Skip to main content

"அந்தக் கதைக்கு வைத்த தலைப்பு" - கார்த்தி பட டைட்டில் குறித்து ரகசியம் பகிர்ந்த வசந்த பாலன்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

vasantha balan post about karthi in japan movie title

 

இந்த ஆண்டு 'விருமன், 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' என அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் 'பொன்னியின் செல்வன்' ரூ.430 கோடியும் மற்றும் 'சர்தார்' படம் ரூ.100 கோடியும் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இதனைத் தொடர்ந்து தனது 25வது பட அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்க படத்திற்கு 'ஜப்பான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். 

 

இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் 'ஜப்பான்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்க இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பது, "நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம். பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்கவில்லை. 

 

இப்போதும் அவ்வப்பொழுது அந்தப் படத்தைப் பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடுவார். அந்தக் கதைக்கு வைத்த தலைப்பு. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே... அது மிகப் பெரியது. இதை விட நல்ல தலைப்பைக் காலம் நம் கைகளில் தரலாம். ஜப்பான் வெல்லட்டும். இயக்குநர் ராஜு முருகனுக்கும் கார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.