபூரின் இரண்டாவது மகன் சச்சின் கபூரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் 74 வயதான நடிகை வீணா கபூரை 43 வயதான அவரது மகன் சச்சின் கபூர் பேஸ்பால் பேட்டால் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், நடிகை வீணா கபூருக்கு ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்து இருந்துள்ளதாகவும், அதை சச்சின் கேட்டதற்கு வீணா கபூர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், அதன் காரணமாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக சச்சின் கபூர், வீணா கபூரை கொன்றதாகவும், உடலை வீட்டின் உதவியாளர் லாலு குமார் மண்டல் என்பவரின் உதவியோடு ஆற்றில் வீசியதாகவும் தெரியவந்துள்ளது. 

 

இந்நிலையில், வீணா கபூரின் இரண்டாவது மகன் சச்சின் கபூர் மற்றும் வீட்டின் உதவியாளர் லாலு குமார் மண்டல் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்