venkat prabhu about manjummel boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தைத்தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடல் ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 நாட்களில் ரூ. 80 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால் இப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவே மாறியிருக்கிறது. இப்படத்தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இப்படம் குறித்து வெங்கட் பிரபு பேசியுள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜெ.பேபி படச் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மேடையில் பேசிய வெங்கட் பிரபு, “இப்ப இருக்கிற சூழ் நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை கொண்டாடிட்டு இருக்கோம். வழக்கமான ஹீரோ, ஹீரோயின் படங்கள் பண்ணிகிட்டு இருக்கிற சமயங்களில் ஹீரோயினே இல்லாமபசங்களை வைத்து ஒரு படம். அது நம்ம தமிழ்நாட்டில் தமிழ் படங்களை விட பெரிசா ஓடிக்கிட்டு இருக்கு. அது நமக்கு வெறும் மொழி முக்கியமில்லை. கலை மட்டும் தான் முக்கியம் என்பதை சொல்கிறது” என்றார்.